தனக்குத் திருமணம் என அறிந்தது முதல் முகமெல்லாம் சந்தோசமும் வெட்கமும் அப்பியவளாக நெளிந்து கொண்டு இருந்தாள் அருளு. அவளது வெட்கம் இருக்கிறதே அது மிக அரிதானது. புதியவர்களைக் காணும்போது தலை சாய்த்து ஓரக்கண்ணால் பார்த்து வெள்ளந்தியாக சிரிக்கும் குழந்தையின் வெட்கம் அது. ஆம் அவள் குழந்தைதான். பிறந்தும் அம்மாவை இழந்தவளுக்கு வளரும் வயதில் தோழிகளும் இல்லை. ஏதும் அறியாத குழந்தையவள். தான் பருவம் அடைந்த செய்தியைக்கூட அது என்னவென அறியாது, தனக்கு ஏதோ நோய் என எண்ணி பயத்தோடும் வயிற்று வலியோடும் மூன்றுநாள் தவித்து பின் வெளியூர் சென்றிருந்த உபகாரம் திரும்பி வந்ததும் தனக்கு தீரா நோய் வந்ததாக அழுது தீர்த்து விட்டாள். பிறகே உண்மை தெரிந்தது. அத்தனை அளவிற்கு குழந்தையவள். அன்றுகூட அவள் பருவமடைந்த செய்தியை மகிழ்ச்சியோடு இரக்கத்திடம் ஓடி வந்து சொன்னதும் கொஞ்சமும் சந்தோசப்படாமல், “ஐயோ! நான் என்ன பண்ணுவேன்? இனி இந்த கருமாந்திரத்துக்கு வேற செலவளிக்கனுமா? பத்தாத்துக்கு இவள ஒருத்தங்கையில வேற புடிச்சுத் தள்ளனுமே. இந்த கருவாக்கட்டையக் கட்ட எவன் வருவான்?” என ஒப்பாரி வைத்தது உபகாரத்தின் மனதில் நிழலாடியது. தன் வாழ்வே மாறப் போகிறதாய் நினைத்து ஆனந்தத்தில் இருக்கும் அருளு உபகாரத்தைக் கண்டதும் “ஏக் கெழவி நான் நல்லா இருக்கேனா? என்ன அவுகளுக்குப் புடிக்குமா?” எனக் கேட்டாள். அப்படி கேட்டவளின் முகத்தைப் பார்த்ததும் அவளுக்கு அழுகையை அடக்கமுடியாமல் அடி வயிற்றிலிருந்து அழுகை கேவி வர, இப்போது எதையும் காட்டிவிடக் கூடாதென வாயைப் புடவையால் பொத்திக்கொண்டு ஒரு மூலையில் சென்று கொண்டு அமர்ந்தாள். அப்பாயிக்கு சந்தோசத்தில் வார்த்தை வரவில்லை என எண்ணிய அருளு இரக்கம் கொண்டுவந்து தந்த காப்பி டம்ளர்கள் நிறைந்த தட்டை எடுத்துக் கொண்டு கூடம் நோக்கி நடந்தாள்.
“குனிஞ்ச தல நிமிராம வரனும்” என மதினி கட்டளையிட அருளும் அதைக் கேட்டுக் கொண்டு அவள் பின்னே நடந்து கூடத்திற்கு வந்தாள். அவர்கள் முன்னே தட்டுடன் நின்றவளுக்கு மாப்பிள்ளை யாரெனப் பார்க்க ஆசை இருந்தாலும் மதினியின் கோபத்திற்குப் பயந்ததாலும் வெட்கத்தாலும் நிமிர்ந்து பார்க்காமல் தலை கவிழ்ந்தபடி நின்றாள். “ஆத்தா வந்திருக்கவுகளுக்கு காப்பித்தண்ணி குடுத்தா” என சவரிமுத்து சொன்னதும் “சரிண்ணே” என்று சொல்லிவிட்டு அனைவருக்கும் காப்பி கொடுத்தாள். இல்லை இல்லை காப்பி கொடுக்கும் சாக்கில் நோட்டம்விட்டாள். பின்னர் அனைவரும் வயதில் பெரியவர்களாக இருப்பதைப் பார்த்தவள், “ இவுகள்ள யாரும் மாப்புள்ளயாட்டம் இல்லையே. ஒரு வேள அவுக வரலையோ? ஆமாம் அப்படித்தான் இருக்கும்.” என எண்ணியவாறு நின்றாள்.
