இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

அருளு ப்குதி - 10

          விடிந்தால் அருளுக்குக் கல்யாணம்.

    அருளு எதிலும் மனம் ஒட்டாமல் இருந்தாள். நாளை தனக்குத் திருமணம். தன் வாழ்வின் முக்கியமான நாள் என்ற எந்த பரபரப்பும், பதட்டமும் ஏன் பயம் கூட இல்லாமல் அமைதியாக இருந்தாள் அருளு. ஐயா வந்து பெண் பார்த்துப் போன தொடக்க நாட்களில் சில நேரம் இப்படி வாழ்க்கைக்குள் நுழையப் போகிறோமே என்ற பயம் தோன்றும், சில நேரம் அம்மா இருந்து இருந்தால் இதெல்லாம் நமக்கு நடந்திருக்குமா என்ற கவலை தோன்றியது. வேறு சில நேரத்திலோ இந்த சிறையில் இருந்து ஏச்சுப் பேச்சுக்களில் இருந்து தப்பிக்கப் போகிறோம் என்ற எண்ணம் தோன்றியது. எல்லாம் மாறி மாறி தோன்றித் தோன்றியது. தொடக்கத்தில் இந்தக் கல்யாணத்தை எப்டியாவது நிறுத்திவிடுவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு உபகாரத்தம்மாள் அலையும் போது அவள் மனதில் அவ்வப்போது அது ஒரு அதிசயமாகவாவது நடந்து விடாதா எனத் தோன்றியது. பட்டாளத்திற்குப் போன அண்ணன் திடீரென வந்திறங்கி தன் கையைப் பிடித்துக்கொண்டு தன்னோடே அழைத்துக் கொண்டு போவதாக எல்லாம் கனவு கண்டாள். ஆனால் தொடக்கத்தில் இந்தக் கல்யாணத்தை நிறுத்திவிட அப்பாயி காட்டிய முனைப்பு இப்போது இல்லை என அவள் உணரத்தொடங்கியது முதல் அந்தக் கனவை எல்லாம் மூட்டை கட்டி தூக்கி வைத்துவிட்டாள். 

    உபகாரத்தம்மாளின் மன மாற்றத்திற்குக் காரணாம் புரியாமல் எப்படி எப்படியெல்லாமோ யோசித்துப் பார்த்துவிட்டு ஏதும் தோன்றாதவளாய், "ஏப்பாயி என்னமோ இந்தக் கண்ணாலத்த நடத்த விடமட்டேண்டின்னு கங்கணங்கட்டிட்டுத் திருஞ்ச இப்ப என்ன அப்பாயி ஆச்சு. சத்தமே இல்லாமா ஆயிட்ட" என உபகாரத்திடமே கேட்டுவிட்டாள். "என்னத்தா செய்ய? இத தடுக்கப் போயி அப்புறம் கெனால கூடா காங்கக்கூடாத வாழ்க்கைல. இல்ல இல்ல வாழ்க்கைங்கிற பொதகுழியில உன்ன இந்த சதிகாரி தள்ளி விட்டுட்டா என்ன பன்ன? அதுக்கு இது தேவலந்தாயி. அதான் நான் ஏதும் செய்யல. உம் மனசுக்கு நீ நல்லா இருப்ப தாயி. கலங்காம இரு" என்ற பதில் அவளிடம் இருந்து வந்த பின்னர் அருளு இந்த கல்யாணம் பற்றி நல்லதாகவோ கெட்டதாகவோ ஏதும் யோசிக்காமல் ஆனாள். ஏதும் அற்ற நிச்சலன நிலை அது. அதற்குப் பின் அவள் அப்பாயிடம் ஏதும் கேட்கவில்லை. நேற்று இரவு உறங்குவதற்காக பாய் எடுத்து விரித்த அருளுக்கு திடீரென உபகாரத்தின் நினைவு வந்தது நாளைக்குப் பின் இந்த வீடு தனக்கு அன்னியமாகிப் போக யாரென முன் பின் அறியாத ஒரு குடும்பம், புது ஊர், என்ன செய்வது எனக் கலங்கினாள். கூப்பிடும் தூரத்தில் இருக்கும் அப்பாயி அப்போது இங்கு இருக்க மாட்டளே என நினைத்ததும் அவள் கண்கள் கசியத் தொடங்கின.

    அப்பாயின் நினைவு வரவும் வேகமாக கொல்ல வாசல் வழியாக அப்பாயி வீட்டிற்குள் ஓடினாள் அருளு அங்கு தூக்கம் இல்லாமல் கையில் செபமாலையைப் பிடித்து உருட்டிக்கொண்டு ஒரு ஓரமாக சாய்ந்திருந்தாள் உபகாரம். "அப்பாயி..." என கண் முழுக்க நீரோடு அவள் மார்பில் சாய்ந்து அழத் தொடங்கினாள். ஏதும் ஆறுதல் சொல்லாமல் அவள் அழ்ம் மட்டும் அழுது தீர்க்கட்டும் என அமைதியாக அமர்ந்திருந்தாள் உபகாரம். பின ஒரு வழியாக அழுகை சிறு கேவலாக மாறி குறையத் தொடங்கியது. உபகாரம் பேச ஆரம்பித்தாள்."  நான் காலம் பூரா எம்புட்டோ போராடிப்புட்டேன். உங்க ஐயா சாகயில்ல எனக்கு பாஞ்சு வயசு. கண்ணாலங்கட்டி ஒரு வருஷங்கழியல. உங்க அப்பன் பொறந்து பத்து நாளுலையே உங்கைய்யா பாம்பு கடிச்சு என்ன மூழியாக்கிட்டுப் போயிட்டாரு. அடுத்து உங்களப் பெத்துப் போட்டுட்டு உங்க அம்மா போனா.  எந்த பெத்தவளும் தனக்கு சிலுவக்கபம்பு வைக்க  தம்புள்ள வேணும்னுதான் நெனப்பா . ஆனா நான் எழக்கக் கூடாத வயசுல உங்கப்பனையும் எழந்தேன்.  அனாலும் நான் என் உசுர கையில புடுச்சுக்கிட்டு இனேரம்மட்டுக்கு நிக்கிறேன். உங்கப்பம் போனப்புறம் நான் வாழனும்னு நெனச்சதே ஒனக்காண்டி தான். நம்க்கும் வயச்சாகுது நம்ம காலத்துக்கப்புறம் பொம்பளப்புள்ளைய வளக்க ஒரு பொம்பளயாளு வீட்டுல இருக்கனும்ட்டு தான் ஒங்க அண்ணனுக்கு இந்த எரக்கன்குட்டியக் கட்டுனேன். ஆனா அது என்னனா கள்ளிச்செடி, கத்தாளச்செடி கனக்கா குத்தலும் ஒரசலுமாத்தான் திரியுது. நீ இங்குன இருக்க வரைக்கும் அவ ஒன்ன நல்லா வாழ வுட மாட்டா. வெசம்மா தான் இருப்பா. எனக்கும் வயசு போச்சு. நீ இங்க இருக்கயிலயே நான் போயிட்டன்னா அப்புறம் அவ கேள்வி கேக்க ஆளிலாதவளா ஆயிருவா அப்புறம் ஒன் வாழ்க்கைய எந்த படுகுழியில தள்ளுவாண்டே தெரியாது. அதுனால நான் இருக்கையிலயே நீ இந்த வீட்ட விட்டு போயிடுறது நல்லது. நீ கலங்காத அதெல்லாம் நல்லா இருப்ப. விடிஞ்சதுல இருந்து அடையிற வர இந்தக் கெளட்டுச் சிறுக்கி செவிக்கிறதுக்கு பலந்தராம போகமாட்டரு அந்த ஆண்டவரு. நீயும் எப்பயும் அந்த ஆண்டவருக்குப் ப்யந்தவளா, பக்தியானவளா இரு. போற எடம் புது எடம். யாரு என்னனு தெரியாது அதுனால யாருக்கிட்டயும் தேவையில்லாம வாய விடாத. யாரையும் நம்பி உங்கஷ்ட்டத்த ஒப்பிக்காத. வீட்டு விசயம் வெளிய வரக்கூடாது. அதுனால என்ன கஷ்ட்டம்னாலும் ஆண்டவங்காலுல போயி வுழுந்துரு. அவரு பாத்துப்பாரு." என தன் மனதில் தோன்றியதையெல்லாம் அருளிடம் சொல்லி அவளைத் தயார் படுத்தினாள். "ஏன் அப்பாயி நீயும் என்னோட வந்துறேன்." எனக் கேட்டாள் அருளு இல்லத்தா, நம்ம ஊரு வாயி மோசமானது. கோண்டாங்கொடுத்தான் வீட்டுல போயி ஒக்காந்து சாப்புட்டா நல்லா இருக்காது. நான் மாசத்துக்கு ஒராட்டி வந்து ஒன்ன பாத்துட்டு ஓடியாந்துருறேன். அது மட்டும் இல்லட்டி நீ கண்ணாலங்கட்டிப் போனப்புறம் எனக்கு இங்கின முக்கியமான சோலி இருக்கு.." என்றாள் தீர்க்கமாக...

