“இன்னைக்கு ஒம்பேத்திய பொண்ணு பாக்க வாராக” இந்த வார்த்தையைக் கேட்டதும் உபகாரத்தம்மாளின் மனம் ஆனந்தக்கூத்தாடியது. அப்பாடி புள்ளைக்கு பாஞ்சு வயசாச்சு. இவ வயசுக்காரிகள்லாம் வவுத்துலயோ இடுப்புலயோ சுமந்து திரியிராளுகளே, இது மாடாட்டம் பொதி சொமந்து பாடாப்படுதே. அட ஆண்டவரே இந்தப் புள்ள மேல உனக்கு கருணையே இல்லையா? ண்டு கோவில் வாசல்ல மொழங்கால்ல இருந்து கண்ணீர் விட்டு செபிச்சதுக்கு பலன் தந்துட்டையா என்று மனதிற்குள் நினைத்தவளாக ஐயா ஆண்டவனே உங்கருணையோ கருணைய்யா. இந்த கெழவி வேண்டுதல் பழிச்சிடுச்சே. நன்றி ஐயா என ஆனந்தத்தில் நன்றி மடல் வாசித்தாள்.
மனம் நிறைந்த சந்தோசத்தோடு அருளைப் பார்த்து, அவள் தலையில் கைவைத்து மனதார ஆசீர்வதித்தாள். பின் அருளின் முகத்தை உருவிய திட்டி கழித்தவள் அவளது கழுத்தில் புதிதாய் மின்னும் சங்கிலியைத் தொட்டுப்பார்த்துவிட்டு “ சும்மாவா சொல்லுவாக கருத்த குட்டிக்கு நக போட்டு கண்ணால காங்கனும் செவத்தகுட்டிக்கு நக போட்டு...” என சொல்லும் போதே இரக்கத்தின் முகம் மாறுவது தெரிந்தது. சொல்ல வந்ததைப் பாதியிலேயே விட்டுவிட்டு ஆத்தா இரக்கம் எம்புட்டு பெரிய காரியம் பண்ணிப்புட்ட. நீ நல்லா இரு தாயி என்றவளாக மீண்டும் பேத்தியைப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தாள். பின் திண்ணையிலேறி தூணோரமாக சாய்ந்து அமர்ந்தவாறு “ மாப்புள்ள யாரு? என்ன சங்கதி? உள்ளூரா? அசலூரா? வெவரஞ் சொல்லாத்தா” எனக் கேட்டதும் இரக்கம் விக்கித்துப் போனாள். ஆனாலும் கொஞ்சம் சமாளித்துக் கொண்டு “இங்க பாரு கெழவி. தலைக்கு மேல வேல கெடக்கு. உங்கிட்டு நின்னு வெவரஞ் செல்றதுக்குள்ள மாப்புள்ளயே வந்துடுவாக. நேர்ல பாக்கப்போற. பாத்தே தெரிஞ்சுக்க” என்று சொல்லிக்கொண்டே கூடத்தில் பெரிய கல்யாண சமுக்காளத்தை விரித்தாள்.
“ஏத்தா அருளு அவுக வார நேரமாச்சு நீ உள்ளாற போ” என ஆணையிட்டாள் உபகாரம். அவள் உள்ளே போனதும் இரக்கமும் அவளோடு சென்று அடுப்புக் கனலில் கிடக்கும் பாலை எடுத்து அதில் காப்பித்தூளைக் கலந்தாள். பின் வாசல் பக்கமாக வந்து நோட்டம் விட்டாள். அவள் பார்ப்பதற்கும் அவள் கணவன் சவுரி வருவதற்கும் சரியாக இருந்தது. ஓட்டமும் நடையுமாக அவன் வரும் தோரணையிலேயே மாப்பிள்ளை வந்து கொண்டிருப்பதை ஊகித்தவளாக உள்ளே சென்று அனைத்தையும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டாள். சத்தம் கேட்டு கூடத்துக்கு வந்த அருளு அப்பாயின் சைகையைப் புரிந்தவளாக அடுப்படிக்குள் புகுந்துகொண்டாள். படியேறி கூடத்திற்குப் போன உபகாரம் பின்னே ஆட்கள் வருவதை உணர்ந்து திரும்பி கைகளைக் கூப்பி வணங்கிவிட்டு “வாங்க வாங்க என மரியாதையாக அழைத்தாள். மொத்தம் ஏழுபேர் வந்திருந்தனர். அனைவருமே ஆண்கள். பெண்கள் யாரும் பின்னால் வருகிறார்களா என எட்டிப் பார்த்து யாரும் வரவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொண்டு உள்ளே சென்றாள். விரித்துருந்த சமுக்காளத்தில் வந்தவர்கள் அமர்ந்ததும் தானும் கூடத்தில் அமர்ந்தாள். அவள் “சாமி என்ன ரெச்சியும்” என சொல்லிக்கொண்டு உட்காரும்போது வீட்டுக்குள் வேகவேகமாக இரக்கத்தின் அம்மா வருவதையும் தன்னருகில் வந்து அமர்வதையும் கண்ட உபகாரத்திற்கு பகீரென்று இருந்தது.