அருள் வருவதற்கு முன்பு வரை எந்த சலனமும் இன்றி அமர்ந்திருந்த ஐயா, அருளைப் பார்த்ததும் பதட்டம் தொற்றிக்கொள்ள தவித்தார். அங்கு அமர்ந்திருப்பதையே இறுக்கமாக உணர்ந்தவர், அருளு கொடுத்த காப்பியை ஒப்புக்கு வாங்கி அதைக் குடிக்காமல் தரையில் வைத்தார். “மாப்புள்ள காப்பிய குடிக்கலையா? எடுத்துக் குடிங்க.” என அண்ணன் கூறியதும் மாப்பிள்ளையா? யாரது? எனக் குழப்பத்தோடு நிமிர்ந்து பார்த்த அருளு டம்ளரை எடுக்காமல் தரையில் வைத்திருந்த ஐயாவைக் கண்டதும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனாள். சவரிமுத்து சொன்னதைக் கேட்டும் காப்பியை அவர் குடிக்கவில்லை. இதுவரை ஏதும் பேசாமிருந்த ஐயா தொண்டையைச் செருமி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவராக, “இல்ல நீங்க தப்பிதமா நெனச்சுக்கக் கூடாது நாங்க போயிட்டு தாக்க சொல்லியனுப்புறோம்.” என்று கூறியவாறே துண்டை உதறிக் கொண்டு எழுந்தார்.
“நாங்க போயிட்டுத் தாக்க சொல்லியனுப்புறோம்” என ஐயா சொன்னதும் கூடத்திலிருந்த அனைவரும் உறைந்து போயினர். அருளுக்கு இதற்காக அழுவதா இல்லை மகிழ்வதா என்று புரியாத குழப்பம். இறுதியில் மாப்பிள்ளையாக வந்திருக்கும் தன் தந்தை வயதைக் கடந்த பெரியவர் இந்தப் பெண் வேண்டாமென மறைமுகமாக சொன்னதற்காகவோ அல்லது அண்ணனும் மதினியும் தனக்கு இப்படி ஒரு வரனை ஏற்பாடு செய்ததற்கோ அல்லது இரண்டிற்குமாகவோ அவளது மனம் வெதும்பி கண்கள் குளம் கட்டின.
சூழலை உணர்ந்த இரக்கம் அருளின் கைகளைப் பிடித்து அவளை உள்ளே இழுத்துச் சென்றாள். “என்னங்கைய்யா பட்டுனு எந்திரிச்சுட்டீங்க சத்த இருங்க” என சாமிநாதன் குரல் கொடுக்க, இந்த இடத்தை விட்டுவிடக் கூடாது என தீர்க்கத்தோடு இரக்கத்தின் அம்மா பேச ஆரம்பித்தாள். “ஐயா! நான் ஒங்களவிட வயசுல சின்னவதான். ஆனாலும் இப்புடி பேசுறேன்னு நீங்க தப்பிதமா நெனச்சுப்புடக்கூடாது. ஊருபூரா காவாலிப் பயலுகளும் பயமவளுகளுமா திரியிதுக. எவன் வீட்டுல எளவு விழும்னுட்டு வெறும் வாய மென்னுக்கிட்டு அலையுதுக. இப்ப ஒரு பொட்டப்புள்ளய கட்டுறேன்னு வீடேறி வந்துப்புட்டு அப்புறம் இப்புடி துண்ட ஒதறுனாக்க வெறும் வாய்க்கு அவுலுப் போட்டப்புல ஆவாதா? நாளைக்கு ஊருல தெருவுல இருக்கவுக பொண்ணப்பத்தி எப்புடி பேசுவாக. சத்த யோசுச்சுப் பாருங்க. வீடேறி வருமுன்ன வெளிய தெருவுல விசாரிச்சிருக்க வேண்டாமா? அப்பனாத்தா இல்லாத புள்ள. இப்புடி ஆயிப்போச்சுன்னா எவன் அவளக் கட்டுவான். ஏம்மவதான் இந்த வீட்டுலக் கெடந்து சீப்படனும். இப்புடி காப்பித்தண்ணிகூட குடிக்காம போனா நாளக்கி இந்த வீட்டு உத்திரமாட்டம் அந்தக் குட்டி வீட்டோடக் கெடக்க வேண்டியதுதான்.” என இடைவிடாமல் ஒப்பாரித் தொனியில் பேசி ஐயா மனதில் குற்ற உணர்ச்சியை விதைத்தாள்.
பேசிக்கொண்டே இருந்தவள் மேலும், “நீங்க பெரிய மனுசன்னு...” என ஏதோ சொல்ல வர அவளை இடைமறித்த ஐயா, “ஆமாம்மா இப்ப நீங்க சொன்னீகளே பெரிய மனுசன்னு அதுக்குத்தான் யோசிக்குறேன்.” என்றதும் இரக்கத்தின் அம்மா ஏதோ சொல்ல வாயெடுத்தாள். “கொஞ்சம் இருங்கம்மா” என குறுக்கிட்ட சாமிநாதன் ஐயாவின் மனதைப் புரிந்தவராக, “ஐயா! கொஞ்சம் வெளிய வாங்கய்யா” என்று எழுந்து ஐயாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தார். அவர் ஐயாவிடம் பேசத் தொடங்கும் முன்னமே உள்ளே இருந்து பொரும் சத்தம் கேட்டது.
ஐயா எழுந்ததும் அருளை உள்ளே இழுத்துச் சென்ற இரக்கம் அவளை தீராத பெரும் கோபத்தோடு ஆத்திரம் தீரும்மட்டும் அடிக்கவும் மிதிக்கவும் திட்வுமென அவளை இம்சிக்கத் தொடங்கினாள். உள்ளே நடந்த ஏதும் அறியாமல் ஒரு ஓரத்தில் அமர்ந்து கேவிக் கொண்டிருந்த உபகாரத்தம்மாள் இதைப் பார்த்து அதிர்ந்தவளாக, “ஏத்தா தாயில்லாத புள்ளய இப்புடிப் போட்டு அடிக்கிற. இப்ப என்ன ஆயிப்போச்சு” எனக் கேட்டாள். உடனே அந்த ஆங்காரத்தேட உபகாரத்தின் பக்கம் திரும்பி, “என்ன ஆச்சா? எல்லாம் நாசமாப்பொச்சு. அந்த கெடக்குதே ஒரு ஒரலு இல்லாத அம்மிக்கல்லு அதுமாரி ஒன்னத்துக்கும் பிரயோசனமில்லாம ஒம்பேத்தி வீட்டோடக் கெடக்கப் போறா. என்ன சொன்ன தாயில்லாப் புள்ளயா? இவள நானா தாயில்லாமல் ஆக்குனேன். இது ஒரு பொனந்திண்ணிக் கழுகு. பொறந்ததும் ஆத்தாள முழுங்குனா. வளரயில அப்பன முழுங்குனா. இப்ப இந்த வீட்டோடக் கெடந்து ஏம் உசுற குடிக்கப் பாக்குறா. ஏற்கனவே ராசி கெட்டக் கழுத. மூஞ்சியாச்சும் பாக்குற மாதிரி செத்த செவப்பா இருக்கக் கூடாது. பத்துநாளா வெளக்காம கங்குலயேக் கெடந்த கலுச்சட்டியாட்டம் இப்புடி கருகருண்டு இருந்தா இவளக் கெட்ட எவன் வருவான்? அதான் அந்தக் கெழவனே ஒம்பேத்திய வேண்டானுட்டாச்சு.” என இரக்கம் சொல்லி முடித்ததும் உபகாரத்தம்மாளுக்கு போன மூச்சு திரும்ப வந்தது போல் இருந்தது.