தொடரும்....

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

அருளு பகுதி - 9

     ஐயா வயலில் இருப்பதாக சொன்னதும் அவரைப் பார்க்க வயல் நோக்கிக் கிளம்பினான். அப்போதுதான் வயலில் ஒரு வாரமாக பறிக்கப்படாமல் பருத்தி வெடித்து வீணாவதாக ஐயாவின் மகன் சொன்னது நினைவுக்கு வர, மன்றத்தில் யாராவது ஆள் இருக்கிறார்களா என நோட்டம் விட்டு அங்கு இருப்பவர்களையும் வேலைக்கு அழைத்துக் கொண்டு போனான். "ஒரு வாரமாக விளைந்து வெடிக்கும் பருத்தியை எடுக்க ஐயா ஆள் அனுப்பவில்லையாம். இவர் என்ன செய்கிறாராம். ஐயா வேண்டாம் என எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் கிழக்கால உள்ள வயலுல கரும்பப் போட்டாரு. அப்புறம் எப்ப பாத்தாலும் பாகப்பிரிவின பன்னுன மாரி அங்குனயே கெடக்குறது. அது சின்ன வய. ஒரு மூனு ஏக்கர் காங்காது. அங்குன நாமுச்சூடும் கெடக்குறதுக்கு இங்கின வந்து பாக்கலாம்ல. இங்க 40 ஏக்கர் மொத்தமா கெடக்கு. அவரு ஒத்தையில கெடந்து செரமப்படுறாரு. கேள்வி மட்டுங்கேட்டுக்குறான்." என தன் மனதிற்குள் முனுமுனுத்துக்கொண்டே வந்து சேர்ந்தார். பருத்திக்காட்டில் ஆட்களை வேலைக்கு அமர்த்திவிட்டு தென்னந்தோப்பு நோக்கி நடந்தார் சாமினாதன். தோப்பின் நடுவில் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்துகொண்டு வெறுமையை வெறித்திக்கொண்டு இருந்தார் ஐயா. 

    ஐயா ஆழ்ந்த சிந்தனையில் உள்ளதைப் பார்த்துக்கொண்டே அவரை நெருங்கினார் சாமினாதன். அவருக்குத் தெரியும் ஐயா என்ன சிந்தித்துக் கொண்டு இருக்கிறார் என்று. ஐயா மகன் கூறியது போல அவர் கல்யாணக் கெனா காங்கவில்லை. என்பதை நினைத்தவராக, "என்னைய்யா நீங்க இப்புடி வயக்காட்டிலயே கெடக்குறீக. ஒரு வாரமாச்சு உம்மப் பாத்து. எங்கிட்ட என்னக் கோவமையா உங்களுக்கு?" எனக் கேட்டுக்கொண்டே இருக்க அசைவற்று அமர்ந்திருந்தார் ஐயா. அவரது கண் இமை கூட ஆடவில்லை. அசைவற்று இருந்த ஐயாவின் தோள்களைத் தொட்டுக் குலுக்கினார் சாமினாதன். சுயம் உணர்ந்தவராக தலை நிமிர்த்தி, "என்ன சாமி இந்தப்பக்கம்?" என்றார். "என்னவா கண்ணாலத்துக்கு ரெண்டு நா தான் கெடக்கு என்னனு கேக்குறீக. கண்ணால வேலை இல்லையா? அது மட்டுமா ஒரு வாரமா இப்புடி எதையுங்கண்டுக்காம இருந்தா எப்புடி. அங்குன பாருங்க நெதம் பூச முடிஞ்சு இந்தப் பக்கந்தானே வருவீக. அந்த பருத்திக்காடு ஒங்க கண்ணுலயே படலையா? கஷ்ட்டப்பட்டு வளத்த்டுத்து, இப்புடி வெளையிற நேறத்துல வேலிய முறிக்கலாம? அமுட்டும் முத்தி, வெடிச்சு நாலா பக்கமும் பஞ்சாக் கெடக்கு. இங்க மட்டும் என்னவாம், பாருங்க எம்புட்டு காயி முத்தி இருக்கு. அந்த ரங்கம்பைய எங்குட்டு போனான்? கூப்புட்டு காயப் பறிச்சுப் போட சொல்லக்கூடாதா? நானும் ஒரு சோலியா இந்தப்பக்கம் வர முடியாமப் போச்சு.ஏன் இப்புடி போட்டது போட்டபடி கெடக்கு. ஒடம்புக்கு ஏது..? ஒடம்பு என்ன ஒடம்பு, மனசு சொல்லுறத கேக்குறதுதானே அது வேல. மனசு ஒரு நெலையில இல்ல. அதான் ஒடம்பும் ஊஞ்சுடுச்சு." என தத்துவம் பேசினார் ஐயா.

    ஐயாவின் மன நிலையைப் புரிந்திருந்தாலும் அதை சரி செய்ய வேண்டும் என நினைத்தார். "அட என்னையா இப்புடி சொல்லுறீங்க, ரெண்டு நாள்ள கண்ணாலம். மாப்புள்ள சும்மா ஜம்முனு இருக்காம. இப்புடி வந்து ஒக்காந்து வேதாந்தம் பேசுறீக. அட எந்திருச்சுக் கெளம்புங்க. தலைக்கு மேல வேல கெடக்கு" படபடத்த சாமி நாதனிடம் மெல்ல தயங்கியவாறே, "ஏஞ்சாமி எனக்கு மன்சே ஒப்பல. பேசாம இத நிறுத்திட்டா என்ன? எம்புட்டோ றோசன பன்னிப்பாத்துட்டேன். எம்மனசு சமாதானம் ஆகல சாமி" என்றார். கேட்டதும் சாமி நாதனுக்குப் பகீரென்றாகி விட்டது."அட என்னையா இது. நல்லக் கதயா இருக்கே. கண்ணாலம் பேசி வெத்தல பாக்கு மாத்தி வாக்குக் குடுத்துட்டு இப்ப இப்ப வேண்டாம்னு சொன்னா எப்புடி?  பாவம் அந்தப் பொன்னு. வாழ வேண்டிய பொண்ணு ஊரெல்லாம் அத தூத்திட மாட்டாங்க. சும்ம இருங்கையா. இது நடக்குற காரியமா?" என்றார். "இல்ல சாமி அந்தப் புள்ள ரொம்ப சின்னப் புள்ளயா இருக்கு. அதக் கொண்டு கட்டிட்டு வந்து, அது வாழ்க்கையப் பாழாக்கனுமா? எனக்குன்னா எம்மனுஷி போனதுல இருந்து உடம்பே போச்சு. ஓயாம மயங்கி மயங்கி வுழுகுறேன். நாளைக்குக் கல்யானம் பன்னதுக்கப்புறம் எதாச்சும் ஆச்சுன்னா பாவம்... " எனப் பேசிக் கொண்டிருந்தவரை கோவமாக இடை மறித்த சாமி, "ஐயா நல்ல காரியம் பேசையில இது என்னப் பேச்சுயா? மொதல ஒங்க வாயக் கழுவுங்க. உங்களுக்கென்ன. தெடகாத்துரமாதான் இருக்கீக. நாள் முச்சூடும் நல்ல சாப்பாடு இல்லாட்டி எளந்தாரிக் கூடத்தான் பல்லுவாய் கட்டி வுழுவான். பாருங்க அந்தப் புள்ள வந்து நல்லா சமச்சுப் போட்டு பாத்துட்டா, நீங்க பழையபடி அப்புடியே ஓடியாட ஆரம்புச்சுருவீக" என்றார். 

    அனால் ஐயா அதை ஏற்கவில்லை "எம்மனுஷி இத ஏத்துப்பாளா? எனக்கு நெனவு இருக்கு, ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு முன்ன எம்பங்காளி பொஞ்சாதி செத்ததும் ஒரு சின்னப்புள்ளைய கட்டிட்டு வந்தாருண்டு அவரு மொகத்துலயே முழிக்க மாட்டேனுட்டா. என்ன மனுசப்பயலுக இப்புடியா பச்சப்புள்ளய பாழாக்குவாக. ஆத்தீ பொண்டாட்டி செத்தா செத்த நாளுலயே வேற பொண்டத் தீடிக்கிறாக. பொம்பளைக அப்புடியா இருக்கோம். எங்களுக்கு ஒருன் நாயம் ஒங்களுக்கு ஒரு நாயமா. நான் எம்புள்ளகள இப்புடி வளக்க மாட்டேன். அதுக நல்ல படிச்சு தெகிரியமான புள்ளகளா நல்லது கெட்டது தெரிங்க புள்ளகளா வளரட்டும்." என்று அடிக்கடி சொல்லுவா. அவ மனசுக்கு மீறி நான் இப்புடி.. " எனத் தினறியவர், " அது மட்டும் இல்ல சாமி பொதுவா ரெண்ட்டாவதா கட்டிட்டு வர்ரவுக ஒரு பயத்துலயே இருப்பாக. அதுனால மூத்தகுடிப் புள்ளகள நல்லா நடத்த மாட்டாக. இந்தப் புள்ள எம்புள்ளகள நல்லா பாக்குமா? இனிதான் புள்ளகளுக்கு நல்லது எல்லாம் பாக்க வேண்டி இருக்கு. அதுவும் மனசக் கெடந்து அருவுது சாமி" என்றார். அவர் மனதில் உள்ளதை யெல்லாம் கொட்டி முடிக்கட்டும் எனக் காத்திருந்த சாமினாதன், :"அட அதெல்லாம் ஒன்னும் இல்ல. நீங்க மனசப் போட்டுக் கெடுத்துக்க வேணாம். உங்கள கவனிக்க ஆளில்லாத நாள்லதான் ஒங்க சம்சாரம் ரொம்ப வேதனைப் பட்டுப் போயிருப்பாக. அதெல்லாம் ஒன்னு நெனக்க மாட்டாக. இந்த ப்புள்ள பச்சப் புள்ளயாட்டம் சூதுவாது அறியாதது. ஏது தப்பிதமா நடக்காது. ரொம்ப மனசக் கொழப்பாம எந்திருச்சி வாங்க மத்த வேலையக் கவனிக்கனும், என்று எழுந்தவர் ஐயா எழாததைப் பார்த்து சோர்வடைந்தார். பின், "ஐயா கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க பொண்ணுபாக்கப் போயி வேண்டாம்னு சொன்னதுக்கே அந்தப்புள்ள மதினி அத எப்புடி அடிச்சு சித்திரவதப் படுத்துச்சு. இப்ப கல்யாணம் பேசி வேண்டாமுன்னாஅவ்வளவு தான் அந்தப் புள்ளய கொன்னே போட்டுருவா. எந்திரிங்க. மனச சமாதானப் படுத்திக்கிங்க. நீங்க அந்தப் புள்ளக்கி நல்ல வாழ்க்கை கொடுக்குறீக. அம்புட்டுதான்." என்ற சாமினாதன் பேச்சிக் கேட்டு எழுந்து அவனோடுனடந்தார் ஐயா அவர் மனம் மட்டும் வர அடம்பிடித்து அங்கேயே இருந்து வானத்தை ஏதுமற்ற வெளியை வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தது.

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

அருளு பகுதி - 8

     அருளு வீட்டில் பெண் பேசி வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்த ஒரு வாரமாக ஐயாவை சரியாகப் பார்க்கவே முடியவில்லை. அவரைக் கோவிலில் பார்ப்பதோடு சரி. வழக்கமாக அவர் வந்து உட்காரும் ஊர் மன்றத்திலோ அல்லது ஆலமரத்து அடியிலோ அவரைக் காணவில்லை. தினமும் காலை பூசை முடிந்து ஊர் மன்றத்தில் அமர்ந்து கொஞ்ச நேரம் வேதம் பற்றி பேசுவார். அதைக் கேட்பதற்காகவே வயதான பலர் அங்கே அமர்ந்து காத்து இருப்பர். ஆனால் ஒரு வாரமாக அந்தப் பக்கமே அவர் வருவது இல்லை. பூசை முடிந்து எங்கே போகிறார்? எப்படிப் போகிறார்? என்பதே தெரிவது இல்லை. சரி வீட்டில் சென்றாவது பார்க்கலாம் என்று ஐயாவின் வீட்டிற்கு போனார் சாமிநாதன். வாசலில் ஏறி  ஐயா! ஐயா! எனக் குரல் கொடுத்தார். பதில் குரலோ இல்லை.

     சரி போய்விடலாம் என எண்ணிக் கிளம்புகையில் உள்ளிருந்து ஐயாவின் இரண்டாவது மகன் அந்தோனிசாமி வெளியே வந்தான். அவரைப் பார்த்ததும் அவன் முகம் மாறுவதையும், முகத்தில் கடுமை ஏறுவதையும் உணர்ந்தார். "என்னையா என்ன காரியம் பண்ணிட்டு வந்துருக்கிங்க? இப்ப இந்த வயசுல இந்தப் பெரிய மனுசனுக்குக் கல்யாண்ம் கேக்குதா ஊருல இருக்க பெருசுங்கல்லாம் சேந்து அவரு மனச மாத்தி இப்புடி கூத்துப் பண்ணி வச்சுருக்கிங்க. வீட்டுல இத்தன புள்ளக இருக்கோம். எங்கக்கிட்டக் கூடக் கலக்காம நீங்களா ஒரு முடிவு எடுத்துட்டு வந்து வச்சுரிக்கிங்க?" என்றான் அந்தோனி, ஆமாம் நீ ரொம்பப் பெரிய மனுசன் என எண்ணினாலும் ஏதும் கூடக்குறையப் பேசி சிக்கலாகிவிட வேண்டாம் என எண்ணியவ்ராக, "இல்ல தம்பி உங்கக்கிட்ட இது பத்திப் பேசுனோம். ஐயாவுக்கு சரியான கவனிப்பு இல்ல. உங்க சம்சாரத்துட்டப் பேசுங்கன்னு நாங்க எம்புட்டோ சொன்னோம். நீங்க அதுப்பத்திப் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டிங்க. ஐயாவும் வீட்டு சீதிய வீதி வர இழுக்காத சாமின்னுட்டாக.  அதான்..." என சாமி பேசிக்கொண்டிருக்கையிலயே, " எம்பொஞ்சாதி, சின்னப் புள்ள. ஏதோ வேல அசதில சத்த தூங்கிருப்பா. நேரத்துக்கு சாப்புட்டுதான் இப்ப என்ன சாதன வேண்டிக்கெடக்கு. பாவம் அவ இங்குனக் கெடந்து எம்புட்டுச் செரமப்படுறா. ஏதோ அவன்னக்கண்டு பொறுமையா இருக்கா. அவ எடத்துல வேற பொம்பளாயாலு இருந்திருந்தா அம்புட்டுத்தான் வீடு விருவு வுட்டுப் போயிருக்கும்." என்றதும் சாம்நாதனுக்கு அடக்கமுடியாமல் கோபம் வந்தது அவர் அறிந்தே ஐயா பல நாள் பகல் சாப்பாடு இன்றி இருந்திருக்கிறார்.

     ஒருநாள் இரு நாள் என்று இல்லை பலனாள் ஐயா சாப்பாடு இன்றி பசியோடு இருத்திருக்கிறார். ஐயாவிற்கு வயல் அதிகம். நெல், மிளகாய், துவரை, எள், கம்பு, சோளம், கேப்பை, காய்கறி எல்லாம் விளைகின்றன வயலில் ஏறக்குறைய நாற்று நடுவது, களை பறிப்பது, அறுவடை என எப்போதும் வயலில் வேலை இருந்துகொண்டே இருக்கும். அப்படி பெரும்பாலான நாட்களில் பகல் உணாவு சாப்பிடும் நேரத்தில் வீட்டிலிருந்து உணவு வராமல் ஐயா மட்டும் வாய்க்கால் நீரைக் குடித்துப் பசியாறுவார். அதைப் பார்க்கும் பெண்கள் பலருக்கும் வாயில் உணவு செல்லாது. தொண்டையிலேயே சிக்கிக் கொள்ள கண்கள் குளமாக நிற்பர். இதைப் பார்த்துப் பார்த்துப் பொறுக்க முடியாத மூக்காயி ஒரு நாள் அவரிடம், "ஏஞ்சாமி ஆயா இருக்கையில நீங்க இம்புட்டு செரமப் பட்டு இருப்பீகளா. ஊர்ல பலர் வீட்டுல ஒங்களால அடுப்பு எறியுது ஆனா நீங்க இப்புடி பசியாறாம தண்ணியக் குடிக்கிறீக மனசே ஆற மாட்டுது ஐயா! இப்புடி வேவாத வெயில்ல வம்பாடு பட்டு ஒழைக்கையைல ஒருவாக் கஞ்சிதான் அமுர்தமா இருக்கும். ஆனா நீங்க இம்புட்டுக் கஷ்டப்படுறீக்ள்ளே. மனசே ஆறமாட்டுதுய்யா" எனப் புலம்பினாள். எந்தச் சலனமும் இல்லாமல் ஐயா "அட யாரிங்க ஒழைக்கிறா நான் சும்ம ஒக்காந்துதான் இருக்கேன். நீங்க பாடுபட்டு ஒழைக்கிறீக உங்க வவுத்துக்கு சாப்புடனும். எனக்கிப்ப  சாப்பாட்டுக்கு என்ன அவசரம். வயசாகுதுல்ல. அதான் சாப்பாடுல்லாம் வேணாம் ஆத்தா. நான் வீட்டுல வந்து சாபுடுறேன்னுட்டே. அது மட்டுமா. அங்குன எம்மருமவ வகவகயா சமச்சு வச்சுருக்கும். நீ கண்ணுல கண்டே கண்ணு வச்சுட்டாயின்னா? என கிண்டலாகக் கூறியவர். "அட இப்ப என்ன எனக்குப் பசிக்குதுண்ணா ஒருவாயி குடு மூக்காயிண்டா நீ குடுக்க மாட்டியா? எனக்கு பசி இல்ல நீ வரசா சாப்புடு. இப்புடியே கத பேசி பொழுத போக்கிடாத. எனக் கூறி அவளது கவனத்தைத் திருப்பி அனுப்பினார். ஆனால் அவளுக்கு அவர் சொன்ன அந்த ஒங்கிட்ட வாங்கி சாப்புடுவேன் என்னும் வார்த்தை காதில் ஒழித்துக் கொண்டே இருந்தது. ஊரே என் கைப் பட்டுடும் கால் பட்டுடும்னு எம்ம விட்டு ஒதுங்கி நிக்குது. நான் குடிக்கக் குளிக்கக் கூட தனி எடம். தண்ணி ஊத்திக் குழுச்சா அழுக்குப் போகும்பாக. ஆனா நான் நின்னுக் குளுச்சா தண்ணிக்கே அழுக்கு ஏறிப்போகும்னு நெனைக்குற மனுசங்க மத்தியில இவரு என் கையால சாப்புடுவேண்டு சொல்றாரு. அவரு செய்யுறவரு தான். இப்புடிப் பட்ட மனுசனுக்கு எப்புடி வாழக் குடுத்து வச்சுருக்கு. என்ன செய்ய. ஏம் ஐயா நீங்க ஐயா கூடவே தானே இருக்கிக. ஆயாதான் போயிட்டாக. ஐயாவுக்கு ஒரு பொண்ணப்பாத்து கண்ணாலங் கட்டைவக்கலாம்ல. எனக் கேட்டாள். அவள் கேட்பதற்கும் ஐயா மயங்கி சரிவதற்கும் இடையில் ஒரு நொடிதான். பார்த்துக்கொண்டிருந்த சாமி நாதன் அன்றே அதை முடிவு செய்தவர்தான். 

    எல்லாம் மனக்கண் முன் வந்து செல்ல, தம்பி அவருக்கு நல்ல சாப்பாடில்ல. ரெண்டு மூனு நாளு வக்காட்டுலயே மயங்கிப்புட்டாரு.. அதான்.. " என எழுத்தா சாமினாதன். அட எம்பொஞ்சாதிக்குத் தான் எல்லாம் வாச்சதா? ஒன்னுக்கு அஞ்சு பொட்டைங்க இருக்கு. அதுகளக் கூட்டியாந்து ஆக்கிப்போடச் சொல்றதுதானே? என்றதும், "என்ன தம்பி இது. அதுகப்படிக்கிற புள்ளக. அதுகள இங்கக் கூட்டியாந்துட்டா எப்புடி படிக்குங்க. உங்க அம்மா எல்லாப் பிள்ளைகளையும் நல்லா படிக்க வைக்கனுமுன்னு ரொம்பப் பெரயாசைப்பட்டாக. அவுக ஆசைக்காச்சும் படிக்கட்டும் தம்பி" என்றார். "ஆமாம், பொட்டைக படிச்சி என்னத்தக்... என தன் வாழ்க்குள்ளேயே முனுமுனுத்துக் கொண்டே, "சரி அது வேண்டாம். கட்டிவைக்கனும்னு முடிவு செஞ்சீகள்ள. ஒரு வயசு போன, நாதியத்தப் பொண்ணா கட்டுனா ஆகாதோ. பொண்ணுக்கு எம்பொஞ்சாதியோட கொற வயசாமே. இப்பவே கண்ணாலப் பேச்சு எடுத்ததுலருந்து மனுசன் வீட்டுக்கே வாரது இல்ல. ஏதோ மைவச்ச மாதிரி வயக்காட்டுலயே ஒக்காந்து யோசிச்சுட்டே இருக்காரு. இன்னும் கட்டி இங்கக் கூட்டியாந்துட்டா என்னென்னக் கூத்து நடக்குமோ? நாளைக்கு இவர மயக்கி இருக்கச் சொத்து பத்தெல்லாம் மடக்கிப்போட்டுட்டா நாங்கெல்லாம் என்ன செய்றதாம்? இன்னும் வீட்டுல அஞ்சு பொண்டுக இருக்கு அதுக்கெல்லாம் நல்லது கெட்டது யாரு பாக்குறதாம்? எனப் பேசிக்கொண்டே போனான் அந்தோனி. "அப்பு அப்புடியெல்லாம் ஒன்னும் நடக்காது. அவரு என்ன யோசிக்கிறாருண்டு எனக்குத் தெரியும். மனசப் போட்டுக் கொளப்பிக்காதிக. உங்க அப்பா. எப்பவும் ஒங்க அப்பாதான். ஒங்க சொத்துக்கு ஒரு பாதகமும் வராது." எனச் சொல்லிவிட்டு வயல் நோக்கி நடந்தார் சாமினாதன்.

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

அருளு பகுதி -7

 சாமிநாதன் சொன்னவையெல்லாம் உபகாரத்தின் மனதில் இடி இறக்குபவையாக இருந்தன. அதிலும் இறுதியில் சொன்ன விஷயத்தை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒரு பொண்ணு எப்புடி இம்புட்டுத் தின்னக்கமா இருப்பா? ஆத்தே வேசமா இருக்காளே இந்தப்பாவி. எப்புடி அவளால இப்புடி யோசிக்க முடுஞ்சுச்சு. அவ மனுசப் பிறவி தானா இல்ல... இப்படி தனக்குள் புலம்பிக்கொண்டே நடந்தாள் உபகாரம். அந்த சீனி பற்றி நினைத்தாலே நெஞ்செல்லாம் பயமும், கோமட்டலும் கலந்த ஒரு உணர்வு தன் உடல் எங்கும் பரவுவதை உணர்ந்தாள். ஆம் சீனி அந்த சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அனைவரும் அஞ்சும் கொடூர அரக்கன். அந்தப் பகுதியில் உள்ள பெரிய பஞ்சாயத்து அனைத்திலும் அவன் மேல் பிறாது உண்டு. ஆனால் அவன் எந்தப் பஞ்சாயத்து கூட்டினாலும் போக மாட்டான். யாருக்கும் அஞ்ச மாட்டான். தொடக்கத்தில் சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபட்டவன் பின் பெரிய கொள்ளைக்காரன். அதி காலையிலும், இரவிலும் வியாபாரத்துக்கு போகிறவர்கள் யாராய் இருந்தாலும் மடக்கிப் பிடித்து உள்ளது அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு விரட்டுவான். தர மறுத்ததால் அவ்வளவுதான் உயிரைக் குடித்தது விடுவான். எந்த பாவததிற்கும் அஞ்சாதவன். 

   கொள்ளையடித்த பணத்தில் வட்டிக்கு வேறு விடுவான். வறுமையின் பிடியில் உள்ளோர், நெருக்கடியில் உள்ளோரைத் தேடி சென்று கடன் கொடுத்து திருப்பித் தர இயாலதவர்களை தான் அடிமையாக்கி அவர்கள் வீட்டில் உள்ள பெண்ணை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து கொள்வான். இதுவரை எட்டு பெண்களை திருமணம் செய்து உள்ளான். அத்தனை பெண்களும் தற்கொலை செய்து இறந்து விட்டதாக கூறுவாரகள். கடந்த மாதம் எட்டாவது மனைவியும் இறந்த செய்தியை பக்கத்து வீட்டு ராக்கி வந்து "ஆத்தா சேதி தெரியுமா? அந்த ஆனந்தூரு சீனிப்பய இருக்காங்களா. அதான் அந்தக் கொள்ளக்காரச் சண்டியன். அவன் எட்டாவது கட்டுன பொண்டும் நாண்டுக்குட்டு செத்துப் போச்சாம். எந்த்தா அவம் பொஞ்சாதிக மட்டும் இப்பிடி நாண்டுக்குட்டே பொராலுக எனக் கேட்கையில் , "அடி யாருடி இவ ஒரு கிருக்கச்சியாட்டம் கேள்வி கேட்டுகிட்டு, அவளுகளாவா சாகுறாளுக. இவனுக்குப் புது மாப்பிள்ளையாக பவுசி வந்துச்சுன்னா இருக்கவளத் தூக்கி தொங்க விட்டுருறான். பொம்பள உசுரு அப்புடி சல்லிசாப் போச்சு இவனுக்கு." என சொன்னதை நினைத்துக்கொண்டாள். அவ்வளவு மோசமானவன். 50 வயதாகும் அவன் இப்போதெல்லாம் கொள்ளை அடிப்பது இல்லை. வட்டிக்கு விடுவது மட்டும் செய்கிறான். கூடாத பழக்கமெல்லாம் வைத்து இப்போது வராத நோயெல்லாம் வந்து ஒரு சீக்க்காலியாக வாழ்கிறான். அப்படிப்பட்ட சீனிக்கு அருளைக் கட்டி வைக்க எப்படிதான் அவளுக்கு மனம் வந்தது? எனப் புலம்பிக்கொண்டு ஓர் வந்து சேர்ந்தாள் உபகாரம்.

     எப்போதும் கோவிலுக்கு சென்று வந்ததும் தன்னை வந்து பார்க்கும் உபகாரம் இன்று தன்னைக் கண்டு கொள்ளாமல் குடிசைக்குள் நுழைவதை பார்த்துக்கொண்டு இருந்த அருளு வேகமாக ஓடி, "அப்பாயி என்ன என்னயப் பாத்தும் பாக்காத மாதிரிப் போற. நீ வழக்கமா மக்கானாளைக்குத்தான் வருவ இன்னைக்கென்ன அதுக்குள்ள வந்துட்டா? வண்டி கட்டிப் போனவுக கூட இன்னும் வரக்கானாம். நீ முந்தீட்டு வந்துட்டா. திருவிழா முடுஞ்சுடுச்சா? அட நான் பேசிட்டே இருக்கேன் நீ ஏன் மூச்சு விடமாட்டுற. வாய்க்குள்ள கொழுக்கட்டகானும் வச்சு இருக்கியா? அட பேசுத் தா." இப்படி அவளிடம் பேச முயன்ற அருளு, "போட்டது பொட்ட மெனிக்குக் கேட்க்கு. உனக்கு என்ன அங்க கத வேண்டியிருக்கு.?  வாடி கழுத. மதினி குரல் கேட்டதும் மின்னலென ஓடி மறைந்தாள் அருளு. அவள் போனபின் அவள் நின்றிருந்த இடததையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் உபகாரம். 

    "இந்தக் கிறுக்கோலிக் கழுத ஏன் இப்புடி பயந்து சாவுது அவளுக்கு? அவ என்ன அம்புட்டுப் பெரிய மனுசியா? சரி முன்னால தான் மாடாட்டம் உழச்சு, ஓடாட்டம் தேஞ்சுச்சு இப்பவாச்சும் சத்த நிம்மதியா ஒக்காரளாம்ல.இப்புடிக் கடந்து சீப்படுதே. இவதான் சத்த உடுறாளா? சரி இப்ப கூப்புடு கொறளுக்கு ஓட இந்த அருளுக் குட்டி இருக்கு. இன்னும் இன்னையோட ஏழு நாள்தான். அவ கண்ணாலங்கட்டி போய்ட்டாண்டா இவ என்ன பன்னுவா? எப்புடி வேலை வெட்டிப் பார்த்து மாடுகன்னு மேச்சு, இவ அசைய மாட்டாளே? அவ போன மக்கானாத்து தான் இருக்குடி உங்கத. " என சிந்தித்துக்கொண்டே மாட்டுக்குத் தண்ணிகாட்டிக்கொண்டிருந்த அருளை இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள் உபகாரம்.

