அருளுக்கும், ஐயாவுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. உறவுகள் என்று பெரிதாக யாரும் இல்லாமல் திருமணம் நடந்தது. பொதுவாக திருமணம் என்றால் கூடிப்பேசிச் சிரிக்கும் கேளிகளும், கிண்டல்களும், சிரிப்பும், களிப்பும் ஏதும் இல்லாமல் அமைதியாக நடந்தது அருளு திருமணம். கழுத்தில் முடிச்சு விழும் நேரம் அருளு கண்களில் வெட்கமோ, கனவோ, குறுகுறுப்போ ஏதும் இல்லை. ஏன் ஆனந்தத்தாலோ, அச்சத்தாலோ விழி ஓரமாய் கசியுமே ஒரு துளி நீர், அது கூட இல்லை. வறண்ட விழியோடும் மனதோடும் தலை குணிந்து அவள் மாலை ஏற்றாள். திருமணம் முடிந்த கையோடு ஐயாவின் வீட்டிற்குக் கிளம்பி விட்டார்கள். ஐயா வந்திருந்த வண்டியிலே அருளும் ஏறிக்கொண்டாள். அவள் வண்டியில் ஏறியதும் அவளது அப்பாயி கண்ணீர் விட்டுக் கதறி அழ அரம்பித்து விட்டாள். ஒரு வயதான மனிதனுக்குத் தன் ஒரே பேத்தியை, தாயில்லாத பெண்ணை, இதுவரை கஷ்ட்டத்தை மட்டுமே சந்தித்த ஒருத்தியை திருமணத்திற்குப் பின்னாவது விடிவுகாலம் கிடைக்கும் என்று இருந்தவளை இப்படி வயதான மனிதருக்குக் கட்டிக் கொடுத்ததற்காக அழுதாள். தன் மகனோ, மருமகளோ இருந்திருந்தாள் இவளுக்கு இது நடந்திருக்குமா என எண்ணி அழுதாள். ஊர் உறவுகள் கூடி நடக்கும் அருளுக்கு இப்படி நடந்து விட்டதே என அழுதாள். இவ்வளவு வயல் வரப்பு இருந்தும், தானும், தன் கனவனும், மகனும், மருமகளும் உழைத்து உழைத்து சேர்த்து வைத்த சொத்து இருந்தும் தன் பேத்தி ஒரு பெட்டியோடு வண்டி ஏறிப் போகிறாளே என எண்ணி அழுதாள். ஒப்பாரி வைத்தவளை சுற்றி இருந்தவர்கள் அதட்டி நல்லது நடந்த எடத்துல ஏத்தா இப்புடி கதறுற அதெல்லாம் ஒம்பேத்தி ராசாத்தியா இருப்பா என்று சொல்லி கடிந்ததும் வெடித்து வரும் கேவலை விழுங்கியவளாக, புறப்பட்ட வண்டியை நிறுத்திவிட்டு வீட்டிற்கு ஓடினாள். ஓடியவள் வீட்டில் இருந்த அவளது அம்மா சீராகக் கொண்டு வந்த வெங்கலக் குத்துவிளக்கை தூக்கிக் கொண்டு ஓடிவந்தாள்.
ஏதுமற்றவளாகப் போகும் அருளின் கைகளில் அதை திணித்து, நெற்றியில் சிலுவை வரைந்து அனுப்பி வைத்தாள். அவள் போகும் வழியையே பார்த்துக் கொண்டிருந்தவளைத் திடீரென ஒரு பயம் தொற்றிக்கொண்டது. இப்படி வயசானவரைக் கட்டிக்கிட்டு போறாளே அவருக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சுன்னா எம்பேத்தி நெலம என்னாகும். சீனிப் பய வெஷயத்தச் சொன்னதும் நான் பயத்துல எப்புடியோ அவங்கையில எம்பேத்தி சிக்கிச் சாவாம போனாச் செரிண்ணுட்டு வுட்டுபுட்டேன். அவங்கையில சிக்குண்ண்டா ஒன்னோ, ரெண்டோ வருஷத்துல மண்ணுக்குள்ள தள்ளி செல்லரிச்சுப் போயிடுவாதான். ஆனா இப்ப எனக்குத்தோனுனாப்புல அந்த மனுஷனுக்கு ஏதாச்சும் ஆச்சுண்டா எம்பேத்தி நெலம? பாஞ்சு பதுனாறு வயசுலருந்து இன்னமட்டும் நான் பட்ட பாடு எம்பேத்தி பாக்க வேண்டி வந்துருமோ? இப்படியே நடுத்தெருவில் நின்று யோசித்துக் கொண்டிருந்தவள். செய்யக் கூடாதைச் செய்த்ததை உணர்ந்தவளாக தன் தலையில் தட்டிக் கொண்டு 'அதெல்லாம் ஆவாது, அந்த ரவுடிப் பயல பத்தி போயி ஏன் இப்ப யோசிக்கிறேன். சீ.. தூ.. முட்டாக் கிறுக்கி. கட்டிக்குடுத்துப் போற புள்ள நல்லா இருக்கனுண்டு நெனெக்காம, இதெண்ண நெனப்பு. வயசாவுற அளவுக்கு புத்தி இல்ல இந்த கிறுக்கச்சிக்கு" எனத் தன்னைத் தானே கடிந்துகொண்டு வீடு வந்து சேர்ந்தாள். வந்தவளுக்கு உள்ளே போக மனம் இல்லாமல் வாசலிலேயே உட்கார்ந்து விட்டாள்.
