இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

அருளு பகுதி - 6

    உபகாரத்தம்மாளின் கோபப்பார்வையின் பொருள் புரிந்தவராக அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானார் சாமிநாதன். ஆனால், ராசாமணி அவரை விடுவதாக இல்லை. இங்க வாங்கையா வாங்க. பாத்துட்டு பாக்காத மாதிரி மூஞ்சியத் திருப்பிட்டு போறீக. வந்து ஒருவாய் சாப்பிட்டு போங்க என விடாப்பிடியாக அழைத்து அவருக்கும் உபகாரத்தம்மாளுக்கும் இலை போட்டு பரிமாறிக்கோண்டே, "இந்தா இந்த பெரிய மனுஷனுட்டத்தான் சொல்லி பேச அனுப்புனேன். எப்புடியாச்சும் பேசி முடிச்சிரும்னு. ஆனா இரேண்டு நாள்ல்யே வந்து கைய விரிச்சுட்டாரு. இங்க பாருங்கய்யா. நான் ஒன்னும் ஒன்னுமத்தவ இல்ல. நெலங்கர கெடக்கு. பொட்டைய எல்லாம் கட்டிக்குடுத்து சீர் செனத்தி அத்தனையும் முடிச்சுப்புட்டேன். மூத்தகுட்டிக்கு மட்டுந்தான் பொண்ணு. அதுவும் பெரியமனுசியாகி மாமஞ்சீரெல்லாம் செஞ்சு முடிச்சாச்சு. நல்ல பொண்ணா பார்த்து வெரசா முடிங்க." மூச்சுவிடாமல் கொட்டி முடித்தால். உபகாரம் காதுகளில் எதுவும் விழவில்லை. ஏன் நம்ம இரக்கம் வேறு வரணே வரலைன்னு பொய் சொல்லனும். இவ கோவக்காரிதான். படபடண்டு பேசி வம்பவாங்கிக் கட்டுறவதான். ஆனாலும் நல்ல மனசும் உண்டு. தயில்லாத புள்ளையின்னா கொஞ்சமாச்சும் பாத்திருப்பா. மவங்கொறகாரெங்கிறதால வர்றவளை நல்லாவே பார்த்துப்பா. ஆனாலும் இவ மவனுக்கு ஏன் வேண்டாம்னு சொன்னா? வீட்டிலேயும் யாருட்டயும் இதப்பத்தி ஒரு வார்த்த மூச்சு விட்டதா தெரியலையே ஏன்? இந்தக் கேள்விகளோடே, அமர்ந்த கடைமைக்காக இரண்டுவாய் உண்டுவிட்டு எழுந்தாள். அதற்குமேல் நிலை கொள்ளாதவலாக காரணத்தை இரக்கத்திடமே கேட்டுவிடுவது எனத் தீர்மானமாக ஊரை நோக்கி நடந்தாள்.

    வயல் வழியாக நடந்தாள் சட்டென சென்றுவிடலாம் என நினைத்தவளாக ஒர்ரணி மேட்டில் ஏறி நடக்கத்தொடங்கினாள். யாரோ தன்னை அழைப்பதாக உணர்ந்து, திரும்பிப்பார்த்தாள். கொஞ்சம் தூரத்தில் ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டு இருந்தார் சாமிநாதன். உபகாரத்தம்மாளுக்கு அவரிடம் பேச விருப்பம் இல்லைதான். ஆனாலும் அவர் வரும் வேகத்திற்கு எப்படியும் தன்னை வந்து பிடித்துவிடுவார் என நினைத்த உபகாரம், 'என்ன?' என்பதாக திரும்பி நின்று கோபமாக முறைத்தாள். விருவிருவென கம்மாக்கரையில் ஏறிவந்த சாமிநாதன், "என்னத்தா பார்வையிலேயே எரிச்சுப்புடுவ போலையே?  ஏம்மால என்ன கோவமாத்தா? எனக்குத் தெரிஞ்சவரை நான் ஒம்பேத்திக்கு நல்லதுதான் செஞ்சுருக்கேன். ஆனா நீ என்னடாண்டா ஏதோ காங்கக்கூடாதவனைக் கண்டதாட்டம் கண்ணுலையே கொல்லிக்காட்ட நீட்டுற." எனக் கூறிவிட்டு உபகாரத்தம்மாளின் பதிலுக்காக நின்றார்.

