இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 16 மே, 2020

முயற்சி திருவினை ஆக்கும்

முடியாது என்பதன் முடிவில்
உதடுகள் மட்டுமல்ல,
உறவுகளும் ஒட்டாது.
முடியும் என முயன்று பார்,
பத்தாம் கிரகத்திலிருந்தும் - உனக்கு
பாராட்டு மடல் வரும்!

மஞ்சள் வண்டி

வீட்டு வாசலில் பள்ளிக்கூடம்
அத்தையும், சித்தியும் ஆசிரியர்கள்
விழாக்கோலம் கொள்ளும் விளையாட்டு வேளை
விளையாடிக் கடக்கும் பாடத்தேர்வுகள்
ஆரவார்மின்றி அறிவூட்டிய அரசுப் பள்ளிக்கு
ஆளின்மையால் பூட்டிட்டுவிட்டு
பால் மணம் மாறா பிஞ்சுகளை
விதவிதமான சீருடைக்குள் திணித்து,
வரிசைகட்டி வரும் மஞ்சள் வண்டிக்குள்
அடைத்து மிரட்டுகிறது கிராமத்து நாகரிகம்.

குழாயடி மருத்துவம்


வரிசை கட்டி நின்ற குடங்கள்
முட்டி மோதி குரல் எழுப்ப,
கண்களும் கைகளும்
கடப்போர் பற்றிக் கதை பேச,
மண்ணை வாரியும், சொல்லை வீசியும்
சண்டை சச்சரவுகள் ஓயாது தொடர்ந்திட,
கண்ணீர், புன்னகை, ஆத்திரம், அழுகை
அத்தனையும் தீர்க்கவென
நாளும் ஒரு கோலம் கொள்ளும்
தெருக் குழாயடிகள் காணாமல் போனதால்...
இரத்த அழுத்தத்திற்கும்
மன அழுத்தத்திற்கும்
மாத்திரைகளை விழுங்குகிறாள் என் அன்னை.

கண்கட்டு

ஆரஞ்சு மிட்டாய்,
தேன் மிட்டாய்,
சூட மிட்டாய்,
இலந்தைப்பழ மிட்டாய்,
பூஸ்ட் மிட்டாய்...
சுவை மட்டுமே அறிந்து
நான் சுவைத்த இவற்றை
சுகாதார காரணம் காட்டி
என் மகளின் கண்ணிலும் காட்டாமல்
அதிவேகமாய்க் கடக்கிறேன்
என் பள்ளி அருகே தெருவோரக் கடையை...

