ஐயா வயலில் இருப்பதாக சொன்னதும் அவரைப் பார்க்க வயல் நோக்கிக் கிளம்பினான். அப்போதுதான் வயலில் ஒரு வாரமாக பறிக்கப்படாமல் பருத்தி வெடித்து வீணாவதாக ஐயாவின் மகன் சொன்னது நினைவுக்கு வர, மன்றத்தில் யாராவது ஆள் இருக்கிறார்களா என நோட்டம் விட்டு அங்கு இருப்பவர்களையும் வேலைக்கு அழைத்துக் கொண்டு போனான். "ஒரு வாரமாக விளைந்து வெடிக்கும் பருத்தியை எடுக்க ஐயா ஆள் அனுப்பவில்லையாம். இவர் என்ன செய்கிறாராம். ஐயா வேண்டாம் என எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் கிழக்கால உள்ள வயலுல கரும்பப் போட்டாரு. அப்புறம் எப்ப பாத்தாலும் பாகப்பிரிவின பன்னுன மாரி அங்குனயே கெடக்குறது. அது சின்ன வய. ஒரு மூனு ஏக்கர் காங்காது. அங்குன நாமுச்சூடும் கெடக்குறதுக்கு இங்கின வந்து பாக்கலாம்ல. இங்க 40 ஏக்கர் மொத்தமா கெடக்கு. அவரு ஒத்தையில கெடந்து செரமப்படுறாரு. கேள்வி மட்டுங்கேட்டுக்குறான்." என தன் மனதிற்குள் முனுமுனுத்துக்கொண்டே வந்து சேர்ந்தார். பருத்திக்காட்டில் ஆட்களை வேலைக்கு அமர்த்திவிட்டு தென்னந்தோப்பு நோக்கி நடந்தார் சாமினாதன். தோப்பின் நடுவில் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்துகொண்டு வெறுமையை வெறித்திக்கொண்டு இருந்தார் ஐயா.
ஐயா ஆழ்ந்த சிந்தனையில் உள்ளதைப் பார்த்துக்கொண்டே அவரை நெருங்கினார் சாமினாதன். அவருக்குத் தெரியும் ஐயா என்ன சிந்தித்துக் கொண்டு இருக்கிறார் என்று. ஐயா மகன் கூறியது போல அவர் கல்யாணக் கெனா காங்கவில்லை. என்பதை நினைத்தவராக, "என்னைய்யா நீங்க இப்புடி வயக்காட்டிலயே கெடக்குறீக. ஒரு வாரமாச்சு உம்மப் பாத்து. எங்கிட்ட என்னக் கோவமையா உங்களுக்கு?" எனக் கேட்டுக்கொண்டே இருக்க அசைவற்று அமர்ந்திருந்தார் ஐயா. அவரது கண் இமை கூட ஆடவில்லை. அசைவற்று இருந்த ஐயாவின் தோள்களைத் தொட்டுக் குலுக்கினார் சாமினாதன். சுயம் உணர்ந்தவராக தலை நிமிர்த்தி, "என்ன சாமி இந்தப்பக்கம்?" என்றார். "என்னவா கண்ணாலத்துக்கு ரெண்டு நா தான் கெடக்கு என்னனு கேக்குறீக. கண்ணால வேலை இல்லையா? அது மட்டுமா ஒரு வாரமா இப்புடி எதையுங்கண்டுக்காம இருந்தா எப்புடி. அங்குன பாருங்க நெதம் பூச முடிஞ்சு இந்தப் பக்கந்தானே வருவீக. அந்த பருத்திக்காடு ஒங்க கண்ணுலயே படலையா? கஷ்ட்டப்பட்டு வளத்த்டுத்து, இப்புடி வெளையிற நேறத்துல வேலிய முறிக்கலாம? அமுட்டும் முத்தி, வெடிச்சு நாலா பக்கமும் பஞ்சாக் கெடக்கு. இங்க மட்டும் என்னவாம், பாருங்க எம்புட்டு காயி முத்தி இருக்கு. அந்த ரங்கம்பைய எங்குட்டு போனான்? கூப்புட்டு காயப் பறிச்சுப் போட சொல்லக்கூடாதா? நானும் ஒரு சோலியா இந்தப்பக்கம் வர முடியாமப் போச்சு.ஏன் இப்புடி போட்டது போட்டபடி கெடக்கு. ஒடம்புக்கு ஏது..? ஒடம்பு என்ன ஒடம்பு, மனசு சொல்லுறத கேக்குறதுதானே அது வேல. மனசு ஒரு நெலையில இல்ல. அதான் ஒடம்பும் ஊஞ்சுடுச்சு." என தத்துவம் பேசினார் ஐயா.