எதிரே மாட்டுக் கொட்டகையில் தண்ணீர் காட்டாமல் நின்ற மாடுகள் "ம்மா...ம்மா..." என குரல் கொடுத்து தன் இருப்பையும் தேவையையும் காட்டிக்கொண்டு இருந்தன. அருளு ... அருளு... என அழைப்பதாகத்தான் கேட்டது உபகாரத்திற்கு. "இனி இந்த மாடு கண்டெல்லாம் யாரு பாக்குறது. அந்தக் குட்டி இருந்துச்சி பாத்தி பாத்தி செஞ்சுச்சி. எம்புட்டு வேல கெடந்தாலும் அத்தன மாட்டையும் குளுவாட்டி, தொழ்வம் முழுக்க கூட்டி கழுவி சுத்தமாக்காம இருக்காது அருளு. இப்ப அவ இல்லாம இதெல்லாம் யாரு பாப்பாக என யோசிக்கும் போதே வீட்டுக்குள் இருந்து குழுதாடிப் பானையைக் கொண்டு வந்து கழனித்தொட்டியில் ஊற்றிக்கொண்டு இருந்தாள் விமலா. ஊற்றிவிட்டி நேராக கண்ணீரோடு வாசலில் அமர்ந்திருந்த உபகாரத்தை நோக்கி வந்தாள். ஏக் கெழவி, என்ன இது இப்புடியே ஒக்காந்து கெடக்க. உம்பேத்தி அங்க போயே சீந்திருப்பா. இன்னும் தண்ணி கூட முழுங்காமக் கெடக்க. செய்யனுண்டா எப்ப செஞ்சிருக்கனும். மாப்புள பாத்துப் போனதும் செஞ்சிருக்கனும். அத வுட்டுப்புட்டு இப்புடி கட்டிகுடுத்து புள்ள போற நேரத்துல கதறிக்கிட்டு இருக்க." என அவள் பேசும்போது ஆச்சரியமாகப் பார்த்தாள் உபகாரம். "எரக்கம் பாத்து வெக்கிற குட்டி எப்புடி இருப்பா என நினைத்த உபகாரத்தம்மாள் தன் எண்ணம் தவறாக இருக்குமோ என எண்ணியவாறு புதிதாகப் பார்ப்பது போல விமலாவைப் பார்த்தாள்.
உபகாரத்தின் பார்வைக்குப் பொருள் புரிந்தவளாக, " என் அப்பனாத்தா என்ன மனுசப் பிறவியாத்தான் வளத்தாக. எனக்கு அருளுக்கு இப்புடி ஒரு கண்ணாலம்னு கேக்கவும் கஷ்ட்டமாப் போச்சு. ஆத்தி இப்புடி யாரும் பண்ணுவாகலா? வசதி இல்லாதவுக ஏதோ தொலச்சா சரிண்டு கட்டிக்கொடுப்பாக. இப்புடி வய வரப்பு இருக்கவுக. இப்புடி செய்வாகளா? சரி அதுதான் ஆச்சுண்டாலும் புள்ளக்கு ஏதும் போடாம, ஒரு பலகாரக் கொடங்கூட குடுக்காமலா அனுப்புவாக? அவுக அம்மா அந்தக் காலத்துலயே ரொம்ப நக போட்டு கட்டியாந்தவுகன்னு எங்க அப்பா சொன்னாரு. அதுல கொஞ்சம் போட்டு அனுப்பி இருக்கக் கூடாதா? இப்புடியா அனுப்புவிக? என ஆச்சர்யமாகக் கேட்டாள்" பின் நிலை தனக்குத் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்ளும் விதமாக , "ம்... எனக்கு எல்லாந்தெரியும் கெளவி நக நட்டெல்லாம் அந்த மவராணி கையில இருக்குண்டு. ஆனா துக்கு நீ தான் கெழவி காரணம். தொடக்கத்துல வுட்டுப்புட்ட. சரி வுடு எல்லாத்தையும் சரி பண்ணிடாலாம். பாரு ஒம்பேத்திக்கு ஆடிச்சீரு, பொங்கசீரெல்லாம் சும்மா வண்டி வண்டியா ரொப்பிடலாம். நாமட்டும் இங்குன வந்துட்டா கதயே மாறிடும் கெழவி என்ற குரலை நம்புவதா? வேண்டாமா? என யோசிக்க ஆரம்பித்தவள் மனதில் மீண்டும் வந்து உட்கார்ந்தது அருளின் நினைவு. அத்தன பிள்ளக இருக்குறப்ப ஏன் ஒரு புள்ளக கூட கண்ணாலத்துக்கு வரல?"
---------------------------------தொடரும்-----------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக