இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

அருளு ப்குதி - 10

          விடிந்தால் அருளுக்குக் கல்யாணம்.

    அருளு எதிலும் மனம் ஒட்டாமல் இருந்தாள். நாளை தனக்குத் திருமணம். தன் வாழ்வின் முக்கியமான நாள் என்ற எந்த பரபரப்பும், பதட்டமும் ஏன் பயம் கூட இல்லாமல் அமைதியாக இருந்தாள் அருளு. ஐயா வந்து பெண் பார்த்துப் போன தொடக்க நாட்களில் சில நேரம் இப்படி வாழ்க்கைக்குள் நுழையப் போகிறோமே என்ற பயம் தோன்றும், சில நேரம் அம்மா இருந்து இருந்தால் இதெல்லாம் நமக்கு நடந்திருக்குமா என்ற கவலை தோன்றியது. வேறு சில நேரத்திலோ இந்த சிறையில் இருந்து ஏச்சுப் பேச்சுக்களில் இருந்து தப்பிக்கப் போகிறோம் என்ற எண்ணம் தோன்றியது. எல்லாம் மாறி மாறி தோன்றித் தோன்றியது. தொடக்கத்தில் இந்தக் கல்யாணத்தை எப்டியாவது நிறுத்திவிடுவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு உபகாரத்தம்மாள் அலையும் போது அவள் மனதில் அவ்வப்போது அது ஒரு அதிசயமாகவாவது நடந்து விடாதா எனத் தோன்றியது. பட்டாளத்திற்குப் போன அண்ணன் திடீரென வந்திறங்கி தன் கையைப் பிடித்துக்கொண்டு தன்னோடே அழைத்துக் கொண்டு போவதாக எல்லாம் கனவு கண்டாள். ஆனால் தொடக்கத்தில் இந்தக் கல்யாணத்தை நிறுத்திவிட அப்பாயி காட்டிய முனைப்பு இப்போது இல்லை என அவள் உணரத்தொடங்கியது முதல் அந்தக் கனவை எல்லாம் மூட்டை கட்டி தூக்கி வைத்துவிட்டாள். 

    உபகாரத்தம்மாளின் மன மாற்றத்திற்குக் காரணாம் புரியாமல் எப்படி எப்படியெல்லாமோ யோசித்துப் பார்த்துவிட்டு ஏதும் தோன்றாதவளாய், "ஏப்பாயி என்னமோ இந்தக் கண்ணாலத்த நடத்த விடமட்டேண்டின்னு கங்கணங்கட்டிட்டுத் திருஞ்ச இப்ப என்ன அப்பாயி ஆச்சு. சத்தமே இல்லாமா ஆயிட்ட" என உபகாரத்திடமே கேட்டுவிட்டாள். "என்னத்தா செய்ய? இத தடுக்கப் போயி அப்புறம் கெனால கூடா காங்கக்கூடாத வாழ்க்கைல. இல்ல இல்ல வாழ்க்கைங்கிற பொதகுழியில உன்ன இந்த சதிகாரி தள்ளி விட்டுட்டா என்ன பன்ன? அதுக்கு இது தேவலந்தாயி. அதான் நான் ஏதும் செய்யல. உம் மனசுக்கு நீ நல்லா இருப்ப தாயி. கலங்காம இரு" என்ற பதில் அவளிடம் இருந்து வந்த பின்னர் அருளு இந்த கல்யாணம் பற்றி நல்லதாகவோ கெட்டதாகவோ ஏதும் யோசிக்காமல் ஆனாள். ஏதும் அற்ற நிச்சலன நிலை அது. அதற்குப் பின் அவள் அப்பாயிடம் ஏதும் கேட்கவில்லை. நேற்று இரவு உறங்குவதற்காக பாய் எடுத்து விரித்த அருளுக்கு திடீரென உபகாரத்தின் நினைவு வந்தது நாளைக்குப் பின் இந்த வீடு தனக்கு அன்னியமாகிப் போக யாரென முன் பின் அறியாத ஒரு குடும்பம், புது ஊர், என்ன செய்வது எனக் கலங்கினாள். கூப்பிடும் தூரத்தில் இருக்கும் அப்பாயி அப்போது இங்கு இருக்க மாட்டளே என நினைத்ததும் அவள் கண்கள் கசியத் தொடங்கின.

