காலை ஒன்பது மணியானதும் ஊர்காரர்கள் எல்லாம் வீட்டிற்கு வர ஆரம்பித்து விட்டனர். வந்தவர்களை "வாங்க" என்று முன்னால் நின்று வரவேற்று சந்தனம், குங்குமம் கொடுத்தாள் ராணி. விமல ராணி. அருளின் இரண்டாவது அண்ணனுக்குப் பேசி வைத்திருந்த இரக்கமேரியின் பங்காளி வீட்டுப் பெண். அவளையும், அவளது அப்பாவையும் தவிர உறவுகள் என்று யாரும் அருளு திருமணத்திற்கு வரவில்லை. யாரையும் அழைக்கவில்லை. பொதுவாக வீட்டில் திருமணம் பேசி முடித்தால் உறவுகளுக்கும், ஊர்காரர்களுக்கும் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பதுதான் முறை. பெரும்பாலும் ஊரில் யார் வீட்டிலாவது திருமணம் என்றால் ஊரில் மூன்று நாட்கள் யார் வீட்டிலும் அடுப்பெரியாது. பெண்ணுக்கு பலகாரக் குடத்திற்கு கொடுக்க அதிரச மாவு சேர்ப்பதில் தொடங்கி ஊரே கல்யாண வேலையில் இறங்கிவிடும். எல்லாரும் கூடி திருமண வேலைகள் சமையல் எல்லாம் கவனித்துக்கொண்டு அங்கேயே சாப்பிட்டு விடுவர். அதனால் திருமணம் என்றால் ஊருக்கே திருவிழா தான்.
சவரிமுத்து, இரக்கமேரி திருமணத்தின் போதுகூட உபகாரத்தம்மாள் ஊர்காரர்களையும் அக்கம் பக்கத்து ஊர்களில் உள்ள உறவுக்காரர்களையும் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தாள். ஒவ்வொரு ஊருக்கும் அவளே நேரில் சென்று அழைத்தாள். வேறு பெரியவர்கள் இல்லாத வீடு என்பதால் உபகாரம் வேறு ஆள் விட்டு அனுப்பினாள் யாரும் அதற்காக கோவித்திருக்க மாட்டார்கள்தான். அனாலும் அது மரியாதையாக இருக்காது என்று அவள் நேரிலேயே சென்றாள் அத்தனை பேரையும் இரு நாட்கள் முன்னதாகவே வரவேண்டும் என கட்டளை இட்டு இருந்தாள். மூன்றல்ல ஐந்து நாட்கள் வீட்டில் அணையாமல் அடுப்பெரிந்தது. இதற்காக திருமணப் பேச்சு எடுத்த உடன் ஒரு வயலில் விளைந்த நெல்லைப் பத்திரப்படுத்தி வைத்தாள். பத்து நாட்களுக்கு முன்னரே ஊரில் உள்ள எல்லார் வீட்டிலும் இருந்து நெல் அவிக்கும் இரும்பு அண்டாவை வாங்கி மலைக் காலத்திற்கு என சேர்த்து வைத்திருந்த விறகுக் கட்டுகளை அவிழ்த்து நெல் அவிக்க ஆயத்தமானால். ஏறக்குறைய 12 அண்டாவில் நெல் அவிந்தது. கல்லைக் கூட்டி நெருப்பு மூட்டி குடம் குடமாய் கம்மாயில் இருந்து தண்ணீர் மொண்டு வந்து ஊற்றி, நீர் கொதித்ததும் மூட்டையாய் நெல்லைக்கொட்டி, ஈரப்பதம் போய்விடாமல் சணல் சாக்கை விரித்து ஆவி வெளியே போகாமல் காக்க இரும்பிலும் ஈயத்தில் தட்டு போட்டு மூடி... நெல் அவிந்ததும் ஒரு மணம் வருமே! அப்பப்பா! நாசி வழி இதயத்தைதொடும் வாசனை அது. அப்படியே நெல்லை ஓலைப் பெட்டியில் அள்ளி, நீரை வடித்துவிட்டு பெரிய பெரிய ஓலை பெட்டிக்கு மாற்றி சூடு பொறுக்கப் பொறுக்கப் பெண்கள் நெல்லைக் கொண்டுபோய் ஊர் முற்றத்தில் கொட்டி உலறவிட்டு இரண்டிரண்டு பெண்களாக செர்ந்துகொண்டு உரலில் நெல்லைப் போரட்டு கை மாற்றி மாற்றி கொட்டி என ஊர் கூடி தேரிழுக்க சவரி முத்து திருமணத்தை விழா போல கொண்டாடினாள் உபகாரத்தம்மாள்.
அருளு திருமணம் இன்று தான் உயிரை விட மேலாக நேசிக்கும் தன் பேத்திக்குத் திருமணம் என்றால் கேட்கவா வேண்டும். அனால் எதையும் நினைவாக்கத் தயாராக இல்லை இரக்கம். "அதெல்லாம் யாரும் வர வேண்டாம். அப்புடி யாரும் வந்தாகண்டா இந்த க்ருவாச்சிக்கு இம்புட்டு நல்ல எடமா வாச்சுருக்கேண்டு ஏதாச்சும் குட்டிக் க்லாட்டா பன்னுவாக. காதும் காதும் வச்சதாட்டம் இத முடிச்சுடலாம். "என்றாள். உபகாரத்திற்கு வேதனையாக இருந்தாலும் யேதும் செய்ய இயலவில்லை. அப்படி அழைப்பு இல்லை என்றாலும் திருமணத்திற்கு வந்துவிட வேண்டும் என்று ஊரில் உள்ள எல்லோரும் வந்து கூட ஆரம்பித்தனர். முறைப்படி அழைக்காத காரணத்தால் காலை சாப்பாட்டை வீட்டிலேயே முடித்துவிட்டுதான் வந்திருந்தனர்.