காளை

                                                காளை


ஈஸ்வரனுக்கு வீட்டில் காலடி எடுத்து வைக்கவே சங்கடமாக இருந்தது. வேலை முடிந்து வெகுநேரம் கழித்தே வீட்டிற்கு வந்தான். வேகமாய், சத்தம் கக்கிக் கொண்டே வரும் அவனது புல்லட் ஓசை வீட்டை நெருங்கும் போது மஞ்சள் முகத்தோடு வாசலில் வந்து சிhpக்கும் அம்மா காமாட்சியை இன்று காணவில்லை. காலணிகளைக் கழற்றி எறியும் வரையும் அவள் எட்டிப்பார்க்கவே இல்லை. அம்மாவும் டீவியப் பார்த்திருக்குமோ? இதை யோசிக்கும்போதே ஈஸ்வருக்கு வயிறெல்லாம் நடுங்கத் தொடங்கியது. இனி நின்று கொண்டே இருந்து பயனில்லை. வேறு வழியே இல்லை என மனதிற்குள் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு மெல்ல எட்டிப்பார்த்தான். ஒரு மூலையில் கிடந்த வயர் கட்டிலில் அம்மாவும் அப்பாவும் எதையோ தொலைத்ததைப் போல அமர்ந்திருந்தனர். அப்பத்தா மட்டும் கீழே உட்கார்ந்து செல்லத்தில் வெற்றிலையைப் போட்டு இடித்துக் கொண்டிருந்தது. எவ்வளவு நேரம்தான் நிற்பது? சரிஉள்ளே போகலாம் என காலை எடுத்து வீட்டிற்குள் வைத்ததுதான் தாமதம் வேமாய் பறந்து வந்த அப்பத்தாவின் கைத்தடிக் கம்பு சட்டென ஒலியெழுப்பி அவன் காலடியில் விழுந்தது. அதிர்ந்துபோய் நின்றுவிட்டான். ஈஸ்வரன் வருவதை அறியாது வருத்தத்தில் ஆழ்ந்திருந்த அப்பாவும், அம்மாவும் அப்பத்தாவின் தடி எழுப்பிய சத்தத்தில் சுதாரித்து எழுந்தனர். அப்பாவின் பார்வை கொட்டிய நெருப்பில் பற்றிய சறுகாய் தன்னை உணர்ந்தான் ஈஸ்வரன்.
“ஏன் ஐயா! புடிச்சு உத்தியோகத்துக்குப் போயிட்டா, பழசு எல்லாம் மறந்து போகுமோ? அங்கின இருக்க போட்டாவப் பாருங்க, எங்க ஐயா பக்கத்துல நிக்கிற காளையப் பாரும். அது நம்ம குலசாமின்னுட்டுத் தொpயாதா? உங்க அண்ணன் காளைய அடக்கப்போயிதான் ஒரே அடியாப் போனாரு. ஆனா, அதுக்காக நான் என்னைக்காவது துளி கண்ணீரு சிந்திருப்பேனா? என் ராசா வீரனாப் போய் சேந்தான்னுப் பொருமையா, கவுரதையா மீசைய முறுக்கிப்பேன். ஏன்னா காளை நம்ம சாமிப்பு. அதெல்லாம் மறந்து போச்சோ? ஏன் மூனு வருசத்துக்கு முன்னாடி இந்த காக்கி உடுப்பப் போடுறதுக்கு முன்னாடி பொpய புடியாளா இருந்தவந்தானே நீ? இப்ப எல்லம் மறந்து போச்சோ?” அப்பா கேட்கக் கேட்க விழி பிதுங்கி நின்ற ஈஸ்வரன் மெல்லக் குரல் எடுத்து, “இல்லப்பா… அது வந்து… சட்டப்படி….” வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறிய மகனைப் பார்த்த தந்தை கோபம் அடங்காதக் குரலோடு, “நிறுத்துப்பு. உங்க காரணம் ஒன்னுந் தேவையில்ல. படிச்சிட்டா, எல்லாம் பொpயாளா ஆயிடுறீக. புடிச்சு நம்ம குடிய உயர்த்துவீகன்னு நம்பித்தான் படிக்க வச்சு வேலைக்கு அனுப்புறோம். ஆனா வேலைக்குப் போனதும் எல்லாம் மறந்திடுது. குடும்ப வழக்கம் என்ன? பாரம்பரியம் என்ன? எல்லாங் காத்தோட போயிடுது.
“ஏன் எங்க மூத்தவரு கதை என்னாச்சு? கஷ்டப்பட்டுப் படிக்க வச்சு ஒத்த மகன ஆளாக்க நெனச்சாரு. சோறு போடுற புஞ்சைய வித்துப் படிக்க வச்சாரு. படிச்சதும் அவனுக்குப் பவுசு வந்துருச்சு. வீட்டுக் குலசாமியா கம்பீரமா நின்னுட்டுருந்த காளைக்கு சோறுபோட மடிச்சான். மூத்தவரும்  ஜில்லாவுக்கே பிடிபடாத மாடுன்ன வாசி அத ஊரூராக் கூட்டிப்போயி வெளாடவச்சு அதுக்குண்டான மருவாதையால காளையக் காப்பாத்திக்கிட்டு இருந்தாரு. அதுலையும் மண்ணப் போட இந்த பாவிப்பய கவுரமண்டு சட்டம் போட்டுச்சு. நம்ம காளைய நாம் அடைஞ்சு விளையாடுறதும், கட்டி அனைச்சு அதோட கொஞ்சுறதும் தப்புன்னு சொல்லி உத்தரவு போட்டுச்சு. காளையோட வௌயாடுறது நமக்கும் அதுக்குமான சொந்தத்தக் கொண்டாடுறதுன்னுப் புரியாம ஏதோ ஊரு பேரு தொpயாதவனெல்லாம் வந்து கேஷு கொடுத்தான். அத்தோட எங்கண்ணன் மனசொடஞ்சு போயிட்டாரு. ராசாவாட்டம் ஊட்டி வளத்தக் காளைக்கு வக்கப்புல்லு போடக் கூட முடியாம நின்னாரு. இதுதான் சாக்குன்னு மாட்டக் கொண்டு சந்தையில வித்துட்டு வந்துட்டது எங்கண்ணம் பெத்த தாpசு. ஐயோ! எஞ்சாமி போச்சேன்னு யாருக்கிட்டயும் பேசாம, திங்காம உங்காம கெடந்து அந்த கொறவட்டுலயே மூனான்னாலு மூச்சடங்கிப் பேனாரு.
