“ஆத்தா அருளு எந்திரித்தா. சூரியஞ் சுள்ளுனு அடிக்கிற நேரமாச்சு. இம்புட்டு நேரமா தூங்குறது. எந்திரியாத்தா” இந்தக் குரலைக் கேட்டதும் அருளுக்கு ஏகப்பட்ட சந்தோசம். மதினி இப்புடி பாசமா பேசுனா எம்புட்டு நல்லா இருக்கு. ஆனா கனவுல தானே தேனா பேசுது. இதுவே நேருல பேசுமா? உறக்கத்தில் இருந்து எழ விரும்பாதவளாக சிரித்துக்கொண்டே கண் மூடிக் கிடந்தாள் அருள். மீண்டும் ஒருமுறை மதினியின் கனிவான குரல். ஐந்தாம் முறையாக மதினி அழைப்பதை ரசித்துக்கொண்டிருந்த அருளுக்கு சூரியனின் வெம்மை கண்ணாடி ஓட்டைத் தாண்டி முகத்தில் உரைத்ததும்தான் நடந்தவை எதுவும் கனவல்ல என்பதை உணர்ந்தாள். அப்படியானால் மதினி... இந்த எண்ணம் வந்ததும் படுக்கையை விட்டு பட்டென எழுந்து நின்ற அருளின் அருகே கையில் டம்ளருடன் நின்றுருந்தாள் மதினி. “அம்மாடி காப்பித் தண்ணிய எடுத்துக் குடித்தா”. இந்தக் குரல் வந்த நொடியில் சாவி தந்த பொம்மை போல படக்கெனடம்ளரை எடுத்து காப்பியைக் குடித்தாள். “ஆத்தா நேரமாச்சு ஊருணி பக்கம் போயி குளிச்சுட்டு வா ஆத்தா. மறக்காம அந்த மாடாக்குழியில இருக்கிற சீவக்காய எடுத்துட்டு போயி தலைக்கு தண்ணி ஊத்திட்டு வா” மதினியின்குரலைக் கேட்டதும் “எப்பவும் உப்பு சோப்பு தானே தலைக்குப் போட்டுக் குளிப்போம். இது என்ன புதுசா” என யோசித்தாலும் எதையும் பேசாமல் மாற்று ஆடையையும் சியக்காயும் எடுத்துக்கொண்டு ஊரணிக்கு சென்றாள் அருளு. எப்போதும் குளிக்கும் இடத்தில் இறங்கி அருளு வேகமாக தண்ணீருக்குள் மூன்று முறை முங்கி எழுந்து தலையில் சீயக்காயத் தேய்த்து மீண்டும்
முங்கி எழுந்தாள். மஞ்சள்உரசி உரசி நிறம் மாறியிருந்த கல்லில் வேக வேகமாக மஞ்சளை உரசி முகம், கழுத்து, கை, கால் எல்லாம் பூசி மீண்டும் ஒருமுறை தண்ணீருக்குள் மூழ்கி எழுந்தாள் அருள். நீரிலிருந்து எழுந்தவள் முகத்தைப் பார்த்து சூரியனே கண்கூசி நிற்கிறது. அவ்வளவு அழகானவள் அவள் பதினைந்து வயது அவளுக்கு. அதை அப்படியே காட்டும் அழகி அவள். வாலிப்பான உடல், பொலிவான முகம், புருவம், கண், மூக்கு, உதடு என அத்தனையும் அழகு. பார்த்துப் பார்த்து செதுக்கிய சிற்பம் போன்ற அழகி அவள். சிற்பம் என்றாள் சாதாரண சிற்பம் அல்ல கோவில் தூண்களில் கையில் விளக்கோடு நிற்குமே பாவை விளக்கு அந்த விளக்கில் நெய் வார்த்து திரியிட்டு தினம் தினம் எரித்தால் அதன் புகையும் எண்ணெய்ப் பிசுக்கும் சேர்ந்து பளபளக்குமே அத்தகு அழகு அருள். ஆம்
அருள் ஒரு கருத்த பேரழகி.
குளித்துக் கரையேறிய அருள் தாமதிக்கால் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினாள். பொதுவாக ஊரணிக்கு வரும் போதெல்லாம் அவள் அதன் ஒவ்வொரு அசைவையும் ரசிப்பாள். நீர்பரப்பில் அடுத்தடுத்து எழும் வட்டங்களை, படியில் அமர்ந்து மஞ்சள்தேய்க்கையில் காலில் சிச்சுக்காட்டும் மீன்களை, ஊரணி நீரின் குளுமையை, அருகில்உள்ள அலமரம் காற்றுபட்டு ஏற்படும் ஓயாத சலசலப்பை என தினமும் அவள் இரசித்த குளியலை இன்று கடமையைப்போல் நிறைவேற்றி முடித்தாள். எப்போது குளிக்கவரும் அவளைத்துரத்தும், “வெரசா வந்துடு” என்னும் வார்த்தையை இன்று அவள் மதினி சொல்லவில்லைதான். ஆனாலும் குளியலை ரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை. நேற்று முதல் வீட்டில் நடக்கும் எல்லாம் அவளுக்கு ஆச்சரிமாகவே உள்ளது. அதிலும் மதினியின் திடீர் மாற்றம் அருளைத் திக்கு முக்காடச் செய்துவிட்டது.
அருளின் மதினி இரக்க மேரி. வயது என்று பார்த்தால் அருளைவிட ஏழு வயது பெரியவளாக இருப்பாள். ஏழாண்டுகளுக்கு முன் வீட்டின் மூத்த மருமகளாக அருளின் அண்ணன் சவரி முத்தின் மனைவியாக வந்தாள். மற்றவர்களிடம் எப்படியோ தெரியாது ஆனால் அருளு விசயத்தில் அவள் பெயரில் இருக்கும் இரக்கத்தில் துளியும் அவள் மனதில் இருந்ததில்லை. பொதுவாக அவள் அருளை வீட்டு வேலைக்காரி போலத்தான் நடத்துவாள். தினமும் காலை அவள் எழுவதற்கு முன்னமே அருள் எழுந்து மாட்டுக்கொட்டத்தில் உள்ள சானியை அள்ளி, கூட்டி, கழுவி, மாடுகளைக் குளிப்பாட்டி, சாம்பிராணி போட்டு சுத்தப்படுத்தி, பால்காரன் கறக்க வந்த பின் அவன் கூட இருந்து பாலை அளந்து ஊற்ற வேண்டும். பின் அவன் வீட்டிற்கு எனத் தரும் பாலை வாங்கி இரவு தூங்கும் முன் சுத்தம் செய்த அடுப்பில் காய வைத்து அது பொங்கும் முன் முத்தம் கூட்டி தெளித்து கோலமிட்டு, புறவாசலும் பெருக்க வேண்டும். அத்தனையும் முடிந்து காய்ச்சிய பாலில் காபி போடும் போது இரக்கம் எழுந்து வருவாள். பின் அவள் கட்டளையிடும் வேலைகளைப் பம்பரமாக சுழன்று செய்ய வேண்டும். அவள் என்றாவது வேலையில் சுணங்கினாலோ அல்லது இயலாமையை முகத்தில் காட்டினாலோ அவ்வளவுதான் அன்று உறங்கும் வரை ஏச்சும் பேச்சும் அடியும்தான் மிஞ்சும்.