ஐயாவின் மன நிலையைப் புரிந்திருந்தாலும் அதை சரி செய்ய வேண்டும் என நினைத்தார். "அட என்னையா இப்புடி சொல்லுறீங்க, ரெண்டு நாள்ள கண்ணாலம். மாப்புள்ள சும்மா ஜம்முனு இருக்காம. இப்புடி வந்து ஒக்காந்து வேதாந்தம் பேசுறீக. அட எந்திருச்சுக் கெளம்புங்க. தலைக்கு மேல வேல கெடக்கு" படபடத்த சாமி நாதனிடம் மெல்ல தயங்கியவாறே, "ஏஞ்சாமி எனக்கு மன்சே ஒப்பல. பேசாம இத நிறுத்திட்டா என்ன? எம்புட்டோ றோசன பன்னிப்பாத்துட்டேன். எம்மனசு சமாதானம் ஆகல சாமி" என்றார். கேட்டதும் சாமி நாதனுக்குப் பகீரென்றாகி விட்டது."அட என்னையா இது. நல்லக் கதயா இருக்கே. கண்ணாலம் பேசி வெத்தல பாக்கு மாத்தி வாக்குக் குடுத்துட்டு இப்ப இப்ப வேண்டாம்னு சொன்னா எப்புடி? பாவம் அந்தப் பொன்னு. வாழ வேண்டிய பொண்ணு ஊரெல்லாம் அத தூத்திட மாட்டாங்க. சும்ம இருங்கையா. இது நடக்குற காரியமா?" என்றார். "இல்ல சாமி அந்தப் புள்ள ரொம்ப சின்னப் புள்ளயா இருக்கு. அதக் கொண்டு கட்டிட்டு வந்து, அது வாழ்க்கையப் பாழாக்கனுமா? எனக்குன்னா எம்மனுஷி போனதுல இருந்து உடம்பே போச்சு. ஓயாம மயங்கி மயங்கி வுழுகுறேன். நாளைக்குக் கல்யானம் பன்னதுக்கப்புறம் எதாச்சும் ஆச்சுன்னா பாவம்... " எனப் பேசிக் கொண்டிருந்தவரை கோவமாக இடை மறித்த சாமி, "ஐயா நல்ல காரியம் பேசையில இது என்னப் பேச்சுயா? மொதல ஒங்க வாயக் கழுவுங்க. உங்களுக்கென்ன. தெடகாத்துரமாதான் இருக்கீக. நாள் முச்சூடும் நல்ல சாப்பாடு இல்லாட்டி எளந்தாரிக் கூடத்தான் பல்லுவாய் கட்டி வுழுவான். பாருங்க அந்தப் புள்ள வந்து நல்லா சமச்சுப் போட்டு பாத்துட்டா, நீங்க பழையபடி அப்புடியே ஓடியாட ஆரம்புச்சுருவீக" என்றார்.
அனால் ஐயா அதை ஏற்கவில்லை "எம்மனுஷி இத ஏத்துப்பாளா? எனக்கு நெனவு இருக்கு, ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு முன்ன எம்பங்காளி பொஞ்சாதி செத்ததும் ஒரு சின்னப்புள்ளைய கட்டிட்டு வந்தாருண்டு அவரு மொகத்துலயே முழிக்க மாட்டேனுட்டா. என்ன மனுசப்பயலுக இப்புடியா பச்சப்புள்ளய பாழாக்குவாக. ஆத்தீ பொண்டாட்டி செத்தா செத்த நாளுலயே வேற பொண்டத் தீடிக்கிறாக. பொம்பளைக அப்புடியா இருக்கோம். எங்களுக்கு ஒருன் நாயம் ஒங்களுக்கு ஒரு நாயமா. நான் எம்புள்ளகள இப்புடி வளக்க மாட்டேன். அதுக நல்ல படிச்சு தெகிரியமான புள்ளகளா நல்லது கெட்டது தெரிங்க புள்ளகளா வளரட்டும்." என்று அடிக்கடி சொல்லுவா. அவ மனசுக்கு மீறி நான் இப்புடி.. " எனத் தினறியவர், " அது மட்டும் இல்ல சாமி பொதுவா ரெண்ட்டாவதா கட்டிட்டு வர்ரவுக ஒரு பயத்துலயே இருப்பாக. அதுனால மூத்தகுடிப் புள்ளகள நல்லா நடத்த மாட்டாக. இந்தப் புள்ள எம்புள்ளகள நல்லா பாக்குமா? இனிதான் புள்ளகளுக்கு நல்லது எல்லாம் பாக்க வேண்டி இருக்கு. அதுவும் மனசக் கெடந்து அருவுது சாமி" என்றார். அவர் மனதில் உள்ளதை யெல்லாம் கொட்டி முடிக்கட்டும் எனக் காத்திருந்த சாமினாதன், :"அட அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க மனசப் போட்டுக் கெடுத்துக்க வேணாம். உங்கள கவனிக்க ஆளில்லாத நாள்லதான் ஒங்க சம்சாரம் ரொம்ப வேதனைப் பட்டுப் போயிருப்பாக. அதெல்லாம் ஒன்னு நெனக்க மாட்டாக. இந்த ப்புள்ள பச்சப் புள்ளயாட்டம் சூதுவாது அறியாதது. ஏது தப்பிதமா நடக்காது. ரொம்ப மனசக் கொழப்பாம எந்திருச்சி வாங்க மத்த வேலையக் கவனிக்கனும், என்று எழுந்தவர் ஐயா எழாததைப் பார்த்து சோர்வடைந்தார். பின், "ஐயா கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க பொண்ணுபாக்கப் போயி வேண்டாம்னு சொன்னதுக்கே அந்தப்புள்ள மதினி அத எப்புடி அடிச்சு சித்திரவதப் படுத்துச்சு. இப்ப கல்யாணம் பேசி வேண்டாமுன்னாஅவ்வளவு தான் அந்தப் புள்ளய கொன்னே போட்டுருவா. எந்திரிங்க. மனச சமாதானப் படுத்திக்கிங்க. நீங்க அந்தப் புள்ளக்கி நல்ல வாழ்க்கை கொடுக்குறீக. அம்புட்டுதான்." என்ற சாமினாதன் பேச்சிக் கேட்டு எழுந்து அவனோடுனடந்தார் ஐயா அவர் மனம் மட்டும் வர அடம்பிடித்து அங்கேயே இருந்து வானத்தை ஏதுமற்ற வெளியை வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தது.