“இதையெல்லாம் பாத்துத்தான் என்னால ஆகாத காலம் வந்தாலும் எஞ்சாமியக் காப்பத்த உங்கக்கிட்டக் கை நீட்டக் கூடாதுன்னுட்டு, முட்டித் தேய அந்த காஞ்சக்காட்ட உழுது, என்னாலான வரும்படியப் பாக்குறேன். புரிஞ்சதாப்பு. உங்கக்கிட்ட நாங்க காசுபணங் கேக்கல. ஆனா எம்ம மருவாதையக் கெடுத்துப்புடாத. எங்கப்பு தாங்காத்தக் காளை, சாமிக்கிட்டப் போனதும், அதுக்குச் செல வச்சு வௌக்குப் பொட்டு சாமியா கும்பிட்டாரு. ஏங்கண்ணன் காளைய வித்துச் சோறுதிங்கப் பொறுக்காம, அத கசாப்புக்கடையில கறியாக்கு முன்ன தன் மூச்சவிட்டாரு. அவுக வழியிலதான் நான் மாடா உழைச்சு எங்காளைய சாமியாக் கும்புடுறேன். ஆனா, எம்பரம்பரையில வந்த நீ கையெடுத்தக் கும்புட வேண்டிய சாமிய கம்பெடுத்து அடிச்சு அசிங்கப்படுத்திட்ட. காலையிலயிருந்து டீவியில அதப்பாத்து ஊரே எங்கிட்ட வந்து எளவு கேக்குற மாதிரி கேக்குது. ஊம்மப் பாக்கவே எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது. எம்மூஞ்சிலயே முழிக்காதீரும். அப்புறம் அப்பம்புள்ளைங்கிறது இல்லாமப் போயிடும்.” தன் முகத்தையேப் பார்க்காமல் எங்கோ பார்த்துக் கொண்டு கோபத்தை வார்த்தைகளாய்க் கொட்டிவிட்டு புறவாசல் பக்கம் போன அப்பாவைப் பார்த்துக் கொண்டே நின்ற ஈஸ்வரன் அப்படியே வெளியே போய் திண்ணையில் அமர்ந்து தூணோரமாய் சாய்ந்து கொண்டான்.
காலையில் நடந்ததெல்லாம் அவன் கண்முன் படமாக ஓடியது. நம் பாரம்பாரிய விளையாட்டான சல்லிக்கட்டை விளையாடக் கூடாது எனவும், அதில் விலங்குகள் துன்புறுத்தப்படுகின்றன என்றும் கூறி எங்கிருந்தோ வந்தவன் நீதிமன்றத்தில் போய் தடை வாங்கினான். இந்தப் பிரச்சனையை மையமாக வைத்து மூன்று ஆண்டுகளாய் அரசியல் செய்து விளையாடின கட்சிகள். ஆனால் தீர்வு ஒன்றும் கிடைப்பதாய்த் தெரியவில்லை. இனி இந்த ஓட்டு வியாபாரிகளை நம்பி பயனில்லை என்று உணர்ந்த ஒவ்வொரு தமிழனும் வீதிக்கு வந்து போராடினான். அந்தப் போராட்டத்தின் நியாயம் ஈஸ்வரனுக்குப் புரியாமலில்லை. ஆனால் ஒரு காவல்துறைப் பணியாளராகத் தன் அதிகாரிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டிய கட்டாயம் அவனுக்கு. போராட்டம் தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ளும் கூட்டத்தோடு ஒருவனாய் நின்றான் ஈஸ்வரன். காலை பத்துமணி இருக்கும். ஒரு காளைக் கூட்டத்தோடு போராட்டத்திற்கு ஊர்வலமாய் வந்தனர் இளைஞர்கள் சிலர். காளை மிரண்டு ஓடி, அதை யாரும் பிடித்து இழுத்தால் கூட சட்டத்தை மீறியதாய் அரசாங்கத்தின் மீது கேள்வி வந்துவிடும் எனப் பயந்த மேலிடம் மேல் அதிகாரியிடம் காரசாரமாய் பேச, அவர் அந்தக் கோபத்தைக்  காவலர்கள் மீது கொட்டினார். காளையோடு சேர்த்து அந்த இளைஞர்களைக் கைது செய்ய உத்தரவு பரந்தது. கடமையே கண்ணாகி அந்தக் கூட்டத்தின் மீது பாய்ந்தனர் காவலர்கள். அந்த இடமே கலவர பூமியானது. மிரண்ட மாடு இடத்தைவிட்டு அசைய மறுத்து முரண்டு பிடிக்க, மேலதிகாரியின் அதட்டல் காதில் குடைச்சல் கொடுக்க, அந்தக் கம்பீரமான காளையின் பின்புறத்தில் தன் கட்டுப்பாட்டையும் மீறி ஓங்கி ஒரு அடி வைத்தது அவனது லத்தி. அது தடமாய்ப் பதிய, வலியில் அம்மா… என காளை குரலெடுத்துக் கத்த, நிகழ்ந்த அனைத்தையும் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்ப, ஈஸ்வரனின் இரக்கமற்ற செயல் அன்றைய விவாதப் பொருளானது. தன் செயலுக்காய் தன்னையே நொந்து கொண்டவனாய் நிகழ்ந்தவற்றை அசைபோட்டுக் கொண்டே தூணோடு தூணாய் இருந்த ஈஸ்வரனை வீட்டின் அருகில் உள்ள கொட்டத்தில் கட்டிப்போடப்பட்டிருந்த மாயனின் குரல் சுயநினைவிற்கு வரச்செய்தது.
…………………………………………………………… 
மாயனுக்குத் தண்ணி காட்டி, அதன் முகத்தோடு முகம் புதைத்துப் பிராயச்சித்தம் கேட்ட மகனின் கண்ணீரை ஜன்னல் வழியாப் பார்த்துக் கண்கலங்கினாள் காமாட்சி. அவளின் கலங்கிய கண்களுக்கு இடையில் மங்கலாய்த் தெரிந்தன திண்ணையில் கழற்றி வைக்கப்பட்டிருந்த ஈஸ்வரனின் தொப்பியும், காக்கிச் சட்டையும்.

புதிய பாஞ்சாலி ( பாகம் - 2)

                                           புதிய பாஞ்சாலி                                                  பாகம் - 2


பாத்திரங்கள்: பாஞ்சாலி, துரியோதனன், துச்சாதனன், சகுனி, தர்மன், பீமன், அர்ச்சுணன், நகுலன், சகாதேவன், குந்தி, பீஷ்மர், திருதிராட்டிரர், கர்ணன், கண்ணன்.

துரியோதனன்:
                             துச்சாதனா இந்தத் திமிர் பிடித்த பாஞ்சாலியின் துகிலை உறிந்து என் தொடையில் உட்கார வைப்போம். நிறைந்த அவையில் அவளை அவமானம் அடையச் செய்வோம். ஒரு பெண் ஐந்து ஆண்களுடன் வாழ்கிறாளே. வெட்கம் கெட்டவள். ஆனால் உத்தமி போல என்னை அலட்சியம் செய்கிறாள். என்ன திமிர் இருக்கும் இவளுக்கு. ம்ம்… ஆகட்டும்.

துச்சாதனன்: இதோ இந்தத் தீமையின் உருவான பாஞ்சாலியின் ஆடைகளைக் களைந்து அவளையும் அவளது கணவர்களையும் கூனிக் குறுகச் செய்கிறேன். இரசித்துப் பாருங்கள் அண்ணா! இந்த அரங்கேற்றத்தை.

கர்ணன்: வேண்டாம் துச்சாதனா! நிறுத்துச் சொல் துhpயோதனா இந்த அவலத்தை. அவள் ஒரு பெண். நம் வீரத்தை இந்த பஞ்சபாண்டவர்களிடம் காட்டுவோம்.