வீடேறி வந்தவர்களை வா என்று சொன்னால் சாப்பாடு போட வேண்டிவரும் என்று அறைக்குள் முடங்கிக் கொண்டாள் இரக்கமேரி. ராணி தான் வந்தவர்களுக்கு சந்தனம் குங்குமம் கொடுத்தாள். சுற்றமெல்லாம் கூடுவதைப்பார்த்து பேத்திக்கு தலை சீவிக்கொண்டிருந்த உபகாரம் வெளியே வந்து அனைவரையும் கை கூப்பி வரவேற்ற உபகாரத்தம்மாள் மனதில் அழைக்காவிட்டாலும் தன் பேத்தியை வாழ்த்த ஊரே வந்ததில் ஏகப்பட்ட மகிழ்ச்சி. ஆனாலும் அது நீடிக்கவில்லை. அருளு வந்து நின்ற கோலத்தைப் பார்த்து ஊரே வாயடைத்து நின்றது. கல்யாணப் பெண் கழுத்துல் பெயரளவிற்குக் கூட ஒருபொட்டுத் தங்கம் இல்லை. "அடி என்ன ஆத்தா இது. வீடென்ன, வய என்ன, வரப்பென்னானு இங்கின சொத்துக் கொட்டிக்கிடக்க, ஒத்தைக்கு ஒத்த பொண்ணுக்கு ஒரு பவுனு சங்கிலி வாங்கிப் போடக்காணாம்" என பெண்கள் பேச ஆரம்பித்ததும், உபகாரத்தம்மாளை அழைத்து ஒரு சங்கிலியிக் கொடுத்து அருளுக்குப் போடச்சொன்னாள். " ஆத்தா இது ரொம்ப சன்னமா இருக்கு. புள்ளுப்போல கெடக்கு. வெரசா அந்துபோகும். வேற சங்குலி இருக்குமா. கொஞ்சம் பார்வையா " என்றாள். "ஏன் ஒம்பேத்திக்கு இதுவே அதிகம். போ." என்று துரத்தினாள். வந்து அருளு கழுத்தில் அதைப் போட்டு விட்டு, வந்தவர்களுக்கு காப்பித்தண்ணி கூட கொடுக்கலயே. என வருந்த அதை முன்னரே அறிந்தவள் போல ராணி காப்பி டம்ளர்களோடு வந்தாள். உள்ளிருந்து இதைக் கவணித்துக்கொண்டிருந்த இரக்கத்திற்கு ராணி மீது கூபம் ஏகத்திற்கும் வந்தாலும் இப்போது வேண்டாம் எனப் பொறுமையாக இருந்தாள். அவர்கள் பேசிக்கொண்டு இருக்கையிலேயே மாப்பிள்ளைம் வீட்டிலிருந்து அருளுக்கு முகூர்த்தப் புடைவையும், கூடவே ஒரு பெட்டியும் இருந்த்த தாம்பாளத்தட்டு வந்தது. புடைவையைச் சுற்றிக்கொண்டு பெட்டியைத் திறந்த அருளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் ஐயாவின் முதல் மனைவியுடைய நகைகள் இருந்தன. ஊரே பார்த்து ரசிக்கையில் இரக்கத்திற்கு மட்டும் கடுப்பாக இருந்தது. ஏற்கனவே கொடுத்துவிட்டிருந்த சங்கிலியை விரிட்டெனக் கழற்றிக்கொண்டு போனாள். " அக்கா என்ன இது பொறந்த வெட்டில இருந்து ஒரு குண்டு மணி போட வேண்டாமா? எனக் கேட்ட ராணியைப் பார்வையாலே எரித்துவிட்டு உள்ளே போய்விட்டள். " சரி காலமாச்சு. முகுர்த்தம் நெருங்குது. கோயிலுக்குப் போயி பூச ஒப்புக்கொடுக்கனும். வாங்க கெளம்பலாம். மாப்புள்ள அங்க காத்துக்கெடக்காக." என ஊர் பெரியவர் ஒருவர் சொன்னதும் அருளை அழைத்துக் கொண்டு செல்ல அனைவரும் ஆயத்தமாகினர். அவள் கழுத்தில் மாலையை மாட்டியதும் "அப்பாயி" என கலங்கிய கண்களோடு உபகாரத்தின் முன் முட்டி போட்டு அவள் ஆசிர்வாதத்தை வேண்டினாள் அருளு. அவள் தலையில் கைவைத்து வேண்டியதோடு அவள் கைகளில் எதையோ திணித்தாள் உபகாரம். "அட வெரசா வெரசா என ஒரு பெரியவர் அவசரப்படுத்த, வீட்டிலிருந்து இறங்கியவாறே தன் கைகளைப் பிரித்துப் பார்த்தாள், அதில் பச்சையும், சிவப்புமாக கல் வைத்த அவள் அம்மாவின் தோடு அழுக்கெடுத்து, மெருகேற்றி மின்னிக்கொண்டு இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக