இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

அருளு பகுதி - 8

     அருளு வீட்டில் பெண் பேசி வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த ஒரு வாரமாக ஐயாவை சரியாகப் பார்க்கவே முடியவில்லை. அவரைக் கோவிலில் பார்ப்பதோடு சரி. வழக்கமாக அவர் வந்து உட்காரும் ஊர் மன்றத்திலோ அல்லது ஆலமரத்து அடியிலோ அவரைக் காணவில்லை. தினமும் காலை பூசை முடிந்து ஊர் மன்றத்தில் அமர்ந்து கொஞ்ச நேரம் வேதம் பற்றி பேசுவார். அதைக் கேட்பதற்காகவே வயதான பலர் அங்கே அமர்ந்து காத்து இருப்பர். ஆனால் ஒரு வாரமாக அந்தப் பக்கமே அவர் வருவது இல்லை. பூசை முடிந்து எங்கே போகிறார்? எப்படிப் போகிறார்? என்பதே தெரிவது இல்லை. சரி வீட்டில் சென்றாவது பார்க்கலாம் என்று ஐயாவின் வீட்டிற்கு போனார் சாமிநாதன். வாசலில் ஏறி  ஐயா! ஐயா! எனக் குரல் கொடுத்தார். பதில் குரலோ இல்லை.

     சரி போய்விடலாம் என எண்ணிக் கிளம்புகையில் உள்ளிருந்து ஐயாவின் இரண்டாவது மகன் அந்தோனிசாமி வெளியே வந்தான். அவரைப் பார்த்ததும் அவன் முகம் மாறுவதையும், முகத்தில் கடுமை ஏறுவதையும் உணர்ந்தார். "என்னையா என்ன காரியம் பண்ணிட்டு வந்துருக்கிங்க? இப்ப இந்த வயசுல இந்தப் பெரிய மனுசனுக்குக் கல்யாண்ம் கேக்குதா ஊருல இருக்க பெருசுங்கல்லாம் சேந்து அவரு மனச மாத்தி இப்புடி கூத்துப் பண்ணி வச்சுருக்கிங்க. வீட்டுல இத்தன புள்ளக இருக்கோம். எங்கக்கிட்டக் கூடக் கலக்காம நீங்களா ஒரு முடிவு எடுத்துட்டு வந்து வச்சுரிக்கிங்க?" என்றான் அந்தோனி, ஆமாம் நீ ரொம்பப் பெரிய மனுசன் என எண்ணினாலும் ஏதும் கூடக்குறையப் பேசி சிக்கலாகிவிட வேண்டாம் என எண்ணியவ்ராக, "இல்ல தம்பி உங்கக்கிட்ட இது பத்திப் பேசுனோம். ஐயாவுக்கு சரியான கவனிப்பு இல்ல. உங்க சம்சாரத்துட்டப் பேசுங்கன்னு நாங்க எம்புட்டோ சொன்னோம். நீங்க அதுப்பத்திப் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டிங்க. ஐயாவும் வீட்டு சீதிய வீதி வர இழுக்காத சாமின்னுட்டாக.  அதான்..." என சாமி பேசிக்கொண்டிருக்கையிலயே, " எம்பொஞ்சாதி, சின்னப் புள்ள. ஏதோ வேல அசதில சத்த தூங்கிருப்பா. நேரத்துக்கு சாப்புட்டுதான் இப்ப என்ன சாதன வேண்டிக்கெடக்கு. பாவம் அவ இங்குனக் கெடந்து எம்புட்டுச் செரமப்படுறா. ஏதோ அவன்னக்கண்டு பொறுமையா இருக்கா. அவ எடத்துல வேற பொம்பளாயாலு இருந்திருந்தா அம்புட்டுத்தான் வீடு விருவு வுட்டுப் போயிருக்கும்." என்றதும் சாம்நாதனுக்கு அடக்கமுடியாமல் கோபம் வந்தது அவர் அறிந்தே ஐயா பல நாள் பகல் சாப்பாடு இன்றி இருந்திருக்கிறார்.

     ஒருநாள் இரு நாள் என்று இல்லை பலனாள் ஐயா சாப்பாடு இன்றி பசியோடு இருத்திருக்கிறார். ஐயாவிற்கு வயல் அதிகம். நெல், மிளகாய், துவரை, எள், கம்பு, சோளம், கேப்பை, காய்கறி எல்லாம் விளைகின்றன வயலில் ஏறக்குறைய நாற்று நடுவது, களை பறிப்பது, அறுவடை என எப்போதும் வயலில் வேலை இருந்துகொண்டே இருக்கும். அப்படி பெரும்பாலான நாட்களில் பகல் உணாவு சாப்பிடும் நேரத்தில் வீட்டிலிருந்து உணவு வராமல் ஐயா மட்டும் வாய்க்கால் நீரைக் குடித்துப் பசியாறுவார். அதைப் பார்க்கும் பெண்கள் பலருக்கும் வாயில் உணவு செல்லாது. தொண்டையிலேயே சிக்கிக் கொள்ள கண்கள் குளமாக நிற்பர். இதைப் பார்த்துப் பார்த்துப் பொறுக்க முடியாத மூக்காயி ஒரு நாள் அவரிடம், "ஏஞ்சாமி ஆயா இருக்கையில நீங்க இம்புட்டு செரமப் பட்டு இருப்பீகளா. ஊர்ல பலர் வீட்டுல ஒங்களால அடுப்பு எறியுது ஆனா நீங்க இப்புடி பசியாறாம தண்ணியக் குடிக்கிறீக மனசே ஆற மாட்டுது ஐயா! இப்புடி வேவாத வெயில்ல வம்பாடு பட்டு ஒழைக்கையைல ஒருவாக் கஞ்சிதான் அமுர்தமா இருக்கும். ஆனா நீங்க இம்புட்டுக் கஷ்டப்படுறீக்ள்ளே. மனசே ஆறமாட்டுதுய்யா" எனப் புலம்பினாள். எந்தச் சலனமும் இல்லாமல் ஐயா "அட யாரிங்க ஒழைக்கிறா நான் சும்ம ஒக்காந்துதான் இருக்கேன். நீங்க பாடுபட்டு ஒழைக்கிறீக உங்க வவுத்துக்கு சாப்புடனும். எனக்கிப்ப  சாப்பாட்டுக்கு என்ன அவசரம். வயசாகுதுல்ல. அதான் சாப்பாடுல்லாம் வேணாம் ஆத்தா. நான் வீட்டுல வந்து சாபுடுறேன்னுட்டே. அது மட்டுமா. அங்குன எம்மருமவ வகவகயா சமச்சு வச்சுருக்கும். நீ கண்ணுல கண்டே கண்ணு வச்சுட்டாயின்னா? என கிண்டலாகக் கூறியவர். "அட இப்ப என்ன எனக்குப் பசிக்குதுண்ணா ஒருவாயி குடு மூக்காயிண்டா நீ குடுக்க மாட்டியா? எனக்கு பசி இல்ல நீ வரசா சாப்புடு. இப்புடியே கத பேசி பொழுத போக்கிடாத. எனக் கூறி அவளது கவனத்தைத் திருப்பி அனுப்பினார். ஆனால் அவளுக்கு அவர் சொன்ன அந்த ஒங்கிட்ட வாங்கி சாப்புடுவேன் என்னும் வார்த்தை காதில் ஒழித்துக் கொண்டே இருந்தது. ஊரே என் கைப் பட்டுடும் கால் பட்டுடும்னு எம்ம விட்டு ஒதுங்கி நிக்குது. நான் குடிக்கக் குளிக்கக் கூட தனி எடம். தண்ணி ஊத்திக் குழுச்சா அழுக்குப் போகும்பாக. ஆனா நான் நின்னுக் குளுச்சா தண்ணிக்கே அழுக்கு ஏறிப்போகும்னு நெனைக்குற மனுசங்க மத்தியில இவரு என் கையால சாப்புடுவேண்டு சொல்றாரு. அவரு செய்யுறவரு தான். இப்புடிப் பட்ட மனுசனுக்கு எப்புடி வாழக் குடுத்து வச்சுருக்கு. என்ன செய்ய. ஏம் ஐயா நீங்க ஐயா கூடவே தானே இருக்கிக. ஆயாதான் போயிட்டாக. ஐயாவுக்கு ஒரு பொண்ணப்பாத்து கண்ணாலங் கட்டைவக்கலாம்ல. எனக் கேட்டாள். அவள் கேட்பதற்கும் ஐயா மயங்கி சரிவதற்கும் இடையில் ஒரு நொடிதான். பார்த்துக்கொண்டிருந்த சாமி நாதன் அன்றே அதை முடிவு செய்தவர்தான். 

    எல்லாம் மனக்கண் முன் வந்து செல்ல, தம்பி அவருக்கு நல்ல சாப்பாடில்ல. ரெண்டு மூனு நாளு வக்காட்டுலயே மயங்கிப்புட்டாரு.. அதான்.. " என எழுத்தா சாமினாதன். அட எம்பொஞ்சாதிக்குத் தான் எல்லாம் வாச்சதா? ஒன்னுக்கு அஞ்சு பொட்டைங்க இருக்கு. அதுகளக் கூட்டியாந்து ஆக்கிப்போடச் சொல்றதுதானே? என்றதும், "என்ன தம்பி இது. அதுகப்படிக்கிற புள்ளக. அதுகள இங்கக் கூட்டியாந்துட்டா எப்புடி படிக்குங்க. உங்க அம்மா எல்லாப் பிள்ளைகளையும் நல்லா படிக்க வைக்கனுமுன்னு ரொம்பப் பெரயாசைப்பட்டாக. அவுக ஆசைக்காச்சும் படிக்கட்டும் தம்பி" என்றார். "ஆமாம், பொட்டைக படிச்சி என்னத்தக்... என தன் வாழ்க்குள்ளேயே முனுமுனுத்துக் கொண்டே, "சரி அது வேண்டாம். கட்டிவைக்கனும்னு முடிவு செஞ்சீகள்ள. ஒரு வயசு போன, நாதியத்தப் பொண்ணா கட்டுனா ஆகாதோ. பொண்ணுக்கு எம்பொஞ்சாதியோட கொற வயசாமே. இப்பவே கண்ணாலப் பேச்சு எடுத்ததுலருந்து மனுசன் வீட்டுக்கே வாரது இல்ல. ஏதோ மைவச்ச மாதிரி வயக்காட்டுலயே ஒக்காந்து யோசிச்சுட்டே இருக்காரு. இன்னும் கட்டி இங்கக் கூட்டியாந்துட்டா என்னென்னக் கூத்து நடக்குமோ? நாளைக்கு இவர மயக்கி இருக்கச் சொத்து பத்தெல்லாம் மடக்கிப்போட்டுட்டா நாங்கெல்லாம் என்ன செய்றதாம்? இன்னும் வீட்டுல அஞ்சு பொண்டுக இருக்கு அதுக்கெல்லாம் நல்லது கெட்டது யாரு பாக்குறதாம்? எனப் பேசிக்கொண்டே போனான் அந்தோனி. "அப்பு அப்புடியெல்லாம் ஒன்னும் நடக்காது. அவரு என்ன யோசிக்கிறாருண்டு எனக்குத் தெரியும். மனசப் போட்டுக் கொளப்பிக்காதிக. உங்க அப்பா. எப்பவும் ஒங்க அப்பாதான். ஒங்க சொத்துக்கு ஒரு பாதகமும் வராது." எனச் சொல்லிவிட்டு வயல் நோக்கி நடந்தார் சாமினாதன்.

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...