-------- தொடரும் ----------------

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

அருளு பகுதி - 6

    உபகாரத்தம்மாளின் கோபப்பார்வையின் பொருள் புரிந்தவராக அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானார் சாமிநாதன். ஆனால், ராசாமணி அவரை விடுவதாக இல்லை. இங்க வாங்கையா வாங்க. பாத்துட்டு பாக்காத மாதிரி மூஞ்சியத் திருப்பிட்டு போறீக. வந்து ஒருவாய் சாப்பிட்டு போங்க என விடாப்பிடியாக அழைத்து அவருக்கும் உபகாரத்தம்மாளுக்கும் இலை போட்டு பரிமாறிக்கோண்டே, "இந்தா இந்த பெரிய மனுஷனுட்டத்தான் சொல்லி பேச அனுப்புனேன். எப்புடியாச்சும் பேசி முடிச்சிரும்னு. ஆனா இரேண்டு நாள்ல்யே வந்து கைய விரிச்சுட்டாரு. இங்க பாருங்கய்யா. நான் ஒன்னும் ஒன்னுமத்தவ இல்ல. நெலங்கர கெடக்கு. பொட்டைய எல்லாம் கட்டிக்குடுத்து சீர் செனத்தி அத்தனையும் முடிச்சுப்புட்டேன். மூத்தகுட்டிக்கு மட்டுந்தான் பொண்ணு. அதுவும் பெரியமனுசியாகி மாமஞ்சீரெல்லாம் செஞ்சு முடிச்சாச்சு. நல்ல பொண்ணா பார்த்து வெரசா முடிங்க." மூச்சுவிடாமல் கொட்டி முடித்தால். உபகாரம் காதுகளில் எதுவும் விழவில்லை. ஏன் நம்ம இரக்கம் வேறு வரணே வரலைன்னு பொய் சொல்லனும். இவ கோவக்காரிதான். படபடண்டு பேசி வம்பவாங்கிக் கட்டுறவதான். ஆனாலும் நல்ல மனசும் உண்டு. தயில்லாத புள்ளையின்னா கொஞ்சமாச்சும் பாத்திருப்பா. மவங்கொறகாரெங்கிறதால வர்றவளை நல்லாவே பார்த்துப்பா. ஆனாலும் இவ மவனுக்கு ஏன் வேண்டாம்னு சொன்னா? வீட்டிலேயும் யாருட்டயும் இதப்பத்தி ஒரு வார்த்த மூச்சு விட்டதா தெரியலையே ஏன்? இந்தக் கேள்விகளோடே, அமர்ந்த கடைமைக்காக இரண்டுவாய் உண்டுவிட்டு எழுந்தாள். அதற்குமேல் நிலை கொள்ளாதவலாக காரணத்தை இரக்கத்திடமே கேட்டுவிடுவது எனத் தீர்மானமாக ஊரை நோக்கி நடந்தாள்.

    வயல் வழியாக நடந்தாள் சட்டென சென்றுவிடலாம் என நினைத்தவளாக ஒர்ரணி மேட்டில் ஏறி நடக்கத்தொடங்கினாள். யாரோ தன்னை அழைப்பதாக உணர்ந்து, திரும்பிப்பார்த்தாள். கொஞ்சம் தூரத்தில் ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டு இருந்தார் சாமிநாதன். உபகாரத்தம்மாளுக்கு அவரிடம் பேச விருப்பம் இல்லைதான். ஆனாலும் அவர் வரும் வேகத்திற்கு எப்படியும் தன்னை வந்து பிடித்துவிடுவார் என நினைத்த உபகாரம், 'என்ன?' என்பதாக திரும்பி நின்று கோபமாக முறைத்தாள். விருவிருவென கம்மாக்கரையில் ஏறிவந்த சாமிநாதன், "என்னத்தா பார்வையிலேயே எரிச்சுப்புடுவ போலையே?  ஏம்மால என்ன கோவமாத்தா? எனக்குத் தெரிஞ்சவரை நான் ஒம்பேத்திக்கு நல்லதுதான் செஞ்சுருக்கேன். ஆனா நீ என்னடாண்டா ஏதோ காங்கக்கூடாதவனைக் கண்டதாட்டம் கண்ணுலையே கொல்லிக்காட்ட நீட்டுற." எனக் கூறிவிட்டு உபகாரத்தம்மாளின் பதிலுக்காக நின்றார்.

    ஆனால், அவர் பேச்சு உபகாரத்தம்மாளின் கோபத்தைக் கிளறுவதாகவே இருந்தது. "நல்லது செஞ்சியா? என்ன நல்லதுய்யா செஞ்ச? இப்புடி பச்சமண்ணப் புடிச்சு பாழுங்கெணத்துல தள்ளுறதுதான்  ஒங்க ஊர் பக்கம் நல்லதும்பாகளா? இந்தா இப்ப பாத்த ராசாமணி கோவக்காரிதான், ஆனா கொஞ்சமாச்சும் நெஞ்சில ஈரங்கொண்டவ. அவமவனுக்குக் கேட்டுருக்கா? எனக்கு இந்த சேதி தெரிஞ்சு இருந்தா சட்டுண்ணு கட்டிகொடுத்து இருப்பேன். அவ மவங்கிறுக்கந்தான். ஆனா எம்பேத்தி கொணத்துக்கு அவ எல்லாத்தையும் மாத்தி அவன ராசாவாட்டம் ஆக்கி இருப்பா. நீரு உம்ம ஊர் பெரிய மனுஷனுக்கு வேணுமுன்னு, இராசாமணி கேட்ட சேதிய எங்கக்கிட்ட சொல்லாமலேயே மறச்சுட்ட. காரியக்காரரையா ஆனாலும்..." என மேலும் ஏதொ சொல்ல வாயெடுத்தவளை இடைநிறுத்திய சாமிநாதன், "ஆத்தா செத்த இருங்கத்தா. என்னா நடந்துவச்சுண்டு வெவரம், வெவெகாரம் தெரியாம இப்புடி பொரிந்தா எப்புடி? ஆமா, இந்த இராசாமணி மவனுக்கு உம்பேத்தியக்கேட்டது உண்ம தான். அது தட்டிப் போனதும் உண்ம தான். ஆனா அத நாந்தட்டலத்தா. நானும் உன்னாட்டந்தான் நெனச்சேன். சுத்திமுத்தி விசாரிக்காம நான் எந்த வீட்டு கல்லியாண சேதில்லையும் தலையிடுறது இல்ல. அப்புடி உம்பேத்தி பத்தி கேக்கயில எல்லாம் நல்ல விதமாச் சொன்னாக, கொணமான பொறுமையான பக்தியான பொண்ணு கிறுக்குப்பயல எப்புடியும் ஒரு ஆளாக்கிரும்னுதான் நெனச்சேன். உம்பேரனப் பாத்துக்கேட்டேன். எம்பொஞ்சாதிட்டக் கேளுங்கன்னுட்டான்.  சரின்னு அவளப் புடிச்சுக் கேட்டா மக்கானாத்து அது ஆத்தா வீட்டுக்கு வரச்சொல்லுச்சு. நானும் சரின்னு போனேன்" என்ற சாமினாதனை இடைமறிச்சு "ஏன் அவ ஆத்தா வீட்டுக்கு கூப்பிட்டா? இங்குக்கு மாளிகையாட்டம் வீடு கெடக்கையில அங்கெனப் போயிதான் பேசனுமாக்கும். யார்வீட்டு சமாச்சாரத்த யார்வீட்டுத் திண்ணையில பேசுறது."  என படபடத்து விட்டு சாமிநாதன் தொடர இடம் விட்டாள்.

    " நானும் மொதல அப்புடித்தான் ஆத்தா யோசிச்சேன். அப்புறம் கல்யாணப் பேச்சுங்குறதால அடுத்தவுக யாரும் கலைச்சிருவாகன்னு அங்க வரச்சொல்றாகன்னு நெனச்சுப் போனேன். போய் நான் சொன்னதும் ஒரேம்ட்டா வேண்டாம்னுட்டா. நானும் பையன் புத்தி மட்டுன்னு யோசிக்கிறியான்னு கேட்டா அது இல்லைங்குறா உம்பேரம்பொண்டாட்டி."  அது இல்லையா, அப்புறம் வேற எதுக்காம் வேண்டாம்னா?" என விழி விரிய கேட்டாள் உபகாரத்தம்மாள். "அதுதான் எனக்கு  ஆச்சர்யமாப்போச்சு. அப்புறந்தான் அவ ஏன் உங்க வீட்டுக்கு வர வேண்டாம்னு சொன்னாண்டு புரிஞ்சுச்சு. ஆமாம் உம்பேரெம் பொஞ்சாதிக்கு யாராத்தா இரக்கம்னு பேரு வச்சா ஆத்தாத்தா இம்புட்டு மோசமானவளா இருக்கா." விஷயத்தைச் சொல்லாமல் சாமி நாதன் பேசிக்கொண்டே இருந்தார். பொறுமையில்லாதவளாக, "அட அவ பேருபத்தி இப்ப என்ன வெசாரிப்பு வேண்டிக் கடக்கு. அப்புடி அவ என்னதான் சொன்னா? அதச்சொல்லுப்பு மொதல்ல" என்றாள் உபகாரம். அவளுக்கு மாப்புள்ளை மட்டும் வெவரங்கெட்டவனா இருந்தா போறாதாம். மாப்புள்ளை அப்பனாத்தாளும் முட்டாப் பயமக்களா இருக்கனுமாம். இல்லாட்டி யாரும் அத்த அனாதப்பயலா இருக்கனுமாம். இப்ப அந்த ராசாமணி மவனக்கட்டுனாக்க அவ மவனுக்குக் கூறுவாறு தெரியாது.  ஆனா அவன் ஆத்தா? அவ ம்புட்டு வெவரக்காரி. அதுனால அவ சீர் செய்யி, சொத்தக்குடு. அவ அத்தாவுட்டு நகையக்குடுன்னு கேட்டு அரிப்பாளாம். அதுனால யாரும் இல்லாத அனாதப்பயலா கூறுவறு இல்லாத கிறுக்கு, மண்ணாந்து பயலா இருந்தா சொல்லுங்கன்னுட்டா." என்றார்.