துரியோதனன்: நீ எனக்கு அறிவுரை கூறாதே நண்பா! இது இவளுக்குத் தேவையானதுதான். இது என் முடிவு. இதில் தலையிடாதே.

துச்சாதனன்: (பாஞ்சாலியை நோக்கி) ஏய்! பாஞ்சாலியே! ஒன்றுக்கு ஐந்து ஆண்மகன்களை கனவானாய் கொண்டவளே! இப்போது உன்னை உன் மானத்தை காக்க எந்த ஆடவன் வருகிறான் எனப் பார்ப்போம்.

பீமன்: வேண்டாம் துச்சாதனா! அவள் உனக்கு அண்ணியாவாள். இந்த குடும்பத்தின் சொத்து அவள். அவளைத் தீண்டாதே. பின் நான் உன்னை உருத் தெரியாமல் அழித்துவிடுவேன். ஏய! துரியோதனா! ஆணவத்தால் ஆடுகிறாயா! எந்தத் தொடையில் என் பாஞ்சாலியை அமரச் சொன்னாயோ அதைக் கிழித்து எறிகிறேன் பார். (பீமன் கோபமாக எழுகிறான்)

தர்மன்: வேண்டாம் பீமா! நாம் தர்மத்தை மீறுதல் கூடாது. நாம் அடிமைகள். நம்மால் இப்பொழுது எதுவும் செய்ய இயலாது. கொஞ்சம் பொறுமையாக இரு.

பாஞ்சாலி: ஆம்! பொறுமையாக இருங்கள். இங்கு மிகப்பெரும் தருமம் அரங்கேறுகின்றது. அதிலிருந்து தவறிவிடாதீர்கள். ஒரு பெண்ணை பபையில் நிறுத்தி அவளது ஆடைகளைக் கலைந்து மானபங்கப்ப படுத்தும் மகத்தான தர்மம் நிகழவிருக்கின்றது. அதைத் தடுத்து பாவத்தைக் கட்டிக்கொள்ளாதீர்கள் தருமத்தின் புதல்வர்களே! அமைதியாக இருங்கள். பொறுமையாக இருங்கள். தர்மத்தின் காவலர்களே! நீங்கள் தர்மத்தை மீறி பாவம் செய்யலாமா! கோழைகளே!

துரியோதனன்: (உறக்கச் சிhpத்து) ஓ! என்ன திமிர் பிடிதத்வளாக இருக்கிறாள் இவள்! பாருங்கள் உங்கள் குலக்கொளுந்தை! மணாளர்களையே எளனம் செய்கிறாள். ஒருவனுக்கு மனைவியாய் இருந்தால் அச்சம் நாணம் இதுவெல்லாம் இருந்திருக்கும். இவளிடம் இதை எதிர்பார்க்க முடியுமா.

பாஞ்சாலி: ஏய் துரியோதனா! உன் நாவை அடக்கு. இல்லையென்றால் என்னை இழிவுபடுத்தும் உன் நாவை அறுத்து எறிந்துவிடுவேன்.

துரியோதனன்: நீ என் அடிமை என்பதை மறந்துவிட்டாயா பாஞ்சாலி! வாயை மூடு.

பாஞ்சாலி: அடிமையா! யார் உன் அடிமை. நானா! எப்படி என்னை உன் அடிமை என்கிறாய்.

துரியோதனன்: உன் கணவர்கள் தம்மையும் உன்னையும் பணயமாக வைத்துத் தோற்றது உனக்குத் தெரியாதா என்ன?

பாஞ்சாலி: என்னைப் பணயமாக வைக்க அவர்கள் யார்? அவர்கள் அவர்களைப் பணயமாக வைத்திருக்கலாம். என்னைப் பொருளாய் வைத்து விளையாட அவர்களுக்கு உரிமை இல்லை.

துச்சாதனன்: பயத்தில் மூளை கலங்கிவிட்டது இவளுக்கு. என்ன பேசுகின்றாய் என்று பார்த்துப் பேசுகின்றாயா? திருமணம் ஆன பெண் கண்வனின் உடைமையாகிவிடுகிறாள். நீயோ ஐவரின் உடைமையாக இருக்கிறாய். அவர்கள் ஐவரும் என் அடிமைகள் என்றால் நீயும் என் அடிமைதானே. சத்தமாகச் (சிரிக்கிறான்.)

