அருளுக்கும் ஐயாவுக்கும் திருமணம் பேசி இரண்டு நாட்களாகிவிட்டன. அருளின் அண்ணன் சூசை முத்துவுக்கு எப்படியாவது தகவல் தெரிவிக்க எண்ணிய உபகாரத்தம்மாள் கடைசியாக அவன் எழுதிய கடிதத்தையும் கடிதம் அனுப்புவதற்குத் தேவையான பணத்தையும் இரண்டு நாட்களாய் இடுப்பில் கட்டிக்கொண்டு அலைகிறாள். இன்னும் சரியான ஆள் அமையவில்லை. உபகாரத்தம்மாள் பொதுவாக பக்கத்து ஊர்களில் விசேஷமாய் நடக்கும் கோவில் திருவிழாக்களுக்கு கட்டாயம் சென்றுவிடுவாள். அதிலும் நாற்பது மைல் தொலைவிலுள்ள ஓரியூர் திருவிழாவுக்குச் செல்ல ஒரு ஆண்டும் தவறியதே இல்லை. அதிலும் இந்த ஆண்டு அவள் உயிருக்கு உயிரான பேத்திக்குத் திருமணம் வேறு. அவளின் வாழ்க்கையைக் குறித்து உபகாரத்தம்மாள் மனதில் உள்ள கலக்கங்களையெல்லாம் ஆண்டவனின் பாதத்தில் இறக்கி வைக்கக் கிளம்பினாள். திருவிழா நாளைக்குத் தான். வண்டி கட்டிச் செல்பவர்கள் அதிகாலையில்தான் கிளம்புவார்கள். பாதயாத்திரையாக போவோர் மட்டும் முதல் நாள் மாலையிலேயே கிளம்பிவிடுவர்
உபகாரம் கேட்டாள் வண்டியில் செல்பவர்கள் தட்டாமல் கூட்டிச் செல்வர். ஆனால் அவளுக்கோ நடந்து போகத்தான் பிடிக்கும். பாத யாத்திரையாக செல்பவர்கள் கலைப்புத் தெரியாமல் இருக்க கதை பேசி பாட்டுப்பாடி கலகலப்பாக செல்வர். ஆனால் உபகாரம் அது எதிலும் கலந்துகொள்ளவில்லை. கல் முள் இருட்டு எதையும் பொருட்படுத்தாமல் அமைதியாக பக்தியாக நடந்தாள். யாரோடும் ஒரு வார்த்தை கூட பேசாமல் கையில் பிடித்த செபமாலையை உருட்டியபடி வேகமாக நடந்து அதிகாலையிலேயே ஆலயத்தை அடைந்தாள். எங்கு பார்த்தாலும் மனித தலைகள். ஒரு பக்கம் இரவு முழுவதும் அடைக்கப்படாத நேற்று புதிதாய் முளைத்த திருவிழா கடைகள், மற்றொரு புறம் நேர்த்திக் கடனுக்காக முடியிறக்கும் கூட்டம். இன்னும் ஒருபுறம் வேண்டுதலுக்காக ஆடு கோழி நேர்ந்துவிட்டு, அதை வெட்டி உறவுகளோடு கூடி கறிவிருந்து சமைப்போர். இவர்கள் யாரோடும் கலக்காமல் நேராக கோவிலுக்குள் சென்றாள் உபகாரத்தம்மாள். அவளுக்குத் தெரியும் அவளது உறவினர்களும் தெரிந்தவர்களும் இந்த வளாகம் முழுவதும் கூடி இருக்கக்கூடும். யார் கண்ணிலாவது பட்டால் பின் மாலை வரை கோயிலுக்குள் நுழைய முடியாது என்று. எனவே வந்த வேலையை முடிப்போம் என்று கோவிலுக்குள் நுழைந்தவள் மணிக்கணக்கில் முழந்தாள் படியிட்டு கண்ணீர் விட்டு உருகி செபித்தாள். சாதாரணமாக அவள் செபிக்கும் போது ஊருக்காக, உலகுக்காக, தன்னிடம் செபிக்கக் கேட்டோர் என பலருக்கா செபிக்கும் உபகாரம் இன்று அருளுக்காக மட்டும் செபித்தாள். உண்மையில் அவளுக்கு என்ன செபிப்பது என்றே தெரியவில்லை. ஆனாலும் “ஆண்டவா இந்த அருளுக்குட்டிய காப்பாத்துங்க. அப்பனாத்தா இல்லா புள்ளக்கு நல்லவழி காட்டுங்க” என மனதுருகி செபித்தாள். அப்படியே எவ்வளவு நேரம் இருந்தாள் என அவளுக்கே நினைவு இல்லை. மனம் அனைத்தையும் கடந்து இருந்தாலும் உடல் அப்படி இருக்க விடுவதில்லையே. பசி அடி வயிற்றைப் பதம் பார்க்க ஆரம்பித்தது. சரி ஏதாவது சாப்பிட்டு வரலாம் என கோவிலுக்கு வெளியே வந்தாள். “ஏய் கெழவி என்ன கூப்புட கூப்புட பேசாம போற. உம் பேத்திக்கு மாப்புள்ள அமஞ்ச மெதப்புல போறீயோ” குரல் கேட்டு திரும்பிய உபகாரத்தம்மாள் ஒரு நொடியில் உறைந்துவிட்டாள்.
சத்தம் வந்த திசை பக்கம் பார்க்கையில் அங்கே இராசாமணி நின்றிருந்தாள். அவள் உபகாரத்திற்கு உறவுக்காரிதான். கொஞ்சம் வாய்த்துடுக்கானவள். அனைவரையும் எடுத்தெரிந்து பேசுவாள். அதனால் உபகாரத்திற்கு அவளோடு அவ்வளவாக ஒட்டுதல் இல்லை. தவிரவும் உபகாரம் எதையும் முகத்திற்கு நேரே பேசக்கூடியவர். அதனால் ஏதாவது பேசி கோவில் தளத்தில் சண்டை வந்துவிடக் கூடாது என நினைத்து அவளைத் தவிர்க்கப் பார்த்தாள். ஆனால் அவள் விடுவதாக இல்லை. “இந்தா கெழவி ஒனக்கு காது மழுங்கிடுச்சா? கூப்புடுறது கேட்கல.” என அவளை மடக்கி, “நான் இன்னைக்கு கெடா வெட்டிருக்கேன். வா வந்து ஒரு வாய் கஞ்சி குடிச்சுட்டுப் போ” என உரிமையாக அழைத்தாள். அதற்கு மேல் அவளைத் தவிர்க்க இயலாத உபகாரம், “ஏட்டி என்ன விசேசம். எதுக்கு இந்த கெடா வெட்டு? எதுவும் வேண்டுதலா?” எனக் கேட்க, “இல்லத்தா ஒரு வேண்டுதல் நெம்ப நாளா தீக்காமலே கெடந்திச்சு. அது நடந்து எப்புடியும் பாஞ்சு இருவது வருசம் இருக்கும். எங்கடேசி மவன் ராசா இருக்கன்ல அப்ப அவன் சின்னப் பய. இங்க கோயிலு திருவிழாவுன்னு வண்டி கட்டி கெளம்பியாரோம். இவன் செத்த நேரம் ஒரு எடத்துல இருப்பேனான்னு ஆடுறான். வண்டியில முன்னால இருந்து பின்னால, பின்னால இருந்து முன்னாலன்னு ஆட்டமா ஆடிப்புட்டான். நானும் எம்புட்டோ சொல்லிப் பாத்தேன். அவன் அடங்குறாப்புல தெரியல. நான் ஏதோ ஆத்தரத்துல உங்காலு வெளங்காம்ப் போவாதான்னு ஒரு வெசவு வெஞ்சேன். அம்புட்டுதான் ஆடிக்கிட்டு இருந்தவன் சட்டுனு ஒக்கீந்துட்டான். நானும் சரி அடங்கிட்டான்னு கோயிலுக்குக் கூட்டியாரேன். கோயிலு வாசல் வந்ததும் எறங்குயாங்குறேன். அவன் இத்தினி அசையல. அவன் காலு உண்மையாலுமே வெளங்காம போயிடுச்சு. எனக்குன்னா