    சாமிநாதன் பேசியதைக்கேட்டு அதிர்ந்து போனாள் உபக்காரம். இம்புட்டு வெசமா அவள். ஏதோ கோவக்காரின்னு தானே நான் நெனச்சேன். இப்புடி ராட்ட்சசியா, வெனையா என் வீட்டுக்குண்டு வந்து வாச்சுருக்காளே எனக் கலங்கிப்போனார். ஆனாலும் சமாளித்துக்கொண்டு, " அது சரிய்யா வேண்டாமுன்னா நீரு பேசாமப் போக வேண்டியது தானே. அது என்ன அந்த இளங்கொடிய உளுத்தக்கட்டையில சுத்துனாப்புல எம்பேத்திய இப்புடி கொண்டோயி முடிச்சுப்போட்டுப்புட்ட?"  என்றாள். உடனே சாமிநாதன், "இல்லத்தா மக்கா நாத்து திரும்பப் பேசிப்பாப்போம்னு அவ ஆத்தா வீட்டுக்குப் போனேன். அது சரிப்படாதுன்னு ஒரே வெட்டா வெட்டுனது மட்டுங்காணாதுன்னு அந்த ஆனந்தூரு சீனிப்பய இருக்கன்ல அவனுக்குக் கட்டிக்கொடுக்கலாம்னு ரோசனை இருக்குதுன்னும், அவுகளுட்டக் கொஞ்சம் கேட்டுச்சொல்லொன்னும்  சொன்னா. எனக்குன்னா பக்குன்னு ஆயிப்போச்சு. நல்ல புள்ள, பக்தியான புள்ள உம்பேத்தி அதக்கொண்டுபோயி அப்புடி தள்ள எனக்கு மனசு இல்ல. நான் மாட்டேன்னு சொன்னா இன்னொருத்தருக்கிட்ட விசாரிச்சு அத ஆக வச்சுருப்பா அந்த எரக்கம். அதான் நான் முந்திக்கிட்டு ஐயாவப்பாத்தி சொல்லி அவுகள மாத்திவுட்டேன். இப்ப சொல்லு ஆத்தா நான் செஞ்சது தப்பா?" என்றார். இல்லை எனத் தலையாட்டிக்கொண்டே முந்தானையால் வாயைப் பொத்திக்கொண்டே விக்கித்து வரும் அழுகையையும் கேவலையும் விழுங்கிக்கொண்டு தளர்ந்து போய் தன் நடையைத் தொடர்ந்தாள் உபகாரத்தம்மாள்.

----------------------------------தொடரும்----------------------------------------------------------

    

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

அருளு பகுதி -5


 அருளுக்கும் ஐயாவுக்கும் திருமணம் பேசி இரண்டு நாட்களாகிவிட்டன. அருளின் அண்ணன் சூசை முத்துவுக்கு எப்படியாவது தகவல் தெரிவிக்க எண்ணிய உபகாரத்தம்மாள் கடைசியாக அவன் எழுதிய கடிதத்தையும் கடிதம் அனுப்புவதற்குத் தேவையான பணத்தையும் இரண்டு நாட்களாய் இடுப்பில் கட்டிக்கொண்டு அலைகிறாள். இன்னும் சரியான ஆள் அமையவில்லை. உபகாரத்தம்மாள் பொதுவாக பக்கத்து ஊர்களில் விசேஷமாய் நடக்கும் கோவில் திருவிழாக்களுக்கு கட்டாயம் சென்றுவிடுவாள். அதிலும் நாற்பது மைல் தொலைவிலுள்ள ஓரியூர் திருவிழாவுக்குச் செல்ல ஒரு ஆண்டும் தவறியதே இல்லை. அதிலும் இந்த ஆண்டு அவள் உயிருக்கு உயிரான பேத்திக்குத் திருமணம் வேறு. அவளின் வாழ்க்கையைக் குறித்து உபகாரத்தம்மாள் மனதில் உள்ள கலக்கங்களையெல்லாம் ஆண்டவனின் பாதத்தில் இறக்கி வைக்கக் கிளம்பினாள்திருவிழா நாளைக்குத் தான். வண்டி கட்டிச் செல்பவர்கள் அதிகாலையில்தான் கிளம்புவார்கள். பாதயாத்திரையாக போவோர் மட்டும் முதல் நாள் மாலையிலேயே கிளம்பிவிடுவர்

உபகாரம் கேட்டாள் வண்டியில் செல்பவர்கள் தட்டாமல் கூட்டிச் செல்வர். ஆனால் அவளுக்கோ நடந்து போகத்தான் பிடிக்கும். பாத யாத்திரையாக செல்பவர்கள் கலைப்புத் தெரியாமல் இருக்க கதை பேசி பாட்டுப்பாடி கலகலப்பாக செல்வர். ஆனால் உபகாரம் அது எதிலும் கலந்துகொள்ளவில்லை. கல் முள் இருட்டு எதையும் பொருட்படுத்தாமல் அமைதியாக பக்தியாக நடந்தாள். யாரோடும் ஒரு வார்த்தை கூட பேசாமல் கையில் பிடித்த செபமாலையை உருட்டியபடி வேகமாக நடந்து அதிகாலையிலேயே ஆலயத்தை அடைந்தாள். எங்கு பார்த்தாலும் மனித தலைகள். ஒரு பக்கம் இரவு முழுவதும் அடைக்கப்படாத நேற்று புதிதாய் முளைத்த திருவிழா கடைகள், மற்றொரு புறம் நேர்த்திக் கடனுக்காக முடியிறக்கும் கூட்டம். இன்னும் ஒருபுறம் வேண்டுதலுக்காக ஆடு கோழி நேர்ந்துவிட்டு, அதை வெட்டி உறவுகளோடு கூடி கறிவிருந்து சமைப்போர். இவர்கள் யாரோடும் கலக்காமல் நேராக கோவிலுக்குள் சென்றாள் உபகாரத்தம்மாள். அவளுக்குத் தெரியும் அவளது உறவினர்களும் தெரிந்தவர்களும் இந்த வளாகம் முழுவதும் கூடி இருக்கக்கூடும். யார் கண்ணிலாவது பட்டால் பின் மாலை வரை கோயிலுக்குள் நுழைய முடியாது என்று. எனவே வந்த வேலையை முடிப்போம் என்று கோவிலுக்குள் நுழைந்தவள் மணிக்கணக்கில் முழந்தாள் படியிட்டு கண்ணீர் விட்டு உருகி செபித்தாள். சாதாரணமாக அவள் செபிக்கும் போது ஊருக்காக, உலகுக்காக, தன்னிடம் செபிக்கக் கேட்டோர் என பலருக்கா செபிக்கும் உபகாரம் இன்று அருளுக்காக மட்டும் செபித்தாள். உண்மையில் அவளுக்கு என்ன செபிப்பது என்றே தெரியவில்லை. ஆனாலும் ஆண்டவா இந்த அருளுக்குட்டிய காப்பாத்துங்க. அப்பனாத்தா இல்லா புள்ளக்கு நல்லவழி காட்டுங்க என மனதுருகி செபித்தாள். அப்படியே எவ்வளவு நேரம் இருந்தாள் என அவளுக்கே நினைவு இல்லை. மனம் அனைத்தையும் கடந்து இருந்தாலும் உடல் அப்படி இருக்க விடுவதில்லையே. பசி அடி வயிற்றைப் பதம் பார்க்க ஆரம்பித்தது. சரி ஏதாவது சாப்பிட்டு வரலாம் என கோவிலுக்கு வெளியே வந்தாள். ஏய் கெழவி என்ன கூப்புட கூப்புட பேசாம போற. உம் பேத்திக்கு மாப்புள்ள அமஞ்ச மெதப்புல போறீயோ குரல் கேட்டு திரும்பிய உபகாரத்தம்மாள் ஒரு நொடியில் உறைந்துவிட்டாள்.