    ஆனால், அவர் பேச்சு உபகாரத்தம்மாளின் கோபத்தைக் கிளறுவதாகவே இருந்தது. "நல்லது செஞ்சியா? என்ன நல்லதுய்யா செஞ்ச? இப்புடி பச்சமண்ணப் புடிச்சு பாழுங்கெணத்துல தள்ளுறதுதான்  ஒங்க ஊர் பக்கம் நல்லதும்பாகளா? இந்தா இப்ப பாத்த ராசாமணி கோவக்காரிதான், ஆனா கொஞ்சமாச்சும் நெஞ்சில ஈரங்கொண்டவ. அவமவனுக்குக் கேட்டுருக்கா? எனக்கு இந்த சேதி தெரிஞ்சு இருந்தா சட்டுண்ணு கட்டிகொடுத்து இருப்பேன். அவ மவங்கிறுக்கந்தான். ஆனா எம்பேத்தி கொணத்துக்கு அவ எல்லாத்தையும் மாத்தி அவன ராசாவாட்டம் ஆக்கி இருப்பா. நீரு உம்ம ஊர் பெரிய மனுஷனுக்கு வேணுமுன்னு, இராசாமணி கேட்ட சேதிய எங்கக்கிட்ட சொல்லாமலேயே மறச்சுட்ட. காரியக்காரரையா ஆனாலும்..." என மேலும் ஏதொ சொல்ல வாயெடுத்தவளை இடைநிறுத்திய சாமிநாதன், "ஆத்தா செத்த இருங்கத்தா. என்னா நடந்துவச்சுண்டு வெவரம், வெவெகாரம் தெரியாம இப்புடி பொரிந்தா எப்புடி? ஆமா, இந்த இராசாமணி மவனுக்கு உம்பேத்தியக்கேட்டது உண்ம தான். அது தட்டிப் போனதும் உண்ம தான். ஆனா அத நாந்தட்டலத்தா. நானும் உன்னாட்டந்தான் நெனச்சேன். சுத்திமுத்தி விசாரிக்காம நான் எந்த வீட்டு கல்லியாண சேதில்லையும் தலையிடுறது இல்ல. அப்புடி உம்பேத்தி பத்தி கேக்கயில எல்லாம் நல்ல விதமாச் சொன்னாக, கொணமான பொறுமையான பக்தியான பொண்ணு கிறுக்குப்பயல எப்புடியும் ஒரு ஆளாக்கிரும்னுதான் நெனச்சேன். உம்பேரனப் பாத்துக்கேட்டேன். எம்பொஞ்சாதிட்டக் கேளுங்கன்னுட்டான்.  சரின்னு அவளப் புடிச்சுக் கேட்டா மக்கானாத்து அது ஆத்தா வீட்டுக்கு வரச்சொல்லுச்சு. நானும் சரின்னு போனேன்" என்ற சாமினாதனை இடைமறிச்சு "ஏன் அவ ஆத்தா வீட்டுக்கு கூப்பிட்டா? இங்குக்கு மாளிகையாட்டம் வீடு கெடக்கையில அங்கெனப் போயிதான் பேசனுமாக்கும். யார்வீட்டு சமாச்சாரத்த யார்வீட்டுத் திண்ணையில பேசுறது."  என படபடத்து விட்டு சாமிநாதன் தொடர இடம் விட்டாள்.