பாஞ்சாலி: அவர்கள் அடமானம் வைக்க நான் என்ன அவர்களின் சொத்தா! உயிரற்ற பொருளா? உயிர் உள்ள பெண் நான். நான் யாருக்கும் உடைமைப்பொருள் அல்ல. அது இருக்கட்டும். தன்னையே காக்கத்தொpயாத மூடர்களாய் என் கனவர் ஐவரும் இருக்கையில் என்னைக் காக்க அவர்களால் எப்படி முடியும். காக்க முடியாத அவர்களால் என்னை அடமானம் வைக்க மட்டும் முடியுமா? தர்மத்தின் பெயரால் வாழ்வைத் தொலைத்தாலும் கூட அதர்ம வழி நடவாத உத்தமர் என உலகம் புகழும் என எண்ணி புகழ் போதையில் தன்னைத் தொலைத்த தர்மன் முதலான ஐவரையும் நானே புற்கனிக்கின்றேன். இந்த முட்டாள்கள் இட்ட மாலை என்னும் விலங்கு என்னைக் கட்டிப்போட ஒருநாளும் சம்மதிக்க மாட்டேன்.

குந்தி: என்ன பாஞ்சாலி! என்ன பேசுகிறாய் என உணர்ந்துதான் பேசுகின்றாயா? எங்கள் குலக்கொளுந்து நீ. அச்சத்திலும் குழப்பத்திலும் வரையரை கடந்து பேசாதே. உன் பேச்சு எம் பெண் குலத்திற்கே இழுக்காகிவிடும். நாவைக் காத்து உன் பத்தினித் தன்மையை, பெண்களின் பெருமையை காத்துக்கொள்.

பாஞ்சாலி: பத்தினியா! யார் பத்தினி? ஐவருக்கு மனைவியாய் வாழ்ந்த நானா பத்தினி? உங்கள் மரபு ஏற்றுக்கொள்ளுமா என்ன?

குந்தி: அது தவிர்க்க முடியாத சூழலில் நிகழ்ந்த பிழை. அது ஒரு விபத்து, அதுவே கர்மா.

பாஞ்சாலி: விபத்தா! அது நீங்கள் செய்த தவறு. தவறுதலாய் உச்சரித்த வார்த்தையைத் திரும்பிப்பெற இயலாது என நீங்கள் மறுத்தீர்கள். உங்கள் வார்த்தையை காத்துக்கொள்ள நினைத்தீர்கள். உங்கள் சொல்லை மீறி நடந்தால் அது பாவம் என எண்ணி இந்தப் பாவத்தை செய்யத் துணிந்தனர் உங்கள் மகன்கள். அதனால் நீங்காத பழியை அடைந்தவள் நான்தான்.

குந்தி: அறவழி தவறாது நேர்வழியில் நடக்கும் என் புதல்வர்களையா நீ பாவிகள் என்கின்றாய். வாயை மூடு. இல்லையென்றால்…..

பாஞ்சாலி: நிறுத்துங்கள். எந்தவகையிலும் அறம் இல்லாதவற்றைச் செய்துவிட்டு அதுவே தர்மம் என எண்ணும் நீங்களும் உங்கள் குலமும் என்னைக் கட்டுப்படுத்த முடியாது. அன்று உங்கள் வாய் உதிர்த்த ஒரு சொல்லால் இந்த அவையில் நான் அவமானப்பட்டுவிட்டேன். இனி என்னை உங்களால் கட்டுப்படுத்தவும் இயலாது, காக்கவும் இயலாது. நானே என்னைக் காத்துக்கொள்வேன். (துச்சாதனன் பாஞ்சாலியை நெருங்கி அவள் சேலையை கைப்பற்ற முனைகின்றான். பாஞ்சாலி துச்சாதனனோடு போராடுகிறாள்.)