    அப்பாயின் நினைவு வரவும் வேகமாக கொல்ல வாசல் வழியாக அப்பாயி வீட்டிற்குள் ஓடினாள் அருளு அங்கு தூக்கம் இல்லாமல் கையில் செபமாலையைப் பிடித்து உருட்டிக்கொண்டு ஒரு ஓரமாக சாய்ந்திருந்தாள் உபகாரம். "அப்பாயி..." என கண் முழுக்க நீரோடு அவள் மார்பில் சாய்ந்து அழத் தொடங்கினாள். ஏதும் ஆறுதல் சொல்லாமல் அவள் அழ்ம் மட்டும் அழுது தீர்க்கட்டும் என அமைதியாக அமர்ந்திருந்தாள் உபகாரம். பின ஒரு வழியாக அழுகை சிறு கேவலாக மாறி குறையத் தொடங்கியது. உபகாரம் பேச ஆரம்பித்தாள்."  நான் காலம் பூரா எம்புட்டோ போராடிப்புட்டேன். உங்க ஐயா சாகயில்ல எனக்கு பாஞ்சு வயசு. கண்ணாலங்கட்டி ஒரு வருஷங்கழியல. உங்க அப்பன் பொறந்து பத்து நாளுலையே உங்கைய்யா பாம்பு கடிச்சு என்ன மூழியாக்கிட்டுப் போயிட்டாரு. அடுத்து உங்களப் பெத்துப் போட்டுட்டு உங்க அம்மா போனா.  எந்த பெத்தவளும் தனக்கு சிலுவக்கபம்பு வைக்க  தம்புள்ள வேணும்னுதான் நெனப்பா . ஆனா நான் எழக்கக் கூடாத வயசுல உங்கப்பனையும் எழந்தேன்.  அனாலும் நான் என் உசுர கையில புடுச்சுக்கிட்டு இனேரம்மட்டுக்கு நிக்கிறேன். உங்கப்பம் போனப்புறம் நான் வாழனும்னு நெனச்சதே ஒனக்காண்டி தான். நம்க்கும் வயச்சாகுது நம்ம காலத்துக்கப்புறம் பொம்பளப்புள்ளைய வளக்க ஒரு பொம்பளயாளு வீட்டுல இருக்கனும்ட்டு தான் ஒங்க அண்ணனுக்கு இந்த எரக்கன்குட்டியக் கட்டுனேன். ஆனா அது என்னனா கள்ளிச்செடி, கத்தாளச்செடி கனக்கா குத்தலும் ஒரசலுமாத்தான் திரியுது. நீ இங்குன இருக்க வரைக்கும் அவ ஒன்ன நல்லா வாழ வுட மாட்டா. வெசம்மா தான் இருப்பா. எனக்கும் வயசு போச்சு. நீ இங்க இருக்கயிலயே நான் போயிட்டன்னா அப்புறம் அவ கேள்வி கேக்க ஆளிலாதவளா ஆயிருவா அப்புறம் ஒன் வாழ்க்கைய எந்த படுகுழியில தள்ளுவாண்டே தெரியாது. அதுனால நான் இருக்கையிலயே நீ இந்த வீட்ட விட்டு போயிடுறது நல்லது. நீ கலங்காத அதெல்லாம் நல்லா இருப்ப. விடிஞ்சதுல இருந்து அடையிற வர இந்தக் கெளட்டுச் சிறுக்கி செவிக்கிறதுக்கு பலந்தராம போகமாட்டரு அந்த ஆண்டவரு. நீயும் எப்பயும் அந்த ஆண்டவருக்குப் ப்யந்தவளா, பக்தியானவளா இரு. போற எடம் புது எடம். யாரு என்னனு தெரியாது அதுனால யாருக்கிட்டயும் தேவையில்லாம வாய விடாத. யாரையும் நம்பி உங்கஷ்ட்டத்த ஒப்பிக்காத. வீட்டு விசயம் வெளிய வரக்கூடாது. அதுனால என்ன கஷ்ட்டம்னாலும் ஆண்டவங்காலுல போயி வுழுந்துரு. அவரு பாத்துப்பாரு." என தன் மனதில் தோன்றியதையெல்லாம் அருளிடம் சொல்லி அவளைத் தயார் படுத்தினாள். "ஏன் அப்பாயி நீயும் என்னோட வந்துறேன்." எனக் கேட்டாள் அருளு இல்லத்தா, நம்ம ஊரு வாயி மோசமானது. கோண்டாங்கொடுத்தான் வீட்டுல போயி ஒக்காந்து சாப்புட்டா நல்லா இருக்காது. நான் மாசத்துக்கு ஒராட்டி வந்து ஒன்ன பாத்துட்டு ஓடியாந்துருறேன். அது மட்டும் இல்லட்டி நீ கண்ணாலங்கட்டிப் போனப்புறம் எனக்கு இங்கின முக்கியமான சோலி இருக்கு.." என்றாள் தீர்க்கமாக...

தொடரும்....

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...