    " நானும் மொதல அப்புடித்தான் ஆத்தா யோசிச்சேன். அப்புறம் கல்யாணப் பேச்சுங்குறதால அடுத்தவுக யாரும் கலைச்சிருவாகன்னு அங்க வரச்சொல்றாகன்னு நெனச்சுப் போனேன். போய் நான் சொன்னதும் ஒரேம்ட்டா வேண்டாம்னுட்டா. நானும் பையன் புத்தி மட்டுன்னு யோசிக்கிறியான்னு கேட்டா அது இல்லைங்குறா உம்பேரம்பொண்டாட்டி."  அது இல்லையா, அப்புறம் வேற எதுக்காம் வேண்டாம்னா?" என விழி விரிய கேட்டாள் உபகாரத்தம்மாள். "அதுதான் எனக்கு  ஆச்சர்யமாப்போச்சு. அப்புறந்தான் அவ ஏன் உங்க வீட்டுக்கு வர வேண்டாம்னு சொன்னாண்டு புரிஞ்சுச்சு. ஆமாம் உம்பேரெம் பொஞ்சாதிக்கு யாராத்தா இரக்கம்னு பேரு வச்சா ஆத்தாத்தா இம்புட்டு மோசமானவளா இருக்கா." விஷயத்தைச் சொல்லாமல் சாமி நாதன் பேசிக்கொண்டே இருந்தார். பொறுமையில்லாதவளாக, "அட அவ பேருபத்தி இப்ப என்ன வெசாரிப்பு வேண்டிக் கடக்கு. அப்புடி அவ என்னதான் சொன்னா? அதச்சொல்லுப்பு மொதல்ல" என்றாள் உபகாரம். அவளுக்கு மாப்புள்ளை மட்டும் வெவரங்கெட்டவனா இருந்தா போறாதாம். மாப்புள்ளை அப்பனாத்தாளும் முட்டாப் பயமக்களா இருக்கனுமாம். இல்லாட்டி யாரும் அத்த அனாதப்பயலா இருக்கனுமாம். இப்ப அந்த ராசாமணி மவனக்கட்டுனாக்க அவ மவனுக்குக் கூறுவாறு தெரியாது.  ஆனா அவன் ஆத்தா? அவ ம்புட்டு வெவரக்காரி. அதுனால அவ சீர் செய்யி, சொத்தக்குடு. அவ அத்தாவுட்டு நகையக்குடுன்னு கேட்டு அரிப்பாளாம். அதுனால யாரும் இல்லாத அனாதப்பயலா கூறுவறு இல்லாத கிறுக்கு, மண்ணாந்து பயலா இருந்தா சொல்லுங்கன்னுட்டா." என்றார்.

    சாமிநாதன் பேசியதைக்கேட்டு அதிர்ந்து போனாள் உபக்காரம். இம்புட்டு வெசமா அவள். ஏதோ கோவக்காரின்னு தானே நான் நெனச்சேன். இப்புடி ராட்ட்சசியா, வெனையா என் வீட்டுக்குண்டு வந்து வாச்சுருக்காளே எனக் கலங்கிப்போனார். ஆனாலும் சமாளித்துக்கொண்டு, " அது சரிய்யா வேண்டாமுன்னா நீரு பேசாமப் போக வேண்டியது தானே. அது என்ன அந்த இளங்கொடிய உளுத்தக்கட்டையில சுத்துனாப்புல எம்பேத்திய இப்புடி கொண்டோயி முடிச்சுப்போட்டுப்புட்ட?"  என்றாள். உடனே சாமிநாதன், "இல்லத்தா மக்கா நாத்து திரும்பப் பேசிப்பாப்போம்னு அவ ஆத்தா வீட்டுக்குப் போனேன். அது சரிப்படாதுன்னு ஒரே வெட்டா வெட்டுனது மட்டுங்காணாதுன்னு அந்த ஆனந்தூரு சீனிப்பய இருக்கன்ல அவனுக்குக் கட்டிக்கொடுக்கலாம்னு ரோசனை இருக்குதுன்னும், அவுகளுட்டக் கொஞ்சம் கேட்டுச்சொல்லொன்னும்  சொன்னா. எனக்குன்னா பக்குன்னு ஆயிப்போச்சு. நல்ல புள்ள, பக்தியான புள்ள உம்பேத்தி அதக்கொண்டுபோயி அப்புடி தள்ள எனக்கு மனசு இல்ல. நான் மாட்டேன்னு சொன்னா இன்னொருத்தருக்கிட்ட விசாரிச்சு அத ஆக வச்சுருப்பா அந்த எரக்கம். அதான் நான் முந்திக்கிட்டு ஐயாவப்பாத்தி சொல்லி அவுகள மாத்திவுட்டேன். இப்ப சொல்லு ஆத்தா நான் செஞ்சது தப்பா?" என்றார். இல்லை எனத் தலையாட்டிக்கொண்டே முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டே விக்கித்து வரும் அழுகையையும் கேவலையும் விழுங்கிக்கொண்டு தளர்ந்து போய் தன் நடையைத் தொடர்ந்தாள் உபகாரத்தம்மாள்.

----------------------------------தொடரும்----------------------------------------------------------

    

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...