கண்ணன்: இந்தப் பாஞ்சாலிக்கு என்ன ஆனது. இவள் ஏன் இப்படிப் போராடுகிறாள். என்னை அழைத்தால் உடனே நான் மீட்டுவிடுவேனே. முட்டால் பெண்ணே! ஒரு பெண்ணால் ஆணுக்கு எதிராக எப்படிப் போராட முடியும். இம்கூம்…. இவள் அழைக்க மாட்டாள் போலத் தெரிகிறது. வேறு வழியில்லை. மரபுப் படி நான்தான் அவளைக் காத்தாக வேண்டும். இல்லையென்றால் கதை கந்தலாகிவிடும். சரி நானே இறங்கிப் போகிறேன். (கண்ணன் மேலிருந்து சேலையைத் தூக்கி பாஞ்சாலி மீது எறிகின்றான். பாஞ்சாலி அதைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து துச்சாதனனோடு போராடுகின்றாள்)

அர்ச்சுணன்: பாஞ்சலி உனக்குக் கண்தொpயவில்லையா! நீ ஏன் அவனோடு போராடுகின்றாய். கண்ணன் உனக்காக வீசும் சேலையைப் பிடித்துக்கொள் அவன் பார்த்துக்கொள்வான். (பாஞ்சாலி அதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றாள்)

கண்ணன்: பாஞ்சாலி அந்தத் தீயவனோடு நீ ஏன் போராடுகின்றாய். அவன் ஒரு ஆண்மகன். ஒரு பெண்ணாகிய உன்னால் என்ன செய்ய முடியும் என நீ நம்புகிறாய். நான் உன்னைக் காக்கின்றேன்.

பாஞ்சாலி: உன்னால் எப்படி என்னைக் காக்க முடியும்.

கண்ணன்: நான் ஒரு பரமாத்மா! என்னால் எல்லாம் கூடும். எந்த மாயத்தையும் என்னால் நிகழ்த்த முடியும் என்பது உனக்குத் தெரியாதா?

பாஞ்சாலி: (அலட்சியமாக) உன்னால் என்னைக் காக்க முடியாது கண்ணா. அதற்கு அனுமதிக்க மாட்டேன். எப்போதும் என் இனம் ஒரு துணையை தேடித் தேடி சோர்ந்துபோய் விட்டது. பெண்ணாலும் எல்லாம் முடியும் என்பதை நான் இந்த சபையில் நிரூபிக்கப்போகின்றேன்.

கண்ணன்: என்னை அனுமதிக்க மாட்டாயா? ஏன் பாஞ்சாலி என்னை இப்படி அலட்சியம் செய்கிறாய்.

பாஞ்சாலி: ஆம் அனுமதிக்க மாட்டேன். அதற்கு நீ அறுகதை அற்றவன். என் இந்த நிலைக்கு காரணம் நீயே.

கண்ணன்: என்ன! உன் நிலைக்கு நான் காரணமா? என்ன உலருகிறாய் நீ? உனக்கு பத்தி பேதலித்துவிட்டதா?

பாஞ்சாலி: நான் உலரவில்லை. உண்மையைத்தான் சொல்கின்றேன். என் நிலைக்கு மட்டுமல்ல, என்னைப்போல இந்த சமூகத்தால் ஆடை பறிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படும் அத்தனைப் பெண்களின் கண்ணீருக்கும் காரணம் நீயே.

கண்ணன்: பாஞ்சாலி துன்பத்தில் இருக்கிறாயே என உனக்கு உதவ எண்ணி நீ அழைக்காத போதும் உன்னைத் தேடி வந்தேன். ஆனால் நீயோ என்னை இழிவு படுத்துகிறாய். அனைத்தையும் ஆட்டுவிக்கும் இறைவன் நான். என்மீதே வீண் பழி போடுகின்றாய். நான் நினைத்தால் உன்னை …….

பாஞ்சாலி: என்ன செய்ய உங்களால் முடியும். ஓ! சாபம் தரப்போகிறாயா! நான் சொன்னது தவறு என்றால் தானே அது என்னைச் சேரும். நான் உதிர்த்த சொற்கள் ஒவ்வொன்றும் சத்தியம். என்னைப் போன்ற பெண்ணினம் அடையும் அவமானத்திற்கு காரணம் நீதான். நீயேதான்.

கண்ணன்: உனக்கு என்ன ஆனது பாஞ்சாலி இன்று.