                      சத்தம் வந்த திசை பக்கம் பார்க்கையில் அங்கே இராசாமணி நின்றிருந்தாள்அவள் உபகாரத்திற்கு உறவுக்காரிதான்கொஞ்சம் வாய்த்துடுக்கானவள்அனைவரையும் எடுத்தெரிந்து பேசுவாள்அதனால் உபகாரத்திற்கு அவளோடு அவ்வளவாக ஒட்டுதல் இல்லைதவிரவும் உபகாரம் எதையும் முகத்திற்கு நேரே பேசக்கூடியவர்அதனால் ஏதாவது பேசி கோவில் தளத்தில் சண்டை வந்துவிடக் கூடாது என நினைத்து அவளைத் தவிர்க்கப் பார்த்தாள்ஆனால் அவள் விடுவதாக இல்லைஇந்தா கெழவி ஒனக்கு காது மழுங்கிடுச்சாகூப்புடுறது கேட்கல. என அவளை மடக்கிநான் இன்னைக்கு கெடா வெட்டிருக்கேன்வா வந்து ஒரு வாய் கஞ்சி குடிச்சுட்டுப் போ என உரிமையாக அழைத்தாள்அதற்கு மேல் அவளைத் தவிர்க்க இயலாத உபகாரம்ஏட்டி என்ன விசேசம்எதுக்கு இந்த கெடா வெட்டுஎதுவும் வேண்டுதலா? எனக் கேட்கஇல்லத்தா ஒரு வேண்டுதல் நெம்ப நாளா தீக்காமலே கெடந்திச்சுஅது நடந்து எப்புடியும் பாஞ்சு இருவது வருசம் இருக்கும்எங்கடேசி மவன் ராசா இருக்கன்ல அப்ப அவன் சின்னப் பயஇங்க கோயிலு திருவிழாவுன்னு வண்டி கட்டி கெளம்பியாரோம்இவன் செத்த நேரம் ஒரு எடத்துல இருப்பேனான்னு ஆடுறான்வண்டியில முன்னால இருந்து பின்னாலபின்னால இருந்து முன்னாலன்னு ஆட்டமா ஆடிப்புட்டான்நானும் எம்புட்டோ சொல்லிப் பாத்தேன்அவன் அடங்குறாப்புல தெரியலநான் ஏதோ ஆத்தரத்துல உங்காலு வெளங்காம்ப் போவாதான்னு ஒரு வெசவு வெஞ்சேன்அம்புட்டுதான் ஆடிக்கிட்டு இருந்தவன் சட்டுனு ஒக்கீந்துட்டான்நானும் சரி அடங்கிட்டான்னு கோயிலுக்குக் கூட்டியாரேன்கோயிலு வாசல் வந்ததும் எறங்குயாங்குறேன்அவன் இத்தினி அசையலஅவன் காலு உண்மையாலுமே வெளங்காம போயிடுச்சுஎனக்குன்னா உசுரே போயிருச்சு ஒத்தெக்கு ஒத்தன்னு கடேசியா ஒரே ஆம்புளப் புள்ளயப் பெத்து இப்புடி பாழாக்கிப்புட்டோன்னு ஒரே கவலைஅவன எங்கையால தூக்கியாந்து கோவில் வாசல்ல போட்டு அருளானந்தையா எம்புள்ளெக்கி அவம்புட்டு காலக் குடுத்துருமைய்யாநான் ஒங்கோயில் திருவிழாவுல கெடா வெட்டுறேன்னு கண்ணீர் விட்டு கதறுனேன்ஒரு வழியா கோயில் விட்டு கெளம்புறப்ப எம்புள்ள கால் சரியாகிடுச்சுஅவனும் காளை கணக்கா வளந்துட்டான்ஆனால் நேத்திக்கடன் மறந்து போச்சுஇப்ப அவனுக்கு கல்யாணம் பண்ணலாமுன்னு பொண்ணு பாத்தா ஒன்னும் அமைய மாட்டுதுஏன்டான்னு யோசிக்கும் போதுதான் ஒரு நேத்திக் கடன் பாக்கி வச்சது தெரிஞ்சுச்சுஅந்த கொறய மனசுல வச்சுட்டுதான் நான் குடுக்கலைண்டு கோலத்தில் எம்புள்ளக்கு பொண்ணு அமையாம தடுக்குதுண்டு தோனுச்சுஅதான் கெடா வெட்டியாச்சு. என மூச்சு விடாமல் பேசினாள்.



இராசாமணி பேசியதையெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த உபகாரத்தம்மாள் சொன்னாள்ஏட்டி நமக்காக உசுரயே கொடுத்த ஆண்டவன்டீ அவருஒரு கெடாக்கு ஆசப்பட்டு தான் படைச்ச புள்ளகள கஷ்டப்படுத்திப் பாப்பாராநீ ஒம்புள்ளய ஒழுங்கா வளக்கலஅவன் வேலவெட்டிக்கு போகாமவீட்டோட மண்ணாந்து மாதிரி கெடந்தா எந்தப்பன் தம்பொண்ணக் குடுப்பாககொறைய ஒம்மேல வச்சுக்குட்டு கடவுள் மேல பழி போடுறியே? எனக் கேட்டார் உபகாரத்தம்மாள்அதெல்லாம் எம்புள்ள நல்ல புள்ளதான் கெளவிகொஞ்சம் கருத்து இல்லாம இருக்கான்கலியாணம் கெட்டினா எல்லாஞ் சரியா போகும்அதுக்கு நல்ல புள்ளயாதேடுனேன்ஒம்பேத்தியக்கூட கேட்டு விட்டேன்ஒம்மருமக தான் மாட்டேன்னு விடாப்புடுயா நான்னுடுச்சு என்றாள்இதைக் கேட்டதும் உபகாரத்தம்மாவுக்கு அதிர்ச்சியாக இருந்ததுஇதுவரை வேறு வரனே வரவில்லை என அருளை அவளது மதினி குத்திக் காட்டுனாஆனால் அது உண்மையில்லை என அப்போதுதான் அவளுக்கு விளங்கியதுஅப்படியானால் அருளை இரண்டாம் தாரமாக பேசி முடிக்க என்ன காரணம் என யோசித்துக் கொண்டிருக்கையில் இராசாமணி யாரையோ கையசைத்து அழைப்பதை உபகாரம் கவனித்து திரும்பிப் பார்த்தாள் அங்கே சாமிநாதன் நின்றிருந்தார்ஆம் அருளைப் பெண் பார்க்க ஐயாவோடு துணையாக வந்திருந்த அதே சாமிநாதன் நின்றிருந்தார்உபகாரத்தைப் பார்த்ததும் அவர் கையெடுத்துக்  கும்பிட உபகாரத்தம்மாளோ பதில் வணக்கம் கூட சொல்லாமல் கோபமாக பார்த்தாள்.

……………………………தொடரும்.………………………..



 

Featured Post

மொழி வரலாறு - 2

  பேச்சாலும் எழுத்தாலும் மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்கும் கருவி எது? மொழி மொழியின் அமைப்பை விளக்குவது யாது? இலக்கணம் மொழியின் இ...