உபகாரத்தம்மாள் மனது அதுவரைத் தவித்துக் கொண்டிருந்தது. இந்த சுத்துவட்டாரத்துக்கே சாமிமாதிரி மனுசன் வீடேறி வந்து கேக்குறப்ப முடியாதுன்னு சொன்னா தப்பாப் போயிடுமே.ஆண்டவனே நீதான் ஏதாச்சும் ஒரு அதிசயத்த நடத்தி இந்தக் கல்யாணத்தநிறுத்தனும்” என அதுவரை மனதிற்குள்ளே பிரார்த்தித்துக் கொண்டிருந்தவள் தன் வேண்டுதல் கேட்கப்பட்டது விட்டதாக எண்ணி மகிழ்ந்தாள். ஆனாலும் தன் மகிழ்வைக் காட்டிக் கொள்ளாமல் சோகமான முகத்தோடு, “விடுத்தா. என்ன செய்யுறது? அவருக்கு குடுத்து வக்கலை. இவரு போனா வேற யாருமே ஒலகத்துல இல்லயா? இவளுக்கேத்த ராசா ஒருத்தன் வரத்தான் போறான்.” என்றதும் கோபத்தில் மேலும் தகித்த இரக்கம், “ஆமாம் இந்த மொசரக்கட்டைக்கு ராசா வரப் போறாகளாம். கண்ணு தெரியாத பய கூட இந்த அதிர்ஷ்டம் கெட்டவள கட்ட வர மாட்டான். இதெல்லாம் பொறக்கலைன்னு யாரு அழுதா? கிறுக்குப்பயகூட ஒம்பேத்திய சீண்ட மாட்டான். காலம்பூரா இவள நான் சொமக்க முடியாது. பேசாம மருதப் பக்கம் கூட்டிப்போயி தண்டவாளத்துல தள்ளிவுட்டு ஓடியாறனும். இல்லாட்டி திங்கிற சோத்துல மருந்தக் கலந்து குடுத்துறனும். அப்பத்தான் இந்த சனியன் என்ன வுட்டுத் தொலயும். என ஆத்திரம் தீருமட்டும் அவளைத் திட்டியும் அடித்தும் கொண்டிருந்தாள். அவளைத் தடுக்க முயன்ற உபகாரத்தம்மாளுக்கே ஐந்தாறு அடி விழுந்தன.
வலிதாளவில்லை என்றாலும் கூடத்தில் இருந்தவர்கள் இன்னும் போகவில்லை என்பதால், சத்தமாக அழ முடியாமல் கேவிக் கொண்டும் அனத்திக்கொண்டும் இருந்தாள் அருளு. இங்கே நடப்பதையெல்லாம் சன்னலருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்த ஐயாவைப் பார்த்த சாமிநாதன் தான் பேசவேண்டியதை எல்லாம் சூழலே பேசிவிட்டதாக உணர்ந்தவர் ஐயாவைப் பார்த்து, “நீங்க என்ன யோசிக்கிறீகன்னு எனக்குத் தெரியும். நாலையும் யோசிக்காமலையா ஒங்கள இங்க கூட்டியாந்திருப்பேன்? அது நல்ல புள்ள பாவம் இங்கின கெடந்து பாடாத படுது. அதுக்கும் ஒரு விமோச்சனம் கெடைக்கும். யோசிக்காம வாங்க. மத்தத பொறவு பேசிக்கலாம்” எனக் கூறி ஐயாவை உள்ளே அழைத்துச் சென்றார் சாமிநாதன்.
…………………………தொடரும்………………………