பாஞ்சாலி: கொஞ்சம் யோசித்துப் பார் கண்ணா! கிருஷ்ண லீலை என்னும் பெயரால் நீ எத்தனைப் பெண்களின் ஆடைகளைத் திருடியிருப்பாய். அனைவரும் உன் குரும்பை இரசிப்பதாய் கனவு கண்டு கர்வம் கொண்டு இருந்த நேரத்தில் ஆடையற்று அரை மனுசியாகிப் போனவள் எவ்வளவு அவமானத்தை உணர்ந்திருப்பாள்.

கண்ணன்: இல்லை பாஞ்சாலி! அதை நீ அப்படிப் பார்ப்பது முறையல்ல. அது ஒரு தத்துவார்த்தமான சங்கதி. அதன் உட்பொருளை அறியாமல் பேசுகிறாய் நீ. உயிருக்கும் அதை உருவாக்கிய பரமார்த்துமாவுக்குமான லீலை அது.

பாஞ்சாலி: உட்பொருள், மெய்பொருள் எனக் கூறி இன்னும் எத்தனைக் காலம்தான் பெண்ணினத்தை பாடாய் படுத்துவீர்கள். அது இருக்கட்டும். ஆடை பறிப்பதுதான் உன் உட்பொருளை உணர்த்துவதற்கு ஒரே வழியா? கடவுளான நீயே ஆடையைப் பறித்தால் சாமானிய மனிதன் அதைத்தானே செய்வான். இப்போது துச்சாதனன் செய்வதும் அதுதானே. நீ செய்தால் லீலை. மானுடன் செய்தால் பிழையா? இவ்விசையத்தில் தலையிட உனக்கு அறுகதை இல்லை. இதை எதிர்க்க தார்மீக  உhpமையுள்ளவள் நானே. நான் மட்டுமே. ஆம் உன்னைப் போன்றவர்கள் மீண்டும், மீண்டும் பெண்ணினத்தை ஆட்டிவைப்பீர்கள், அசிங்கப்படுத்துவீர்கள், பின் நீங்களே எம்மை இரட்சிக்கப் போவதாய் கோல்கொண்டும் வருவீர்கள். போதும் இந்தக் கூத்து. இனியும் இன்னொரு துணையை நம்பி நம்பி ஏமார நான் தயாராய் இல்லை. உன் உதவியை ஏற்று உனக்கும் தர்மத்தின் பெயரால் நடக்கும் அதர்மத்திற்கும் உன் அன்பிற்குhpய தோழனாம் அர்ச்சுணன் உட்பட ஐந்து முட்டால்களுக்கும் அடிமையாகப் பேவதில்லை நான். நானே என்னைக் காத்துக்கொள்வேன். எனக்கும் வலியைhன தோள்களும், கைகளும் அதில் கூர்மையான நகங்களும் உள்ளன. அவற்றிற்கும் மேலே பேறுகால வலியையே தாங்கக்கூடிய ஆற்றலும் அசாத்திய மனத்திடமும் உள்ளது. இவைபோதும் என்னைக் காத்துக்கொள்ள. (துச்சாதனனை ஓங்கி அடித்து கீழே தள்ளிவிட்டு தன் உடையை இழுத்துச் செறுகிக்கொள்கிறாள். இந்த மேலாடை இல்லையென்றால் எனக்கு கற்பு போனதாய் எண்ணி இதை இழுத்து அணியவில்லை நான். இந்த மேலாடை இல்லையென்றாலும் நான் உடலாலும் உள்ளத்தாலும் தூய்மையானவளே. நான் ஒரு பாpசுத்த நெருப்பு. மீண்டும் மீண்டுமாய் மேலாடையால் பெண்ணினத்தை வீழ்த்த முயற்சிக்கும் மூட சமுதாயத்தை உதாpவிட்டு என்னால் என்னைக் காக்க முடியும் எனக் காட்டவே என் மேலாடையைக் காத்தேன். இனி நான் யாருக்கும் அடிமையல்ல. நான் பாஞ்சாலி. நான் ஆணின் மிச்சமல்ல. நான் பெண். ஆணுக்கு இணையாய் ஆணைப்போல சுதந்திரமாய் வாழப் பிறந்தவள். சுதந்திரக் காற்றை ஆழ்ந்து சுவாசித்தபடி நானாக வலம்வர இருக்கும் பெண்.

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...