இரக்கத்தின் அம்மாவைக் கண்ட உபகாரத்திற்கு திக்கென்று இருந்தது. “இவ ஏன் இங்கிட்டு வந்தா? சுத்த வெவகாரம் புடிச்சவளாச்சே? ஐயா இருதய ராசாவே மனசு வையுங்கையா. இவ ஊடால விழுந்து குட்டையக் கொழப்பாம இருக்கனும் சாமி” என மனதிற்குள்ளே ஒரு வேண்டுதல் வைத்துவிட்டு வந்திருப்பவரகளை நோட்டம் விட்டாள். எளவட்டமா யாரும் அம்புடலையே. எல்லாம் வயசானவுகளா உக்கந்திருக்காங்களே. மாப்புள்ள வரல போல. சரி நாமலே விசாரிப்போம்” என்று எண்ணியவளாக தொண்டையைச் செருமிக் கொண்டு பேச்சைத் தொடங்கினாள் உபகாரம்.
“நாந்தான் அருளோட அப்பனப் பெத்தவ. மாப்புள்ள...” என இழுத்தவுடன் கூட்டத்தின் நடுவில் இருந்தவரின் கையைப் பிடித்துக் கொண்ட சாமி நாதன், “ ஏத்தா ஐயாவ ஒனக்குத் தெரியாதாக்கும்” என நக்கலாக்க் கேட்டார். அவர் உள்ளே நிழையும் போதே அடையாளம் கண்டு வைத்திருந்த உபகாரம் கையைக் குவித்து வணங்கியவளாக “சாமியத் தெரியாத பூசாரி இருப்பாகளா? ஆண்டவனே கெதின்னு கோயில்லயே கெடக்குற இந்தக் கெழவிக்கு ஆண்டவனுக்கு ஊதியஞ் செய்யுற ஐயாவத் தெரியாம போகுமா? இந்த சுத்துப்பட்டியில வேதம் படிக்கிற அத்தன பேருக்கும் ஐயாவத் தெரியுமே. எங்க ஊருல இந்த வருசம் காத்துச் சரியில்லா. மழதண்ணி தேராதுன்னு வெதக்காம உட்டவுக கூட ஐயா கெபி முன்னாடி முட்டி போட்டு உருக்கமா மழப் பாட்டு பாடுனாருண்டு தெரிஞ்சா களப்பைய தூக்கீட்டுக் கெழம்பிடுவாகளே. அம்புட்டு பயபக்தி. உங்க ஊரு கோவிலோட மகிமைக்கு ஐயா வுந்தான் காரணம். அவர் மொகத்துல இருக்குற அருளும் கொரல்ல இருக்கிற கெம்பீரமும். இவராட்டம் ஒருத்தரக் காங்க முடியுமா?” உபகாரம் பேசப் பேச எச்சலனமும் இன்றி எங்கோ பார்த்தபடி இருந்தார் ஐயா. உபகாரத்தம்மாளே தொடர்ந்தார் “ஆமாம் ஐயாவுக்கு எத்தன பிள்ளைக?” என்றதும், “இரண்டு ஆணும் அஞ்சுபொண்ணும்.” என்றார் சாமிநாதன். அப்ப மூத்தவுக என கிழவி தொடங்கியதும் “மூத்தவரு ஆண்டவனுக்கு ஊழியஞ் செய்யனுன்னு அங்கி மாட்டிக்கிட்டாரு” என பின்னால் இருந்தவர் குரல் கொடுத்தார்.