உசுரே போயிருச்சு ஒத்தெக்கு ஒத்தன்னு கடேசியா ஒரே ஆம்புளப் புள்ளயப் பெத்து இப்புடி பாழாக்கிப்புட்டோன்னு ஒரே கவலை. அவன எங்கையால தூக்கியாந்து கோவில் வாசல்ல போட்டு அருளானந்தையா எம்புள்ளெக்கி அவம்புட்டு காலக் குடுத்துருமைய்யா. நான் ஒங்கோயில் திருவிழாவுல கெடா வெட்டுறேன்னு கண்ணீர் விட்டு கதறுனேன். ஒரு வழியா கோயில் விட்டு கெளம்புறப்ப எம்புள்ள கால் சரியாகிடுச்சு. அவனும் காளை கணக்கா வளந்துட்டான். ஆனால் நேத்திக்கடன் மறந்து போச்சு. இப்ப அவனுக்கு கல்யாணம் பண்ணலாமுன்னு பொண்ணு பாத்தா ஒன்னும் அமைய மாட்டுது. ஏன்டான்னு யோசிக்கும் போதுதான் ஒரு நேத்திக் கடன் பாக்கி வச்சது தெரிஞ்சுச்சு. அந்த கொறய மனசுல வச்சுட்டுதான் நான் குடுக்கலைண்டு கோலத்தில் எம்புள்ளக்கு பொண்ணு அமையாம தடுக்குதுண்டு தோனுச்சு. அதான் கெடா வெட்டியாச்சு.” என மூச்சு விடாமல் பேசினாள்.
இராசாமணி பேசியதையெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த உபகாரத்தம்மாள் சொன்னாள், “ஏட்டி நமக்காக உசுரயே கொடுத்த ஆண்டவன்டீ அவரு. ஒரு கெடாக்கு ஆசப்பட்டு தான் படைச்ச புள்ளகள கஷ்டப்படுத்திப் பாப்பாரா? நீ ஒம்புள்ளய ஒழுங்கா வளக்கல. அவன் வேலவெட்டிக்கு போகாம, வீட்டோட மண்ணாந்து மாதிரி கெடந்தா எந்தப்பன் தம்பொண்ணக் குடுப்பாக. கொறைய ஒம்மேல வச்சுக்குட்டு கடவுள் மேல பழி போடுறியே?” எனக் கேட்டார் உபகாரத்தம்மாள். அதெல்லாம் எம்புள்ள நல்ல புள்ளதான் கெளவி. கொஞ்சம் கருத்து இல்லாம இருக்கான். கலியாணம் கெட்டினா எல்லாஞ் சரியா போகும். அதுக்கு நல்ல புள்ளயாதேடுனேன். ஒம்பேத்தியக்கூட கேட்டு விட்டேன். ஒம்மருமக தான் மாட்டேன்னு விடாப்புடுயா நான்னுடுச்சு” என்றாள். இதைக் கேட்டதும் உபகாரத்தம்மாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதுவரை வேறு வரனே வரவில்லை என அருளை அவளது மதினி குத்திக் காட்டுனா. ஆனால் அது உண்மையில்லை என அப்போதுதான் அவளுக்கு விளங்கியது. அப்படியானால் அருளை இரண்டாம் தாரமாக பேசி முடிக்க என்ன காரணம் என யோசித்துக் கொண்டிருக்கையில் இராசாமணி யாரையோ கையசைத்து அழைப்பதை உபகாரம் கவனித்து திரும்பிப் பார்த்தாள் அங்கே சாமிநாதன் நின்றிருந்தார். ஆம் அருளைப் பெண் பார்க்க ஐயாவோடு துணையாக வந்திருந்த அதே சாமிநாதன் நின்றிருந்தார். உபகாரத்தைப் பார்த்ததும் அவர் கையெடுத்துக் கும்பிட உபகாரத்தம்மாளோ பதில் வணக்கம் கூட சொல்லாமல் கோபமாக பார்த்தாள்.
……………………………தொடரும்.………………………..