எல்லாப் பெண்களையும் போல தன் வயது பெண்களோடு சேர்ந்து கொண்டு குளத்தங்கரையிலும், கிணற்றுமேட்டிலும் கதை பேசி சிரிக்க வேண்டும், திருவிழா நாட்களிலே சீவி சிங்காரித்து புத்தாடை உடுத்தித் தேர் பார்க்க போக வேண்டும், கூத்துப் போடும் நாட்களில் கூட்டத்தோடு சேர்ந்து போய் பார்த்துக் களிக்க வேண்டும் என்பதெல்லாம் அருளுக்குக் கனவிலும் நடக்காதவைதான். ஆனால் என்றும் இல்லாத திருநாளாக நேற்று கூத்து பார்த்து வரச்சொல்லி பக்கத்து வீட்டு இராக்கோடு அனுப்பிவைத்தாள். அப்படி மதினி தன்னை ஏன் அனுப்பினாள் என்னும் கேள்விக்கே விடை தெரியாமல் இருக்கும் அருளுக்கு இன்று காலை நடந்தது இன்னும் அதிர்ச்சியைத்தான் தந்தது. கூத்து பார்த்துவர நடுச்சாமம் தாண்டி விட்டது. தாமதமாக படுத்ததால் விடிந்ததே தெரியவில்லை. போதுவாக இப்படி ஒன்று நடந்திருந்தாள் அவ்வளவுதான் வீட்டை இரண்டாக்கியிருப்பாள். ஆனால் இன்று காலை... இப்படியே யோசித்துக் கொண்டு வந்தவளுக்கு கால்கள் வீட்டு வாசலில் ஏறியது கூட தெரியவில்லை. “வாத்தா மகராசி. இந்தா இந்தப் பொடவையக் கட்டிட்டு வா” மதினியின் குரல் கேட்டுத்தான் சுயம் உணர்ந்தாள். மதினி கைகளில் பச்சை நிறத்தில் வாடாமல்லி கரை போட்டப் பட்டுச்சேலை. ஐயோ பட்டுச்சீலையா? எனக்கா?” உற்சாக மிகுதியால் கத்திய பின்தான் அவளுக்குத் தெரிந்தது தன் குரல் இத்தனை இனிமையானது என. விழிகள் விரிய புடவையைத் திருப்பி திருப்பி பார்த்துக் கொண்டே நின்றவளிடம், “வெரசா கட்டிட்டு வாடி” எனக் குரல் கொடுத்தாள் மதினி. குரலில் கடுகடுப்பு ஏறியதை உணர்ந்ததும் உள்ளே ஓடி உடுத்திக் கொண்டு சட்டென திரும்பி வந்தாள் அருளு. “ம்.. நல்லா இருக்கு” ஒப்புக்குச் சொல்லிவிட்டு கழுத்தில் ஒரு தங்கச்சங்கிலியை மாட்டிவிட்டு தலைவார ஆரம்பித்தாள் இரக்கம். என்ன நடக்கிறது? அருளைப் போலவே வாயடைத்துப் போனாள் உபகாரத்தம்மாள்.
உபகாரத்தம்மாள் அருளின் தந்தை வழி பாட்டி. அப்பாயி என்று அவளை அருளு வாய் நிறைய அழைப்பாள். அருளு பிறந்ததும் அவளது அம்மா இறந்துவிட்டாள். பின் ஆறு வயதாக இருக்கையில் அவளது அப்பாவும் இறந்து போனார். அம்மா அப்பா இல்லாம பெண் குழந்தை எப்படி. வளரும் என எண்ணிய இந்த உபகாரத்தம்மாள் தான் அருளின் அண்ணனுக்கு இரக்கத்தைத் திருமணம் செய்து வைத்தாள். ஆனால் அது எவ்வளவு பெரிய தவறு என்பது ஓராண்டுக்குள்ளாகவே விளங்கிவிட்டது. அந்த வீட்டின் செல்லப்பிள்ளை அருளு வேலைக்காரியாகிப் போனாள். இதையெல்லாம் கண்டும் அவளது அண்ணன் சவுரி ஏதும் பேசாமல் மௌனமாய் ஏற்கக் கண்டு, பொறுக்க முடியாத உபகாரத்தம்மா பக்கத்தில் இருக்கும் இடத்தில் குடிசை போட்டுக்கொண்டு தனியாகப் போய்விட்டாள். அவ்வப்போது வந்து எட்டிப் பார்க்கும் உபகாரத்தம்மாளுக்கு இரக்கத்தின் இன்றைய மாற்றம் மிக அதிர்ச்சி தந்தது. ஆர்வம் தாளாம ஓடி வந்துவிட்டாள். வந்தவள் என்ன என்பது போல் புருவம் உயர்த்தி சாடைக்காட்ட அருளு தெரியாது என தோளைக் குலுக்கி உதட்டைப் பிதுக்கினாள். அங்கே நடப்பதை ஊகித்தவளாக அருளின் தலையில் பூவை வைத்துக்கொண்டே உபகாரத்தம்மாளைப் பார்த்து, “ஏக்கெழவி இன்னைக்கு ஒம்பேத்திய பொண்ணு பாக்க வர்ராக” என்றாள் இரக்கம்.
..........................……
தொடரும்