நல்ல குடும்பத்துல தான் பேத்தி வாழப் போகிறாள் என்னும் பெருமிதத்தோடு “ஆமாம் வெத ஒன்னு போட்டா சொர ஒன்னா மொளைக்கும். வித்து அப்புடியில்ல. இம்புட்டு பயபக்தியா ஆண்டவருக்கு சேவகம் பன்ற சாமியோட புள்ள. சம்சாரியான தான் ஆச்சர்யம். அதும் தலப்புள்ளைய கொடுத்துருக்காரே. அம்புட்டு பக்தி” என்று சொல்லிக் கொண்டே அப்ப ரெண்டாவது மகனாகத்தான் இருக்க வேண்டும் என ஊகித்தவளாக “அப்ப அடுத்தவுகளுக்கு வயசு என்ன இருக்கும்" என்றார். உடனே “அது இருவத்து மூனு இருவத்து நாலு இருக்கும்." கல்யாணங்கட்டி ஒரு வருசத்துக்கிட்ட ஆச்சு. ஒங்க பக்கத்து ஊருதான் பொண்ணு.” என்று சாமிநாதன் பேசிக் கொண்டு இருக்கையிலேயே உபகாரத்திற்கு திக்குமுக்காட்டிவிட்டது. “ஐயோ ஆண்டவனே அப்படி ஏதும் இருக்கக்கூடாதே” என பதறினாள். அவள் நினைத்தது போலவே நடந்துவிட்டது.
உபகாரம் மறுகிக் கொண்டு இருக்கும் போது பேச்சைத் தொடர்ந்தார் சாமி நாதன் “ஐயா சம்சாரம் ரெண்டு வருசத்துக்கு முன்னால தவறிப் போய்ட்டாக. பொம்பளப் புள்ளக எல்லாத்தையும் மருதையில படிக்க வக்கிறாக. மூத்தது டீச்சருக்கு படிக்குது அடுத்தது வைத்தியம் பாக்க படிக்குது. மத்த மூனும் அங்கயே மடத்துப் பள்ளியோடத்துல படிக்குதுக. இங்கின ஐயாவுக்குச் சமச்சுப் போட ஆரும் இல்லன்னுதான் ஆம்பளப் புள்ளைக்கு கல்யாணம் கட்டி வச்சது. இம்புட்டுக்கு அசலோ அந்நியமோ கெடயாது தாய் மாமன் மவளத்தான் கட்டிவச்சோம். ஆனா அது அம்புட்டு சூதானமா இருக்க மாட்டுது. ஆன்னா ஊன்னா அவுக வீட்டுக்குப் போயிருது. இருந்தாலும் பெருசா வேலவெட்டி செய்யுறது இல்ல. வீட்டுல மாடு கன்னு கெடக்குது. நெலங்கர நீச்சுன்னு இருக்கிற வீடுல்ல பொறுப்பா ஒரு பொண்ணு வேனுமில்ல. ஆண்டவனுக்கு ஊழியஞ் செய்யுற சாமி சாப்பாட்டுக்குத் திண்டாடலாமா. அதான் ஊருல இருக்குற பெரிய மனுசங்க எல்லாம் ஐயாகிட்ட எடுத்து சொல்லி சம்மதிக்க வச்சுப்புட்டோம். உங்க பேத்தி குடுத்து வச்ச புள்ளம்மா. சொத்து மட்டுமில்ல ஐயாவோட சம்சாரமுன்னு ஊருக்குள்ள மருவாதயா இராசாத்தியாட்டம் வாழப் போகுது.” இப்படி சாமி நாதன் கோர்வையாக பேசி முடிக்க, இறுதியில் அவள் காதில் விழுந்த ‘ஐயாவோட சம்சாரம்’ என்னும் வார்த்தை மட்டும் வாளைப் போல உபகாரத்தின் மனதில் இறங்கியது. துக்கம் தொண்டையை அடைக்க விழியில் திரளும் கண்ணீரை மறைக்க முடியாமல் திண்டாடினாள். இது நடக்கும் என ஊகித்தவளாக உபகாரத்தைப் பார்த்த இரக்கம் பதற்றத்தோடு, “ஏக்கெழவி வா ஒம்பேத்திய கூட்டியாரலாம்” எனக் கூறி விடாப்பிடியாக இழுத்துச் சென்றாள்.
…………………………(தொடரும்)…………………